Sunday, June 12, 2011

கவிதைகள் பெருந்தேவி

கடைசி மேசையில் ஓர நாற்காலியில்

ஊமத்தைக் குளிர் ஊடுருவ
சாக்ஸை நன்றாக மேலே இழுத்துவிடுகிறேன்
ஆண்களும் பெண்களும் சரவிளக்குகள் கீழே
நிழல்களின்றி நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள்
மெல்ல நடந்து
ஒருவனின் கையைப்பற்ற
விரைகின்றன கால்கள்
“மன்னிக்க வேண்டும்
நான் ஏற்கனவே ஒருத்தியோடு ஆடிக்கொண்டிருக்கிறேன்”
அப்படி யாருமில்லை என்கிறேன்
“இல்லை இங்கே பாருங்கள்”
அங்கே எவளுமில்லை என்கிறேன்
“இதோ இவளைத் தெரியவில்லையா”
நான் தான் இவள் என்கிறேன்
“குடித்திருக்கிறீர்களா?”
அவன் அவமானப்படுத்துவதாகக் கத்துகிறேன்
“நீ பைத்தியமென்று நினைக்கிறேன்”
யார் பைத்தியமென்று தரையை உதைக்கிறேன்
“நாம் சற்றுத் தள்ளி நகர்ந்து ஆடலாம், இந்தக் கிறுக்கு
நம் இன்பத்தைக் குலைக்கிறது”
நானன்றி எவள் உனக்கு இன்பத்தைத் தரமுடியும்?
“தள்ளிப் போ இல்லையென்றால் செக்யூரிட்டியைக் கூப்பிடுவேன்”
யாரையேனும் கூப்பிடு நான்தான் இவள்
இவள் இல்லை நான்தான் இவள்
நீ நீ என்றால் நான்தான் இவள்
ஒரு கணம் அவன் மறுப்பேதுமின்றி
என் கரங்களைத் தொடுகிறான் என்னிடுப்பை வளைக்கிறான்
“என்னாயிற்று, ஏன் எங்கோ பார்க்கிறாய்?”
கடைசி மேசையில் ஓர நாற்காலியில்
ஷூவைச் சரிசெய்தபடி நிமிர்கிறாள் ஒருத்தி
எங்களைப் பார்த்தும் பாராது பின்னர்
வெளியே நடக்கிறாள்.

o

இருவர் கொண்ட ஓர் உறவு

சட்டையிலிருந்து அவனை விடுவித்தாள்
அவன் புஜங்கள் மினுத்து அலர்ந்தன
நீ பஹுத் செக்சி
கருங்குழல் விளக்குகள் இவை
கூச்சப்பட்டான்
ஆறு பேக்குகளில் ஐந்து வந்துவிட்டிருந்தன
அடேயப்பா என்றாள்
என்ன பாதாமா போடறே
மீண்டும் கூச்சப்பட்டான்
மீசையில் பூத்த நுனிநரை
புதுபியரில் நுரை போலொரு துள்ளல்
இதுகூட நல்லாத்தான் இருக்கு
கூச்சப்பட்டான்
என்ன வெட்கம் என் கன்னுக்குட்டி
இறுக்கினாள் முன்னேறினாள்
நம் பரப்பிய புனைவுகளில் காலம்காலமாக
பெண்ணை ஆண் இறுக்குவதுபோல
பெண்ணிடம் ஆண் முன்னேறிக் காட்டுவதுபோல
நிசத்தில் இங்கே
அவள் வலுவில்
அவனையும் முன்னேற்றினாள்
கண்மூடாக் கலை
வித்தற்ற ஒரு புள்ளி
சின்ன நிறுத்தம்
இன்னும் கூச்சப்பட்டான்
பெண்ணிடம் மட்டுமே கூச்சப்படுவேன்
என்று அவளில் குழைந்தான்
அவள் பெண்ணா
யாருக்குத் தெரியும்
அவளுக்கும் வெட்கம் வந்தது
அவள் பெண்ணென்று அது வரவில்லை.

