Saturday, January 3, 2009

தூக்கம் - கந்தர்வன்

"அதிகாலை எழுந்து வாசல் வந்தால்
ஈரக் குறுமணல் சித்திரம் வரைந்து
தெரு வற்றிய ஆறாய்க் கிடக்கும்

மழையா பெய்தது ராத்திரி என
வாயசையும் மெல்ல

கொடு வாயோடிய முகத்தில்
கண்களைக் கசக்கி பாயைச் சுருட்டையில்
மதுரைச் சித்தியின் குரல்
பட்டாசாலையில் சங்கீதமாய்க் கேட்கும்

சித்தியா வந்தது ராத்திரி என
வாயசையும் மெல்ல

தொழுவத்தில் அம்மா
வாளியும் வைக்கோலுமாய்த் திரியும்
அப்பா சிரித்த முகமாய்
ஓலைப் பெட்டியில் இளங்கொடி சேர்ப்பார்
லெச்சுமி கன்னா போட்டுச்சு என
வாயசையும் மெல்ல

சுடலை சாம்பல் பூசி உடுக்கையடித்து
குடுகுடுப்பைக்காரன் ஆங்காரமாய் வந்து
தெருவை நடுங்க வைத்துப் போனானென
பெரியம்மா பாதி வாய் திறந்து
பயந்தபடி சொல்லும்

குடுகுடுப்பையா வந்தான் ராத்திரி என
வாயசையும் மெல்ல

அடிக்கடி தெருவிலும் ஊருக்குள்ளும்
விடிகாலைப் பொழுதுகளில்
வீட்டு வாசல்கள் முன்
சங்கும் சேகண்டியும் கேட்கும்
சட்டடித் தீயும் பச்சை மூங்கிலும் தெரியும்

ராத்திரி எப்ப நடந்ததென
குடம் உடைக்கும் வரை
கேட்டுத் திரியும் கூட்டம்..."

No comments: