Sunday, May 13, 2012

விளிம்􏰂 - - நீ.ஸத்யநாராயணன்



உரிைம - கு.விநாயக􏰔ர்த்தி


ுடிேயறிய􏰌டன்
வழக்கமான சம்பாஷைணகைள ஆரம்பித்தி􏰃ந்ேதன்.
அண்ைடவட்ீ டாரிடம் அறி􏰉கப்ப􏰅த்திக்ெகாண்டி􏰃க்ைகயில் அங்கு நின்றி􏰃ந்த குழந்ைதயிடம்
'உங்க ேப􏰃 என்ன?’ என்ேறன்.
'தமிழ்... அரசி’ என்கிறாள்
கன்னக் குழி விழ.
வழக்கம்ேபாலேவ
வம்பி􏰇க்கும் ெதானியில்
'இனிேம இ􏰆 எங்க அம்மா’
என்கிேறன்.
'ம்ஹூம்... எங்க அம்மா’ என்கிறாள். 'சரி, இ􏰆 எங்க அப்பா.’
'ம்ஹூம்... எங்க அப்பா.’
இப்படியாக
தாத்தா, பாட்டி என நீள்ைகயில் வாசலில் விைளயா􏰅ம்
குழந்ைதகளின் குரல் ேகட்􏰅
ெவளிேய ஓடிவி􏰅கிறாள். விைளயாட்􏰅 􏰉டிந்􏰆
தி􏰃ம்பிச் ெசல்ைகயில்
பக்கத்தில் நிற்கும் குழந்ைதகளிடம் கண்கைள அகல விரித்􏰆
மார்பின் ேமல் ைக ைவத்􏰆
என்ைனக் காட்டி
'இ􏰆 எங்க மாமா’ என்கிறாள் உரிைம􏰎டன் தமிழரசி.
இல்ைல,
எங்க தமிழ்க் குட்டி!



Saturday, May 12, 2012

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் -


மாலதி கல்பனா அம்புரோஸ் கவிதை
தொலைந்த நிலம்
இடம்பெயரும் உறைந்த மென்காற்று
குரலற்று அலகு இழந்த பறவைகள்
இலைகளும் நிழல்களுமற்ற மரங்கள்
முகிழ்த்தாலும் மலர முடியாமல் விம்மும் பூக்கள்

உதிர்ந்து விழ அஞ்சும் ஒரேயொரு கண்ணீர்த் துளி
சுவரை உடைத்துவிடத் துடிக்கும் ஒரேயொரு
நெடுமூச்சு
பாட எவருமே அற்ற மாபெரும் பாடல்
ஆன்மாவைத் தொலைத்துவிட்ட
ஒரு சொர்க்க நிலம்.
 

மாலதி கல்பனா அம்புரோஸ் கொழும்பில் வசித்துவரும் சிங்களக் கவிஞர். சிங்களத்தில் கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கவிதைகளையும் கவிதை குறித்த கட்டுரைகளையும் மொழிபெயர்த்துவருகிறார்.

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் - மஞ்சுள வெடிவர்த்தன கவிதைகள்


1. தராக்கி (சிவராமுக்கு)
துயிலா இரவைக் குலைக்கும்
இருளின் சிற்றலைகளை ஊடறுத்து ஒளிரும்
ஒரு சிறு தாரகை

பாடும் மீன்களின் இரவில்
தராக்கி
உனது காமக் குரல் உயிர்பெறுகிறது

அந்தப் பாடல்கள் இனியன அல்ல
கொடியன
இதுவே உண்மை; யதார்த்தம்

இளங்காற்றில் அலையும் குருதியில்
உனது குரலின் நினைவு
தேங்கி நிற்கிறது

அன்று புயலுற்ற பயங்கர இரவில்
ஏன்
முடிவற்ற ஒளியைத் தேர்ந்தெடுத்தாய்?