o

தனித்து

நெளிவிலும் சுழிவிலும்
நேரம் தொலைத்தும்
பார்வை தப்பியும்
நினைவற்ற ஒருவழியில்
நின்றும் நிற்காமலும்
ஓட்டமாய் நகர்கிறது
சின்னஞ்சிறு
மணி.

o

நேயம்

யாரையும் பிடிக்காத என்னை
யாரையும் பிடிக்கும் ஓர் உலகு துரத்துகிறது
சக்கரைக்குவியலில் மூச்சுமுட்டி
அழுந்திக்கிடக்கிறது ஓர் எறும்பு

கவிதைகள் ரவிசுப்ரமணியன்

செயற்கைக்கோள் சிகிச்சை

அதிகாரத்தின் குரலைக் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டதால்
ஒரு நாள் கேட்கவில்லை எனினும் துடித்துப் போவர் மக்கள்
மயக்கும் அதன் மதுரத்தில் சொக்கிக்கிடந்தனர்

அலுவலகங்களில், வீடுகளில்,
கடைத்தெருவில், சந்தைகளில்
கடற்கரையில், குளக்கரையில்
கோவில் வாசல்கள் உட்பட
அதன் கட்டளைகள் கேட்டபின்தான் விடியும்பொழுது

படிக்கச் செல்பவர்களும்
இதற்கு விதிவிலக்கில்லை
காற்றைப் போல் தவழ்ந்து வந்து
அனைவரது செயலையும் தீர்மானிக்கும் காரணியான
அதன் உள்ளடக்கக் சுருதியே வேதமானது எல்லோருக்கும்

எல்லா வலிகளுக்கும் மருந்தாக
எல்லா அவசங்களுக்கும் ஆறுதலாக
எல்லாத் தேவைக்கான தத்துவங்களாக
எல்லோரும் முணுமுணுக்கும்
எளிய மந்திரமாக மாறியிருந்தது அது

நண்பகல் நேரத்துத் தேநீரின்போது வடையாக
மதிய உணவின் ஊறுகாயாக
மாலைநேரச் சிற்றுண்டியின்
சன்ன உரைப்புக்குப்பின் ருசிக்கும் காப்பியாக
இரவு உணவுக்குப் பின்னான மலிவுப்பழமாக
மாறி மாறி உவகை தந்த அற்புதமது

சீமானுக்கும்
சாக்கடையின் மூடியில் படுத்துறங்கும் தோமானுக்கும்
அதுவே அமுது
ஓர் அசரிரீயின் வாக்கைப் போல
அதிகாரத்தின் குரலைக் கேட்டுச் சீரழியும் மக்களுக்கு
அதிகாரம் சதா
தங்களைப் பகடிசெய்யும் குரல் மட்டும் கேட்கவேயில்லை.

யார் காதிலும் விழாதவாறு
எல்லோரது காதுகளின் ஒரு மர்ம நரம்பை மட்டும்
எப்படிச் செயற்கைக்கோளின் லேசர் சிகிச்சையால் அறுத்தார்கள்
என்பதைத்தான் இன்னும் வெளிநாட்டு உளவாளிகளாலும்
கண்டுபிடிக்க முடியவில்லை.

கவிதைகள் மனோமோகன்

அரக்கனும் கதைகளும்

விடுகதைகளாலான அவளது சுருக்குப்பை
அவ்வளவு எளிதில் அவிழ்வதில்லை
இரண்டு வெற்றிலையோ ஒற்றை மண்பாக்கோ
குழந்தையின் கள்ளமற்ற சிரிப்போ
ஏதேனும் வேண்டும் ஒரு புதிரவிழ
அவளது கதைகளில்
இளவரசியைக் கடத்திப்போகும் அரக்கனின்
உயிர் எதிலிருக்குமென்று அவளுக்கு மட்டுமே தெரியும்
ஒருமுறை அது கிளியிலிருந்தது
ஒருமுறை வண்டியிலிருந்தது
ஒருமுறை சமுத்திரத்தின் அடியாழத்தில்
கடல்குதிரைகளால் பாதுகாக்கப்படும்
எலுமிச்சம் பழத்திலிருந்தது
ஒருமுறை தேடிச் செல்பவனின் கனவிலிருந்தது
ஒருமுறை
அதுவரை அவிழ்க்கப்படாத புதிரொன்றிலிருந்தது
ஒருமுறை
என் வீட்டுத் தேநீர்க் கோப்பையிலிருந்தது
இளவரசியை மீட்கப்போகும்
குதிரைவீரர்களால் நிறைந்த எனது தெருவில்
நேற்றைய தினம் அரக்கன் வந்து போனான்
இந்தமுறை அவன் கடத்திப்போனது இளவரசியையல்ல
இளவரசியைப் பற்றிய கதைகளை
விடியலில் எரிப்பார்களோ புதைப்பார்களோ
கதைகளைத் தொலைத்த பின்னிரவில்
அரக்கனைக் கொல்லும் சூட்சுமம் மறந்து
வெளிவாசலில் உறங்குகிறாள்
ஆயிரம் கதைகளாலான அந்தப் பாட்டி.

வால் தின்னும் பல்லி

இழக்கவியலாத வால் பகுதியில்
தனது மரணம் இருப்பதறிந்து
என்னை எதிர்கொள்ளும் கணங்களில்
தனது வாலைப் புசித்துவிடும்
சுவர்ப் பல்லி வடிவிலான அவதாரக் கதையை
உன்னைப் போலவே கதைகளோடு வாழ நேர்ந்த நான்
வால் தின்னும் கதையென்கிறேன்
நீயதைப் புராணமென்கிறாய்
யாரிடமும் சொல்லிவிடாதே
ஆப்பிள் தோட்டத்தில் சந்தித்த பெண் சாத்தானின்
நிர்வாணம் ரசித்த உலகத்தின் முதல் பெண்
தானொரு பெண்சுகியென உணர்ந்த கணத்தை
உண்டு செரித்தலும்கூட
அந்தப் பல்லிதான்

Thursday, April 14, 2011

கவிதைகள் - தேவதேவன்

கை கழுவுதல்


கைவிரல்களைச்
சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலும்
இடதுகை விரல்களுக்குக்
கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்
என்றார் அம்மா
கழிப்பறைக் கடன்களின்போது
இடதுகையினைச் சோப்பு தொட்டு
தூய்மையாக்கிக்கொள்ளும் பழக்கத்தை
அம்மா சொல்லிக்கொடுத்த முதல்நாள்
ஞாபகமிருக்கிறது.
அய்யய்ய அந்தச் சோப்பைப் பின் யார் தொடுவா
என அருவருத்து அந்தச் சோப்பையும்
சுத்தமாக்கிவைக்கும் பழக்கத்தை
என் துணைவியார்தான் இயற்றிவைத்தார்.
அன்று முதன்முறையாக ஒரு சோப்புக்கட்டி
என்னைப் பார்த்து நன்றியுடன்
கண்பனிக்க நெகிழ்ந்து நின்றதைக்
கண்டேன் நான்
எனது துணைவியாரின் நுண்ணுணர்வை
மறக்காமல் பாராட்டி நானும் நன்றி சொன்னேன்.
ஆனால் இடதுகை விரல்கள் தீண்டிக் கழற்றிச் சுழற்றி
தங்களைத் தாங்களே சுத்தப்படுத்திக்கொண்டு
சோப்பையும் சுத்தப்படுத்தியதைக் கண்டு
என் துணையின் விழிகளில் ஒளிர்ந்த
ஒரு திருப்தியையும் மீறி
ஏதோ ஒரு குறையுணர்வு
பாரமாய் அங்கே நிலவியது போலிருந்தது.
அதற்கு அடுத்தமுறை
அன்று அந்த இடதுகையின்
வேலைபாதியில்
மிகுந்த நட்புடன் குறுக்கிட்டு
அந்தச் சோப்பினை வாங்கி அமர்த்திவிட்டு
கொஞ்சம் சோப்புகொண்ட
தன் விரல்கள்கொண்டே
இடதுகையின் விரல்களைக் கழுவியது
வலதுகை.
அய்யய்ய என்று
இப்போதும் தோன்றிய சொற்கள்
ஆனால் சுருதி குன்றி மடிந்தன.
இதுவரை தங்கள் வாழ்நாள் கண்டிராத பிரியமுடன்
இரு கைவிரல்களும் கூடி
சோப்பினைக் கழுவி வைத்தபடி,
மேலும் மேலும் நெகிழ்ந்தொழுகும் நீரில்
தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு
அருகிலிருந்த துவாலையினை உருவி
தங்களை உலர்த்திக்கொண்ட காட்சி. . .

