Thursday, January 21, 2010

நான்காவது கச்சித் திருவகவல் - பட்டினத்தார்



திருமால் பயந்த திசைமுக னமைத்து
வருமேழ் பிறவியு மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகா தவமே
மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும் 5

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,
முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10

துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும்
தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென வியம்பும்
நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15

மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25

அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பு மூத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30

அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத் 40

தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்
தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45

காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,
நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50

இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;
திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
புண்ணிது வென்று புடவையை மூடி
உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55

மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60

மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்
இத்தை நீங்க ளினிதென வேண்டா
பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65

முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70
- - - - - - - - - - - - - - -- - - - -
திருச்செங்கோடு

நெருப்பான மேனியர் செங்கோட்டி லாத்தி நிழலருகே
இருப்பார் திருவுள மெப்படியோ இன்னமென்னை யன்னைக்
கருப்ப சாயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
திருப்பாதமே தருமோ தெரியாது சிவன்செயலே.
- - - - - - - - - - - - - - - - - - - - -
திருவொற்றியூர்

ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1

சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே. 2
- - - - - - - - - - - - - - - - -
திருவிடைமருதூர்

காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. 1

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே. 2
- - - - - - - - - - - - -- - - - - - - -
திருக்கழுக்குன்றம்

காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த
வீடோ? புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.
- - - - - -- - - - - - - - - - - - - -
திருக்காளத்தி

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 1

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு; பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு? அத்தன்மையைப்போ
உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டுஉனைப் பணியும்
என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி யீச்சுரனே! 2

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3

முப்போது மன்னம் புசிக்கவுந் தூங்கவு மோகத்தினாற்
செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவன்விடு
மப்போது கண்கலக்கப் படவும் வைத்தா யையனே,
எப்போது காணவல்லேன்? திருக்காளத்தி யீச்சுரனே. 4

இரைக்கே யிரவும் பகலுந் திரிந்திங் கிளைத்துமின்னார்
அரைக்கே யவலக் குழியரு கேயசும் பார்ந்தொழுகும்
புரைக்கே யுழலுந் தமியேனை யாண்டருள், பொன்முகலிக்
கரைக்கேகல் லால நிழற்கீ ழமர்ந்தருள் காளத்தியே. 5

நாறுங் குதிரைச் சலதாரை தோற்புரை நாடொறுஞ்சீழ்
ஊறு மலக்குழி காமத்துவார மொளித் திடும்புண்
தேறுந் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு
ஏறும் பதந்தரு வாய் திருக்காளத்தி யீச்சுரனே. 6
- - - - - - - - -- - - - - - - - - ---
திருக்கைலாயம்

கான்சாயும் வெள்ளி மலைக்கரசே, நின்கழல் நம்பினேன்
ஊன்சாயுஞ் சென்ம மொழித்திடு வாய், காவூரனுக்காய்
மான்சாயுச் செங்கை மழுவலஞ் சாய வனைந்தகொன்றைத்
தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக்கொழுந்தே. 1

இல்லந் துறந்து பசிவந்த போதங் கிரந்துநின்று
பல்லுங் கரையற்று வெள்வாயுமாய், ஒன்றிற் பற்றுமின்றிச்
சொல்லும் பொருளு மிழந்து சுகானந்தத் தூக்கத்திலே
யல்லும் பகலு மிருப்பதென்றோ? கயிலா யத்தனே. 2

சிந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய்கையற்று
நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலி லென்றிருப் பேனத்தனை! கயிலாயத்தனே. 3

கையார ஏற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துணியைத்
தையா துடுத்து நின் சந்நிதிக்கே வந்துசந்ததமு
மெய்யார நிற்பணிந் துள்ளே யுரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா வென்று ஓலமிடுவது என்றோ? கயிலாயத்தனே. 4

நீறார்த்த மேனி யுரோமஞ்சிலிர்த், துளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே யுருகி, நின்சீரடிக்கே
மாறாத் தியானமுற் றானந்த மேற்கொண்டு மார்பிற்கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே. 5

செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயிலாயத்தனே. 6

மந்திக் குருளையத் தேனில்லை, நாயேன் வழக்கறிந்துஞ்
சிந்திக்குஞ் சிந்தையையான் என்செய்வேன் எனைத் தீதகற்றிப்
புந்திப் பிரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்
எந்தைக் குரியவன் காண் அத்தனே, கயிலாயத்தனே. 7

வருந்தேன் பிறந்து மிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயலஞ்செழுத்தாம்
அருந்தேன் அருந்துவ நின் அருளால், கயிலாயத்தனே. 8
- - - - - - - - - - - - - - - - - - -
மதுரை

விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பிப்
படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.

No comments: