Sunday, November 11, 2012

வே. பாபு கவிதை


நான்கு இட்லிகளும்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலும்
முதல் இட்லியோடு
K தெருவின் 23ஆம் எண் வீட்டிற்குள்
அவன் நுழைந்தபோது
கோழிகள்
கூடையினுள் அடைந்துகொண்டிருந்தன
இரண்டாவது இட்லியோடு
போனபோது
அவை
குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தன
மூன்றாவது இட்லியோடு
போனபோது
அவற்றின் கண்கள்
கேமராபோல் சுழன்றுகொண்டிருந்தன
நான்காவது இட்லியோடு
தண்ணீர்ப் பாட்டிலையும்
எடுத்துச் சென்றபோது
அவை
அவனைப் பின்தொடர ஆரம்பித்தன

அப்பொழுதிலிருந்துதான்
நான்கு இட்லிகள்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலை
யார்
எடுத்துச் சென்றாலும்
அறம் அறம் எனக்
கோழிகள் கூவ ஆரம்பித்தன.

அகச்சேரன் கவிதை


அந்திக் கருக்கலில்
பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்
அந்திக் கருக்கலில்
மிதக்க ஆரம்பித்து விடுகிறது
என் நிச்சலனத் தனி ஏரி

அதில்
ஒரு பரிசல்
ஒரு துடுப்பு
உங்களை அழைக்கிறது
என் வற்புறுத்தலுக்குப் பிறகும்

இரும்பு ரேழிக்கு வெளியே
பேசத் துடிக்கும்
பைத்தியத்தின் கைபோல.

ஹெச். ஜி. ரசூல் கவிதைகள்


ஒரு மலைப் பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்
யாரைக் கூப்பிட்டாலும்
என்னைக் கூப்பிடுவதுபோல் இருக்கிறது
எதிரே மரத்தின் இலை அசையும் போதும்
பயம் தொற்றிக்கொள்கிறது
எனது நிழலைப் பார்த்தபோது
கூரிய ஆயுதங்களோடு
அது என்னைத் துரத்திவருகிறது.
எனது பெயரை திரும்பக் கூப்பிடுகிறாய்
அது எனது பெயரல்ல என்பது தெரிந்தும்.
எழுந்துநின்று வணங்குகிறேன்
வெவ்வேறு சைகைகள் காட்டி
என் இருப்பையே நிலைகுலையச் செய்கிறாய்.
எழுதிய பேனாவின் ரத்தத் துளியில்
வெற்றுத்தாள் நனைந்திட
எழுத்துகள் எதுவும் தெரியவில்லை.
ஒவ்வொருதடவையும் வெவ்வேறு வேண்டுதல்களோடு
கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன.
எனது பெயர் சொல்லி
என்னையே நான் கூப்பிட்டுக் கொள்கிறேன்
உட்கார்ந்திருந்த இருக்கை
திடீரென அசைகிறது.
ஒரு மலைப்பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்.
நான் குடித்த விஷம்
எனது கடைசி நம்பிக்கையை
இந்த மனுவில் சுமந்துகொண்டு வந்திருக்கிறேன்.
நீ இதை வாசித்து முடிக்குமுன்
ஒருவேளை
நான் குடித்த விஷம்
என்னைக் கொன்றுவிடக் கூடும்.
உன் முதுகில் அமர்ந்திருக்கும் குழந்தை
மிகப் பிரமாண்ட கட்டடங்களின் வாசலோரம்
ஒரு சின்ன எறும்பாய்
ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்.
உன் முதுகில் அமர்ந்திருக்கும்
குழந்தை கதறி அழுகிறது
குழந்தையின் அழுகையை அடக்க
வாயைப் பொத்துகிறாய்
மூச்சுத் திணறி
அது செத்துக் கொண்டிருப்பதை
உன்னால் உணர முடியவில்லை.
கடலின் கிளர்ச்சி
\கடலைக் கொல்வதற்கு ஒத்திகைப் பார்க்கிறாய்.
கடல் பிணமாகிவிட்டால்
எந்த அலைகளையும்
கடலால் எழுப்பமுடியாதென்ற
இறுமாப்பில் இருக்கிறாய்.
கடல்நீரை வற்றச் செய்வதற்கு
நீ செய்த மந்திரவாத வேலைகள்
பலனளிக்காமல் போய்விட்டது.
ஆழிக் காத்து வீசி எறிந்த
கடற்கரை மணல்துகள்பட்டு
கண்களைக் கசக்கிக் கொள்கிறாய்.
ராட்சச திமிங்கலங்களைப் பிடிப்பதற்கு
வலைகளை மணலில் வீசி காத்திருக்கிறோம்.
துப்பாக்கிகளால் குறிவைத்து
கடலலையைத் துளைக்கிறாய்.
தன் குஞ்சுக்கு உணவூட்டிக்கொண்டிருந்த
தாய்மீன் மடிந்து போகிறது.
கடலில் மிதக்கும் வள்ளங்கள்
கன்ணீரால் நிறைந்திருக்கிறது.
குண்டு துளைக்காத ஆடை போட்டு
அணு மின்பொம்மை
தனது ஆட்டத்தைத் துவக்குகிறது.
கடல் மீண்டும் கிளர்கிறது.
கொலைகாரன் இசைக்கத் துவங்கிய பாடல்
திறக்காத புத்தகத்தின் பக்கங்களை
அவன் வாசித்துவிட்டதாக
என்னிடம் கூறுகிறான்
ஒரு புத்தகத்தைத் திறந்து பார்க்காமலே
வாசித்துவிட்ட அவன்
எழுதப்படாத எனது புத்தகத்திற்கு
விமர்சனமும் சொல்கிறான்.
அவனின் அதீத ஆற்றல் கண்டு
புத்தகம் திகைத்து நிற்கிறது.
புத்தகத்தின் வரிகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த
கொலைகாரன் எழும்பிவந்து
விமர்சகனைத் தாக்க முற்பட்டபோது
புத்தகம் கிழிந்து தொங்க ஆரம்பித்தது.
விதவிதமாகப் புத்தகங்களை
கிழித்துத் தொங்கவிட்ட பெருமிதத்தில்
கொலைக்காரன்
புல்லாங்குழலெடுத்துத் தனது பாடலை
இசைக்கத் தொடங்குகிறான்.

Thursday, October 18, 2012

Salutes The Author

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! 
வசதியாகத்தான் இருக்கிறது மகனே… 
நீ கொண்டு வந்து சேர்த்த 
முதியோர் இல்லம் 

பொறுப்பாய் என்னை 
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ 
வெளியேறிய போது, முன்பு நானும் 
இது போல் உன்னை 
வகுப்பறையில் விட்டு விட்டு 
என் முதுகுக்குப் பின்னால் 
நீ கதறக் கதறக் 
கண்ணீரை மறைத்தபடி 
புறப்பட்ட காட்சி 
ஞாபகத்தில் எழுகிறது! 

முதல் தரமிக்க 
இந்த இல்லத்தை 
தேடித் திரிந்து 
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட 
அன்று உனக்காக நானும் 
பொருத்தமான பள்ளி 
எதுவென்றே 
ஓடி அலைந்ததை 
ஒப்பீடு செய்கிறேன்! 

இதுவரையில் 
ஒருமுறையேனும் 
என் முகம் பார்க்க 
நீ வராமல் போனாலும் 
என் பராமரிப்பிற்கான 
மாதத் தொகையை 
மறக்காமல் 
அனுப்பி வைப்பதற்காக 
மனம் மகிழ்ச்சியடைகிறது 
நீ விடுதியில் 
தங்கிப் படித்த காலத்தில் 
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற 
ஆவல் இருந்தாலும் 
படிப்பை நினைத்து 
உன்னை சந்திக்க மறுத்ததன் 
எதிர்வினையே இதுவென்று 
இப்போது அறிகிறேன்! 

இளம் வயதினில் 
நீ சிறுகச் சிறுக சேமித்த 
அனுபவத்தை 
என் முதுமைப் பருவத்தில் 
மொத்தமாக எனக்கே 
செலவு செய்கிறாய் 
ஆயினும்… 
உனக்கும் எனக்கும் 
ஒரு சிறு வேறுபாடு 
நான் கற்றுக்கொடுத்தேன் 
உனக்கு… 
வாழ்க்கை இதுதானென்று 
நீ கற்றுக் கொடுக்கிறாய் 
எனக்கு… 
உறவுகள் இதுதானென்று! 

Sunday, September 9, 2012

அனார் கவிதைகள்

1 கருமை
முற்று முழுதாய் இருட்டி
கறுத்துப்போன அமாவாசையின் ஏணியில்
உன் உயரங்களுக்கு
ஏறிவருகின்றன என் கால்கள்

இருட்டிய மழைக் காற்று
தூசிகளாலும் காய்ந்த இலைகளாலும்
ஆகாயத்தை நிரப்புகிறது

கருமுகில் மூட்டங்கள் மூடிய வானத்தின் கீழ்
காகங்கள் மாத்திரமே பறவைகள்

வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குள்
ஒரு ஜன்னல் என
என் கண்கள் திறந்துகிடக்கின்றன

முதலும் முடிவுமற்ற
உன் உச்சரிப்புகள்
இடத்தைப் பாழ்படியவைத்து
வவ்வால்களாகத் தலைகீழாய்த் தொங்குகின்றன

என் உதடுகளை
விரல்களைச்
சுழலும் காற்றில் உதிர்த்துவிடுகிறேன்

காரிருளில் பாய்ந்தோடும்
கறுப்புக் குதிரையின் கண்களில்
இறுகி மின்னுகிறது
என்னுடைய கண்ணீர்

கறுப்புமொழியின் கரைகளிலே
எங்கோ ஒதுங்கிக்கிடக்கும்
இரு கூவல் சங்குகள்
என்னுடைய காதுகள்
2 போகும் ரயில்
நிலைகொள்ளாது ஆடும்
பொன் மிளிர்வுத் தூவல்களில்
ரயில் பட்டுப்புழுவைப் போல் நீளுகிறது

வெள்ளைப் பேய்களும். . . கரும் பூதங்களும். . . உலவும்
ஆகாயம். . . பூமிக்கிடையேயான தண்டவாளத்தில்

எனக்குள் கேட்கின்ற ரயிலில்
காலங்களின் வெளியே
பயணித்துக்கொண்டிருந்தேன்

ரயிலின் பெட்டிகள் அனைத்திலும்
பருவங்களின் பன்மைகளாய். . .
பல்வேறு உருவங்கள் கொண்ட
நான் அமர்ந்திருக்கிறேன்

எங்கோவோர் திசையில் வைத்து
மறைந்த சூரியன்
பெட்டியில் வந்தமர்ந்துள்ளது

உலகம் இருளிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும் பயணத்திலிருந்தேன்

அருகாமையில் இருந்த அனைத்தும்
தூரத்துக்கே போய்விடுகின்றன

புகைக்கோடுகளில்
பழுப்புநிறத்தில்
பிரகாசமும் மங்கலுமான தடங்கள்

உள் நரம்புகளில்
ரயில் போகும் தடக். . . தடக். . . ஓசை
குளிரும் பனியின் வசியமாகக் கவியும் மேகப்பஞ்சு. . .
ரயிலின் நினைவைத் தழுவுகின்றன

அந்த ராட்சதப்பூரான்
வெறும் பெட்டிகளையா?
நிரப்பிவிடப்பட்டவற்றையா இழுத்துச் செல்கிறது?

3 படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன்
கோடை அந்தி நிழல் சாயும்
சதுக்கமொன்றின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான்

தொலைவுப் பாலத்தின் மேலே
சூரியனையும்
படிக்கட்டுகளின் கீழே
செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்

முழுச் சிவப்பேறிய சூரியன் பாலத்தின் மத்திக்கு
வந்ததும்
‘கொலை முயற்சி நடந்துகொண்டிருக்கையில்
எதையும் ரசிக்கமுடியாதென’
அன்று எழுந்து சென்றுவிட்டான்

படித்துறையில் அமர்ந்தவாறு
தூண்டிலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கையிலும்
சேர்ந்து குளிக்கையிலும்
‘சடுதியாக வெடித்து
வித்துகளை உதிர்க்கின்ற பருத்திகள்’ என
உலைந்து
நிலைகுலையுமொரு துயரப்பாடலையே
விடாமல் பாடிக்கொண்டிருந்தான்

நேர்ந்த விபத்தொன்றின் பிறகு
கடைசியாகப் பார்த்தபொழுது
மணல் குன்றுகளும் தாழை மரங்களும் தாண்டி
பாழடைந்த பேய் வீட்டின்
உடைந்த குட்டிச் சுவரருகே
காளான்களும். . . புற்களும் மண்டிய. . .
எட்டாவது படிக்கட்டில்
அவன் அமர்ந்திருந்தான். =

அரும்பு கவிதைகள்

மாற்றம்
நுழையத் தொடங்கும்போதே
என்னை மாற்றத் தொடங்கினாய்

விரும்பிக் கேட்ட இசையை
வெறுக்கச் சொன்னாய்

மகிழம்பூ மணமும்
உனக்கு உகந்ததாயில்லை

பறவைகளுக்கு நீர்வைப்பதிலும்
உவப்பில்லை உனக்கு

முழுவதும்
ஆக்கிரமித்த பின்னும்
நீ என்னவோ
அப்படியேதான் இருக்கிறாய்.

ஆனால்
ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில்
வந்துகொண்டுதான் இருக்கின்றன
என் பிரியத்துக்குரிய பூனைகள்
மௌனம்
மௌனம் சிறுசிறு துண்டுகளாகச்
சிதறிக்கிடந்தபோதே
ஒரு முறத்தில்
அள்ளியிருக்கலாம்

இப்போது
இந்த அறை நிறைந்திருக்கிறது
அதை நீ செய்வாயா
நான் செய்வேனா
என்ற யுத்தத்தில்

வேண்டாம்
நீயும் அதைச் சொல்லிவிடாதே

உயிர் அளித்து
ஊன் வளர்த்து
திரிய விட்டுவிடாதே

சிசு மரணம்கூடத் தாங்கேன்

இனி
தாய்மைக் கூறுடன் வாழ்ந்து முடிய
சித்தங்கொண்ட பின்
பிரிந்து பிறழ்வுற
அது நிகழ்ந்திட வேண்டாம்.

நீயும் அதைச் சொல்லிவிடாதே

Sunday, July 15, 2012

இளம்பிறை கவிதைகள்


நிரம்பித் ததும்பும் நீர்
உங்கள் கிணற்றிலிருந்து
தூர் வாரி வெளியேற்றப்படும்
வெற்று மண்ணாய்க்
கொட்டப்படுகிறேன் நான்.
என் கிணற்றில் எப்போதும்
நிரம்பித் ததும்பும்
நீராக இருக்கிறீர் நீங்கள்.
இறகுகள் உதிர்ந்துகிடக்கும் ஏரி
திருப்பித் துரத்தும் பேராறு
எதிர்பாரா தருணத்தில்
சாபச் சாம்பலை வீசிமறையும்
வரம் கேட்ட தெய்வங்கள்

புழுதி மண்ணில்
புரண்டழுது அடம்பிடிக்கும்
குளிப்பாட்டி துடைத்தெடுத்த
நினைவுகள் தனித்தனியே

விழிப்பைச் சுற்றிலும்
பசித்த மலைப் பாம்புகளாகத்
தொங்கிக்கொண்டிருக்கும்
பயத்தின் நாவுகள்
இருள் வனத்தில்
மின்மினிப் பூச்சிகளாகிப்
பறந்துகொண்டிருக்கும் உயிர்

மனம் கவ்விப் பறக்கும்
பெரும் பறவையொன்றின்
வெளிர் வண்ண இறகுகள்
உதிர்ந்து கிடக்கும்
வற்றிய ஏரியில்
வானம் உரசிப் பறக்கும்
முன்பு அமர்ந்து மீன் தின்ற
பறவைகளைப் பார்த்து
வரப்போகும் மழைக்காலத்தை
எண்ணிக் கொண்டது ஏரி
நீங்களும் நனைவீர்
ஜென்மம் முழுதும்
செலவழித்தே வாழ்ந்தாலும்
தீரப் போவதில்லை
அவமதிப்புகளால் பொறிக்கப்பட்ட
என் துயர நாணயங்கள்

என் ஒரு கரத்தை
இன்னொரு கரத்தால்
பற்றிக்கொண்டு
எழுந்து நிற்பது உங்களை
சபிக்கவோ . . . முந்திச் செல்லவோ . . . என்ற
அச்சம் பதற்றம் அறவே தவிர்ப்பீர்
வாழ்வதற்காக மட்டுமே

எரியும் காட்டில்
தீச்சுடர் பார்க்கத்
திரளும் நீங்களும்
நனைந்து மகிழும்
மழைநாள் . . . வரும் எனக்கு.
கனவுகள் எவையுமற்று
பெரு வெள்ளச் சுழல்களில் சிக்கி
உள்ளிழுத்துச் செல்லப்படும்
நீந்தப் பழகாத கன்றுக்குட்டியின்
உயிர் போராட்டத்துடன்
விடியும் பொழுதுகளில்
தடைகள் கடந்து
விரைந்தோடிக்கொண்டிருக்கிறேன்
என் தூரம்
எங்கோ கிடக்கிறது
அன்பு வண்ணம் பூசப்பட்ட உள்ளங்களின்
வஞ்சகம் புரிந்த பின்
பொய்யும் நடிப்பும்
பொறுக்க முடியா
இயல்பின் நெருக்குதல் சுமந்து
விரைந்தோடிக்கொண்டிருக்கும் நானோ

அசதியுறும் போதெல்லாம்
அவமதிக்கப்பட்ட பிரியங்களின்
உறைந்த ரத்தகட்டிகள்மீது
சற்றயர்ந்து, கண்மூடிக்கொண்டிருக்கிறேன்
கனவுகள் எவையுமற்று.