கவிதைகள் - எஸ். செந்தில்குமார்

நீங்கள் அந்தப் பெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
இந்தக் கோடைக்காலத்தில்
உங்களது காதல் வெற்றியடைய
எனது வாழ்த்துகள்.

அவள் காதலர்களுக்குச் செய்த துரோகத்தின் கதைகளைக்
கேட்டுத்தெரிந்துகொண்டிருப்பீர்களென நம்புகிறேன்.

அவளது காதலர்களைச் சமாதானம் செய்யும் பொருட்டு
நீங்கள் சில வாக்கியங்களை
மனத்தில் உருவாக்கியிருக்கிறீர்கள்
அது தேவையற்ற ஒன்றுதான்
என்றபோதிலும்
என்றாவது அந்த வாக்கியங்கள்
உங்களை நீங்களே சமாதானப்படுத்தத் தேவைப்படலாம்.

இந்தக் கோடைக்காலத்தில்
எந்தக் காதலும் தோல்வியில் முடிவதற்குச் சாத்தியமே இல்லை
இந்தக் கோடைக்காலத்தில்
எந்தக் காதலும் வெற்றியுடன் தொடங்குவதற்கான
சாத்தியங்களும் இல்லை

நீங்கள் கணிதவியல் மாணவனைப் போல
நிகழ்தகவு பற்றிய கற்பனையுடன்
அவளுடன் ஊர் சுற்றுவதாகச் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் அவளை முதலில் அழைத்துச் செல்லும்
இடம் குறித்து மிகுந்த சிரத்தையுடன் தேர்வுசெய்கிறீர்கள்
சில தகவல்கள் பெறும் பொருட்டு
அவளது அந்தரங்கமான தோழிகளிடம்
விசாரித்துக் கொள்கிறீர்கள்
எதன்பொருட்டோ பதற்றம் தொடர்கிறது உங்களுக்கு
அந்தப் பதற்றம்தான்
அந்த நிமிடம்தான்
உங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறது.

அப்போது ஒரு குறுங்கத்தியொன்றை
உங்களது தோல்பையில் வைத்திருக்க வேண்டும்
அல்லது டிபன்பாக்ஸில் விஷமிட்ட உணவை
வீட்டிலிருந்து கொண்டுவந்திருக்க வேண்டும்
இன்னும் அல்லது நீச்சல் தெரியாத நபராக இருக்க வேண்டும்

இந்தக் கோடைக்காலத்தில்
உங்களது காதலை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில்
ஒருவேளை டிபன்பாக்ஸ் உணவை
உங்களுடன் பங்கிட்டுக்கொள்ளலாம்

நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
குறுங்கத்தியால் தன் முன்னாள் காதலர்களைக் கொன்றுவிட
உங்களை ஏவிவிடலாம்
அல்லது அவளிடமிருக்கும் விஷமிடப்படாத அல்லது விஷம் கலந்த
உணவை முத்தங்களுடன் தரலாம்
கோடை ஒருபோதும் காதலர்களைக் கொன்றுவிடுவதில்லையென
நீங்கள் அவளிடம் சொல்லத்தயாராக இருக்க வேண்டும்
அப்போது அவள் கோடையின் இரு கன்னங்களைப் பிடித்து
முத்தமிட்டு வழியனுப்பிக்கொண்டிருக்கலாம்
நீங்கள் நடுவானத்தில் கோடையை ஒளித்துவைக்க விரும்பி
குறுங்கத்தியின் உதவியுடன்
நடுத்தெருவில் நின்று தாவித் தாவிக் குதித்துக்கொண்டிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த சில பெண்கள்

எனக்குச் சில பெண்களைத் தெரியும்
அவர்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன்

ஓடிப்போய் திரும்பியவர்கள்
காதலித்து தூக்கமாத்திரை உண்டு குணமாகி நடமாடுபவர்கள்
தற்கொலைக்குப் பிறகு உதிரிப்பூக்களைத் தொடுத்துக்கொண்டிருப்பவர்கள்
கருச்சிதைவுக்குக் காரணமறிய கோவில் கோவிலாகத் திரிபவர்கள்
கருவை அழிக்கும் பொருட்டு ரகசியமாக மருந்து உட்கொள்பவர்கள்
தன் மகளின் பூப்பை மறைக்கும் இளம்வயதுப் பெண்கள்
என்று சிலரை எனக்குத் தெரியும்.

இன்னும் சிலர் இருக்கின்றனர்
தங்களது கணவர்மார்களை
மது பாட்டிலில் விஷத்தைக் கலந்து கொன்றுவிடத் துடிக்கும்
பெண்கள்
இன்னும் சிலர் இருக்கின்றனர்
எங்கோ, எங்கோ, எப்படியோ, எப்படியோ.

நடைபாதையில் பிரியும் குறுக்குப்பாதைகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்னைச் சந்தித்தேன்
அவளுடைய முகம் பொலிவிழந்திருந்தது
கண்களில் துயரத்தின் நிறம் படர்ந்திருந்தது
யாரோ தன்னைப் பின்தொடர்வதாக என்னிடம் முறையிட்டாள்
நீ கருவைச் சுமந்துகொண்டிருக்கிறாயா
என்று கேட்டேன்
ஆமாம் என்றாள்
பிறக்காத குழந்தைதான் உன்னைக் கண்காணிக்கிறது என்று சொன்னேன்
அவள் அமைதியானவளாக என்னைக் கடந்து சென்றாள்.

நீண்டநாட்களுக்குப் பிறகு திரும்பவும் அந்தப் பெண்னைச் சந்தித்தேன்
அவளுடைய முகம் பூத்தப் பூவைப் போலிருந்தது
கண்களில் காமத்தின் ஒளி துளிர்ந்துகொண்டிருந்தது
யாரோ தன்னைப் பின்தொடர்வதாக என்னிடம் முறையிட்டாள்
நீ சமீபத்தில் யாரையேனும் காதலிப்பதென முடிவுசெய்திருந்தாயா என்று கேட்டேன்

அவள் பதில் சொல்லாமல் அமைதியாகக் கடந்து சென்றாள்.

இப்படியாகத்தான் நாங்கள் ஒருவரையொருவர் கடந்துசெல்வதும்
ஒருவரையொருவர் விசாரித்துக்கொள்வதும்
காலை நேரத்தில் நடைபாதைச் சந்திப்பில் வாய்த்திருக்கிறது

அவள் தன் காதலைப் பற்றி எதுவும் சொல்வதுமில்லை
நானும் எத்தனை முறை இழந்து மீண்டிருக்கிறேன் என்று சொல்வதுமில்லை.

Friday, March 25, 2011

சென்றது மீளாது ...சுப்ரமணிய பாரதி

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

Wednesday, March 16, 2011

மு. மேத்தா கவிதைகள்

வாழ்க்கை

பெட்டி படுக்கைகளை
சுமந்தபடி
ஒரு
பிரயாணம்

எப்போது சுமைகளை
இரக்கி வைக்கிரோமோ
அப்போது

சுற்றி இருப்பவர்கள்
நம்மை
சுமக்க தொடஙு கிறார்கள்


ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் - அமெரிக்கா
ஈராக் அழிந்து

சிதைந்த பிறகுதான்

தெரிந்தது

பேரழிவு ஆயுதங்கள்

எவர் கையில்

இருந்ததென்பது


வரலாறு
சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!

ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!

வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
புகன்றிடும் மூலங்கள்!