நாட்டின் வெட்கத்தின் திரை விலக
இரக்கமற்ற சிரிப்புகளின் எதிரொலி
விம்மும் இதயங்களின் வாயில் திறந்துகொள்வது
உனது குரலைத் தழுவ மட்டுமே
2. எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை
ஈஃபிள் கோபுரத்தின் உச்சியின் மேல்
நிலவு எழுகிறது
கனவும் மேலெழத்
துப்பாக்கியால் எனது இதயத்தைச் சுடுகிறேன்

இன்று எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை

லா சப்பேல் வீதியின் தெருவிளக்குகள்
இருளில் குனிந்து நிற்கின்றன
எனினும் ஒளி பரவுகிறது
ஒவ்வொன்றாக அவற்றுக்கும் வெடிவைக்கிறேன்

தெரியாத தமிழர் ஒருவர் முன்னே வருகிறார்
‘வணக்கம்’ சொல்கிறேன்
‘தீக்குச்சி இருக்கிறதா?’ என்கிறேன்

அவருடைய கண்கள் வாழ்வைத் தேடி அலைவதை
அப்போது பார்க்கிறேன்
நான் நெருப்பைக் கேட்கிறேன்
அவரோ வாழ்க்கையைக் கேட்கிறார்

எரியும் உடல்களிலிருந்து
சிகரெட் மூட்டிய தலைமுறை அல்லவா நாம்?
சிகரெட் புகைத்தபடியே
தெருவில் துவண்டு சரிந்து நடந்து செல்லும்
இறந்த மனிதன் ஒருவன்
உனது புத்தாண்டுக் கனவுகளில் வருகிறானா?
அவருக்கு வீடு இருந்தது
ஆனால் படுக்கக் கட்டில் இல்லை
ஊர் இருந்தது
ஆனால் நடந்து திரியத் தெருக்கள் இல்லை
நாடு இருந்தது
ஆனால் புன்னகைக்கும் உரிமை இல்லை

இன்று
எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை

பாற்சோற்றை உன் வாய்க்குள்
நிறைக்கிறபோது
உனக்குக் குருதி மணக்கவில்லையா?
என்னே சுவை அது!
3. நிலம் இழந்த தாய்நிலம்
இளம் இராணுவ வீரனே
தமிழர்களின் தலைக்கு வெடிவைக்கிறாய்
எவ்வளவு மென்மையானது உன் ஆயுதம்?

குரூரமான பதுங்குகுழி
எப்போதுமே சூதாட்டத்துக்குத் திறந்திருக்கிறது
அங்குப் பகடைக்காய்களின்
நிரந்தர ஆக்கிரமிப்பு

நீ
அவர்களின் கண்களைக் கட்டலாம்
ஆனால் ஆயிரம் கண்கள் திறக்கின்றன
நீ
அவர்களின் கைகளைக் கட்டலாம்
ஆனால் ஆயிரம் கைகள் வீறுடன் மேலெழுகின்றன

அம்மணமாக்கி அவர்களை நீ சுட்டபோது
அவர்களின் கடைசி விருப்பம்
அந்தத் தாய்நாட்டைத் தழுவியபடி
நிலத்தில் வீழ்ந்தது
உனது உருமறைப்பு அம்மணமானது

இளம் இராணுவ வீரனே
தமிழர்களின் தலைக்கு வெடிவைப்பது
உனக்கு விளையாட்டு
எவ்வளவு மென்மையானது உனது ஆயுதம்!
4. பாலச்சந்திரன்
சிறு நிலா
சிறு நிலாவா?
அதைச் சொல்லவும்கூடுமோ?

பத்துத் திக்கும் சுடரொளி வீசிய
சூரியனைக் கொன்றது சிங்கம்

தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால்
சுவரோவியங்கள் வரையப்படுகின்றன

சினத்துடன் சிங்கம்
சிறிய நிலாவையும் கொன்றபோது
முகில்களின் திரையைக் கிழித்து
உள்ளே ஒளிந்தது நிலா
பயத்தில்
ஒடுங்கின நட்சத்திரங்கள்

இருளின் சஞ்சாரம்
நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும்
அப்போது
எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது.

மஞ்சுள வெடிவர்த்தன(37), ராவய சிங்கள வார இதழில் பணியாற்றியவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மரியாவும் மேரியும் தெய்வ நிந்தனை என்னும் குற்றச்சாட்டில் இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையின் கண்டனத்துக்கு ஆளாகியது.
அந்தக் குற்றச்சாட்டில் இலங்கைப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். நூலும் தடைசெய்யப்பட்டது. இரண்டு கவிதை நூல்களும் ஒரு நாவலும் வெளியாகியுள்ளன. தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டமையால் இலங்கை அரசின் துன்புறுத்தலுக்கு ஆளானார். இப்போது பிரான்சில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்துவருகிறார்.

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் - அஜித் ஹேரத் கவிதைகள்


வழிபாடு
புதுக்குடியிருப்புக்குச் செல்லும் தெருவில்
உன்னை அவர்கள் கிடத்தினர்
எறிகளண் துண்டித்த உனது செயற்கைக் காலை
தீய்ந்து கருகிச் சிதறிய மண்ணில்
உன்னருகே வைத்தனர்.


முழந்தாளிட்டு
அந்தச் செயற்கைக் காலை வணங்குகிறேன்
மகனே.
சிலுவையில் அறையப்பட்ட
யேசுவின் பாதங்களைப் போலவோ
தேவதத்தனால் காயம்பட்ட
புத்தரின் காலைப் போலவோ
இந்தக் கால் குருதி சிந்தவில்லை.


எரிந்துபோன உன் உதடுகளைத் திறந்து
எனக்குச் சொல்
மகனே
உனது கடைசிக் கனவைப் பற்றி
தெருவோரத்தில் உனது மரணம் நிகழும் முன்
உன் இறுதித் தாக்கத்தைப் பற்றி.


பரவசம் தரும் இளமைக் கனவொன்றில்
உன் தோழர்களுடன்
அப்போது முழுமையாக இருந்த
உன் கால்களுடன் ஓடித் திரிந்தாயா


இருளிலும் இருளான இரவொன்றில்
குருதி கசியும் வெறுங்கைகளால்
இழந்துபோன காலைத் தேடி
முடிவற்றுப் பெருகும் மனிதப் புதைகுழி மேடுகளைத்
தோண்டுகிற
தனித்து அலையும் ஒருவனைப் பற்றிய
கொடுங்கனவா
மெல்ல மெல்ல ஒளி இழந்துபோகிற
உன் கண்களில்
எங்கள் பாவங்களும்
நூற்றாண்டுக் கால எங்கள் தோல்விகளும்
எழுதப்பட்டுள்ளன.


முகமற்று மரித்த எல்லோர் பேரிலும்
இல்லாமல் போன எல்லாக் கடவுளர் பேரிலும்
மகனே
எங்களை மன்னித்துவிடு.


படுகொலைகளுக்குப் பிற்பாடு
எந்தச் சாட்சியமும் இல்லை
எந்த நீதிபதியும் இல்லை
குற்றவாளிகளையும் கொலையுண்டோரையும் தவிர.
ஏழு கனவுகள்
முதல் கனவு: நீ கவனிக்கவே இல்லை
முடிவிலியின் கற்பனைக்கு எட்டாத
புள்ளிகளிலிருந்து
நான் விழுகின்றேன்
நகரின் தெருக்களில்
சேற்று நீர் பெருகுகிறது.
நீரில் விழுவதற்குக் கணப்பொழுது முன்பாக
மிதந்து வரும் சிதிலங்களுக்கு நடுவில்
ஒரு தொட்டிலில்
குழந்தையாக விழித்தெழுகிறேன்
தங்களுடைய ஆடைகளை
அள்ளித் தூக்கியபடி
சேற்று நீரில் நடந்துவரும்
ஆண்களையும் பெண்களையும்
கடந்துபோகிறேன்.
புன்னகையுடன் கையசைக்கிறார்கள்.


தொட்டில் கவிழ்ந்து
சாக்கடையுள் வீழ்கிறபோது
தாங்கொணாக் குளிரில் நடுங்கித்
தொட்டிலை விட்டு வெளியேறி
ஏக்கத்துடன் உன்னைத் தொடர்கிறேன்
நீ கவனிக்கவே இல்லை
திடீரென
யாரோ என்னை இழுத்துப்
பெருகும் நீருள் வீசியெறிகிறார்
மீளவும்
வீழ்கிறேன், வீழ்கிறேன்
நிலத்தில் மோதும் முன்பாக
விழித்தெழுந்ததாய் உணர்ந்தேன்.
இரண்டாவது கனவு: உனது முத்தம் எனது சாபத்தைப் போக்கவில்லை
முடிவற்ற மழை
சாளரத்தின் வெளியே பார்க்கிறாய்
உனது மூச்சிலிருந்து எழும் புகார்
நக்கிள்ஸ் மலைத் தொடரை மறைக்கிறது


பச்சையத்தின் வீச்சில்
தூக்கத்தில் ஆழ்கிறேன்
விழித்தெழுகிறபோது
ஒரு கண்ணீர்த் துளி உனது கண்ணிலிருந்து
இறங்குகிறது
அறுவைக்கான ஆய்வுக்கூட மேசையில்
விரிந்துகிடந்தபடி
உன்னைப் பார்க்கிறேன்
ஒரேயொரு முறை, அதுதான் இறுதி,
என்னை அணைத்து முத்தமிடுகிறாய்
சாளரத்தைத் திறந்து
என்னை வெளியே வீசி எறிகிறாய்
அன்றைக்கு ஆய்வுக்கூடத்தை விட்டுச் சென்றாய்
பள்ளிக்குத் திரும்பவே இல்லை
உனது முத்தம்
எனது சாபத்தைப் போக்கவில்லை
வீழ்வதற்கு முன்பாக நான்
விழித்தெழவும் இல்லை.
மூன்றாவது கனவு: வெல்ல முடியாத பாலம்
பாலத்தின் மேல்
அம்மணமாக உன்னை
முழந்தாளில் இருத்துகிறார்கள்
உனது கைகளைப் பின்புறமாகக் கட்டுகிறார்கள்
அலறுகிறேன் உன்னைக் காப்பாற்ற
எஞ்சியிருந்த கடைசித் துப்பாக்கியை
ஒளித்த இடத்தை
நீங்கள் யாருமே சொல்ல மறுக்க
நான் நிலத்தைக் கிளறுகிறேன்
துப்பாக்கி தன்னைத் தானே புதைத்திருந்தது
அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை
ஆற்றில் பிணங்கள் மிதந்துவருகின்றன.


எப்போது இந்தப் பாலத்தைக்
கடக்க நேர்ந்தாலும்
காயம்பட்ட இதயத்துடன்
நீரில் வீழ்கிறேன்
இன்னும் வீழ்கிறேன்
நான்காவது கனவு: நீல ஆகாயத்தையும் முகில்களையும் பார்த்தேன்
பழமரம் கொடியாகப் படர்ந்திருக்கிற வேலியோரம்
தடை முகாமில்
உக்கிப்போன மரத்துண்டே கட்டிலென
அமர்ந்திருக்கிறேன்
தப்பிச் செல்லும் வழிகளைப் பற்றியே எண்ணம்
சுரங்கம் அமைத்தால்
ஏழு மலைகளுக்கும் பெருங்காடுகளுக்கும் அப்பால்
இன்னொரு நீல ஆகாயத்தையும்
முகில்களையும் பார்க்க முடியுமென
நீ
என் காதுகளில் மெல்லச் சொல்கிறாய்.


கைவிடப்பட்ட பொதுக் கிணற்றில்
நீர் சாந்தமாக இருக்கும் மதியத்தில்
கிணற்றுக் கட்டில் அமர்ந்தேன்
கிழே தெரிந்தது சுரங்கம்
பூமியின் மறுமுனையில்
இன்னொரு நீல ஆகாயத்தையும்
முகில்களையும் காட்டியது அடியற்ற கிணறு
அங்கிருந்து
என் கண்களுடாகவே நீ என்னைப் பார்க்கிறாய்


படிமங்கள் கலைகின்றன
தடுப்பு முகாம் கைதிகளின் வாளிகளால்
நீர் கலங்கும் முன்பாக
இந்தக் கிணற்றூடாகத் தப்பி ஓட விரும்புகிறேன்
மறுபடியும்
முடிவற்ற குகை ஊடாக
ஆகாயத்தை நோக்கி வீழ்கிறேன்.
ஐந்தாவது கனவு: நீலத் தரப்பாள்* சிதை
நீலத் தரப்பாள் குடிசையும்
அதனுள் தொட்டிலும் எரிகிறபோது
உன் பிஞ்சுக் கைகளும் கால்களும் எரிய
வெளியே தவழ்ந்து வந்தாய்
அச்சம் நிறைந்த உன் போராட்டத்தை
கையறு நிலையில் பார்க்கிறேன்
ஒரு கணம் எங்கள் கண்கள்
சந்தித்துக்கொள்கின்றன
அதை நீ கவனித்தாயா என்பதை
நான் ஒருபோதும் அறியப்போவதில்லை
உறைந்துபோயிருந்த என்னைக் கடந்து சென்று
குழிக்குள் விழுந்தாய்.


பிணங்களுடனும் புகையுடனும்
மறைந்து போய்விட்டாய்
அந்தக் குழியை மண்ணால் மூடி
ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பின
புல்டோசர்கள்
அவை மெல்ல மெல்லத் தொலைவுகொண்டு
மறைந்தாலும்
எனக்குத் தெரிவதெல்லாம்
மண்ணின் மேல் உன் பிஞ்சுக் கை.


*TARPAULIN
ஆறாவது கனவு: தாமதமாக வந்ததால் உன்னை இழந்தேன்
இன்னும் இரவு
துயர்மிகு விழிப்புடன் எழுகிறேன்
யாரோ எங்கோ எனக்காகக் காத்திருப்பதான
உணர்வு
யாரென அறியேன் எங்கே எனவும் தெரியாது
அது நீயாகவும் இருக்கக்கூடும்
சந்திப்புகள், பணிகள் என என் நாள் நிறையும்
கடந்துபோன நாள்களும் மாதமுமே
எஞ்சி இருக்க


கி - 9 தெருவில் நடந்து
கடைசி ராணுவக் காவல் அரணையும் தாண்டி
வருகிறேன்.
நீ இல்லை
தாமதமாக வந்துவிட்டதால்
நீ போய்விட்டாயோ தெரியாது
வன்னிக்கு வந்தேன்; நீ இல்லை
இடிந்திருக்கும் உன் வீட்டின் கதவருகே
காத்திருக்கிறேன்.
கையில் சிகரெட்டின் உனக்கான பாதி.
ஏழாவது கனவு: சிதறிப் பறந்தது கடந்த காலம்
சுற்றி வளைப்பும் தேடுதல் வேட்டையும்
முடிந்த பிற்பாடு படையினர் போய்விட்டனர்
உடைக்கப்பட்டிருந்தது அறை
துண்டு துண்டாகக் கிழித்து வீசப்பட்டிருந்தது
எங்கள் குழுவின் கடைசிப் புகைப்படம்.
காலம் மங்கி மறையும் அந்தத் துண்டுகளில்
இருந்தது எங்கள் புன்னகை
தெரியாத முடிவிடங்களை நோக்கி
நாங்கள் வழி பிரியும் முன்பாக
ஒன்றாக இருந்த கணங்கள்
ஒட்டலாம் என நினைத்து
யன்னலோரமாய் அந்தத் துண்டுகளை
வைக்கிறேன்.
ஒரு மாயக் காற்று அவற்றைக்
குலைத்து வீசிற்று
இலையுதிர் காலத்தின் கடைசி இலைகளோடு
அவற்றைத் தூர இடங்களுக்கு
எடுத்துச் சென்றது
காற்றில் உலையும் காகிதத் துண்டுகள்
நாம்.
1967இல் மத்திய இலங்கையில் பிறந்த அஜித் சி ஹேரத் மாணவர் அரசியல் இயக்கங்களில் தீவிரப் பங்காற்றி 1989இல் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். இவருடைய கவிதைகள் மாற்று ஊடகங்களில் அதிகம் வெளியாகியுள்ளன. தற்போதைய இலங்கை அரசின் இனவாத ராணுவ அடக்குமுறையை எதிர்த்துக் கவிதைகளும் கேலிச் சித்திரங்களும் படைத்துவருகிறார்.

Monday, March 12, 2012

விஸ்வாவா சிம்போர்ஸ்கா கவிதைகள்


நூற்றாண்டின் வீழ்ச்சி
நமது இருபதாம் நூற்றாண்டு முன் வந்தவற்றை
முன்னேற்றும் என்று இருந்தது.
இனி அதற்கு எந்த ஆதாரமுமில்லை.
அதன் எஞ்சியிருக்கும் வருடங்கள் சிலவே,
அதன் நடை தள்ளாடுகிறது,
அதற்கு மூச்சிரைக்கிறது.

நடக்கக் கூடாத பல
நடந்துவிட்டன.
நடப்பதாக இருந்தவை
நடந்தேறவில்லை.

வேறு பல விஷயங்கள் தவிர,
மகிழ்ச்சியும் வசந்தமும் ஒன்றை ஒன்று
நெருங்கி வருவதாக இருந்தன.

மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் விட்டுப் பீதி வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொய்யைவிட உண்மையின் தாக்கம் துரிதப்படும் என்பதாக இருந்தது.

சில பிரச்சினைகள் இனி
எழவே எழாது என்றும் நம்பப்பட்டது:
உதாரணத்திற்கு, பட்டினி,
போர், இத்யாதிகள்.

இயலாதோரின் இயலாமைக்கு மதிப்பு,
நம்பிக்கை, போன்றவை
ஏற்படுவதாக இருந்தது.

உலகத்தை ரசிப்பதாகத் திட்டமிட்டிருந்த எவருக்கும்
அது இப்பொழுது நம்பிக்கையூட்டும்
செயலாக இல்லை.

முட்டாள்தனம் நகைப்பூட்டுவதாக இல்லை.
அறிவு மகிழ்வுள்ளதாக இல்லை.
நம்பிக்கை என்பது முன்பிருந்ததுபோல
இளம் பெண்ணில்லை,
இப்படிப் பல விஷயங்கள்...

நல்லவனும் வலிமையானவனுமான ஒரு மனிதனை
இனி கடவுள் நம்பப்போவதாக இருந்தது.
ஆனால் நல்லவனும் வலிமையானவனும்
இன்னும் வெவ்வேறு மனிதர்களே.

“நாம் எப்படி வாழ வேண்டும்?” என்று ஒருவர் கடிதத்தில் கேட்டிருந்தார்.
நான் அவரிடம் அதையே
கேட்க நினைத்திருந்தேன்.

மீண்டும், எப்பொழுதும் போலவே,
மேற்கண்டது போலவே,
அசட்டுத்தனமான கேள்விகளே
மிக அவசரமானவையாக இருக்கின்றன.

போர்னோக்ராஃபி பற்றி ஒரு கருத்து
சிந்திப்பது என்பதைவிட ஒழுக்கங்கெட்ட செயல் ஒன்று கிடையாது.
மலர்களுக்கென உள்ள நிலத்தில்
காற்று பரப்பும் களை போன்றது இந்தப் பொறுப்பின்மை.

சிந்திப்பவர்களுக்கு எதுவுமே புனிதமல்ல.
வெட்கமின்றி எதையும் பெயரிட்டு அழைப்பது,
ஆபாசமான ஆய்வுகள், காம வெறிகொண்ட கூட்டிணைவுகள்,
அம்மணமான உண்மைகளின் பின் அவசரமான சிற்றின்பத் துறத்தல்கள்,
உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய விஷயங்களைத் தம்
அசிங்க விரல்களால் தொடுதல்,
சூடான விவாதங்கள் - இவை இவர்கள் காதுகளுக்கு இன்னிசை.

வெட்ட வெளிச்சத்திலோ இரவின் பதுக்கத்திலோ
இவர்கள் வட்டமாகவோ முக்கோணமாகவோ ஜோடிகளாகவோ
இணைகிறார்கள்.
கூட்டாளிகள் ஆணா பெணா, என்ன வயது என்பவை முக்கியமல்ல.
இவர்களது கண்கள் ஒளிர்கின்றன, கண்ணங்கள் சிவக்கின்றன.
நண்பர் நண்பரை வழிதவறச் செய்கிறார்.
சீரழிந்த மகள்கள் தங்கள் தந்தையரைக் கெடுக்கிறார்கள்.
தன் குட்டித் தங்கைக்கு அண்ணன் கூட்டிக்கொடுக்கிறான்.

பளபளக்கும் இதழ்களின் பக்கங்களில் உள்ள
சிவந்த பிட்டங்களைக் காட்டிலும் அவர்கள்
மறுக்கப்பட்ட அறிவுமரத்தின் பழங்களையே விரும்புகிறார்கள் -
இறுதியில் இவர்கள் விட்டுச் செல்லும் அழுக்குத் தடங்கள்
இவர்களின் எளிய இதயங்களுடையவை மட்டுமே.
இவர்கள் ரசிக்கும் புத்தகங்களில் படங்கள் இருப்பதில்லை.
வேறுபாடு என்பது இவர்கள் விரல் நகத்தாலோ
க்ரெயானாலோ குறிக்கும் சில சொற்றொடர்களில் மட்டுமே.

இவர்கள் எடுக்கக் கூடிய நிலைகள்,
தடையற்ற எளிமையுடன் ஒரு மனது
மற்றொன்றைக் கருவுறச் செய்வது, இவை அதிர்ச்சியூட்டுபவை!
இந்த நிலைகளைக் காமசூத்திரம்கூட அறிந்திருக்கவில்லை.

இவர்களது இந்தச் சந்திப்புகளின்பொழுது சூடாக இருக்கும் ஒரே விஷயம்
தேநீர் மட்டுமே.
நாற்காலிகளில் அமர்கிறார்கள், உதடுகளை அசைக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் காலின் மீதும் இருக்கும் இன்னொரு கால்
அவரவர்களுடையது மட்டுமே.
எனவே ஒரு கால் தரையிலும்
மற்றொன்று சுதந்திரமாய் காற்றில் தொங்கிக்கொண்டும் இருக்கின்றன.
எப்பொழுதாவது மட்டுமே ஒருவர்
எழுந்து சன்னலுக்குச் செல்கிறார்.
திரையின் விரிசலின் வழியே
தெருவை எட்டிப் பார்க்க.

ஒரு சிறிய நட்சத்திரத்தின் கீழ்
எதேச்சையான ஒன்றைத் தவிர்க்க முடியாத ஒன்றெனக் கூறியதற்கு என் மன்னிப்புகள்.
அதுவும் தவறு எனின், அந்தத் தவிர்க்க முடியாமைக்கு என் மன்னிப்புகள்.
மகிழ்ச்சியே, உன்னை நான் உரிமையுடன் எடுத்துக்கொள்வதைக் கண்டு கோவிக்காதே.
அவர்களைக் குறித்த என் நினைவு மங்குவதைப் பற்றி
இறந்தவர்கள் என்மீது பொறுமை கொள்ளட்டும்.
ஒவ்வொரு நொடியும் நான் காணத் தவறுபவை குறித்து காலத்திடம் என் மன்னிப்புகள்.
இந்தச் சமீபத்திய காதலே முதலானதென்று எண்ணியதற்காகக் கடந்த காதல்களிடம் என் மன்னிப்புகள்.
வீட்டிற்குப் பூக்களைக் கொண்டு வந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள், தொலைவில் நிகழும் போர்களே.
திறந்த காயங்களே, என் விரலைக் குத்திக்கொண்டதற்கு
என்னை மன்னித்துவிடுங்கள்.
என்னிடமுள்ள இசைத் தட்டுகளுக்காக மன்னிப்புக் கோருகிறேன் தங்கள்
ஆழங்களிலிருந்து கதறுவோரிடம்.
இன்று காலை ஐந்து மணிக்கு உறங்கிக்கொண்டிருந்ததற்காக
மன்னிப்புக் கேட்கிறேன் இரயில் நிலையத்தில் அப்பொழுது
காத்துக்கிடந்தவர்களிடம்.


துரத்தித் தேடப்படும் நம்பிக்கையே, அவ்வப்போது சிரித்ததற்காக என்னை மன்னித்துவிடு.
பாலைவனங்களே, கையளவு நீருடன் உங்களை நோக்கி நான் விரையாமலிருந்ததற்கு என்னை மன்னியுங்கள்.
கழுகே, நீ வருடங்கள் தோறும் மாறவில்லை, எப்பொழுதும் அதே கூண்டில்,
உன் விழி என்றும் வெளியில் ஒரு புள்ளியில் உறைந்ததாய்.
நீ பஞ்சடைக்கப்பட்ட ஒன்றெனினும் என்னை மன்னித்துவிடு.
மேசையின் நான்கு கால்களுக்காக வீழ்த்தப்பட்ட மரத்திடம் என் மன்னிப்புகள்.
சிறிய பதில்களுக்காகப் பெரிய கேள்விகளிடம் என் மன்னிப்புகள்.
உண்மையே, என்னைப் பெரிதாய்க் கண்டுகொள்ளாதே.
கௌரவமே, தயவுகூர்ந்து பெரிய மனதுசெய்.
இருத்தல் எனும் புரியா புதிரே, நான் எப்பொழுதோ ஒருமுறை மட்டுமே உன் ஓட்டத்தின்
ஓர் இழையைப் பிடித்துவிடுவது பற்றிப் பொறுத்துக்கொள்.

ஆன்மாவே, நான் அவ்வப்பொழுது மட்டுமே உன்னைக் கொண்டிருப்பதற்காகப் புண்படாதே.
நான் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாததற்காக
எல்லாவற்றிடமும் என் மன்னிப்புகள்.
நான் ஒவ்வொரு பெண்ணாகவும் ஒவ்வொரு ஆணாகவும் இருக்க
முடியாததற்காக எல்லோரிடமும் என் மன்னிப்புகள்.
நான் வாழும்வரை என்னை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது
என்று எனக்குத் தெரியும்.
ஏனெனில் நானே என் வழியில் குறுக்கிடுகிறேன்.
மொழியே, கனமான சொற்களைக் கடன்வாங்கி அவற்றை
இலேசானதாக்கக் கடினப்படும் என்னிடம் வெறுப்பு கொள்ளாதே.

தமிழில்: அனிருத்தன் வாசுதேவன்
ஆங்கில மூலம்: ஸ்டானிஸ்லாவ் பாரன் ழாக் மற்றும் க்லேர் கவனா

இக்கவிதைகளுக்கான ஓவியங்கள் சஜிதா ஜியின் STREE புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

ரவிசுப்ரமணியன் கவிதை



நெருக்கமான அந்நியனைத் தேடி வருபவர்கள்
புலன்களுக்கு அகப்படாத
ஸ்தூலமான பிறவி
அவன்.
உணர்வுகளால் சித்திக்கும் ஸ்பரிசங்களை
முரட்டு அழுத்தத்தால் சொல்ல இயலாது.
புரிதலின்றி உன்னியல்பில்
திரிபுகொள்ளாதே மகளே
வெய்யிலின் உக்கிரத்தில் அலைந்து திரிந்தோ
மழையின் ஈரக்குளிரில் நனைந்தபடியோ வரலாம்


பயணக் களைப்பில் சோர்ந்திருக்கலாம்
முகவரியை விசாரித்தரிய அலைந்திருக்கலாம்.


அவன்
நல்ல தந்தை இல்லையென்றும்
நல்ல கணவன் இல்லையென்றும்
வருபவர்களிடம் சொல்லாதே


நேசிப்பை அதிகப்படுத்தத்தான்
விலகிச்செல்கிறான்
சொற்களைவிடவும்
உயர்ந்தது செயலென்றே
மௌனித்திருக்கிறான்
மன அவசம் கொள்ளாது
தெளிவுகொள்
அவனின் ப்ரியங்களில் திளைத்தபடியோ
பாடிய குரலின் ஞாபகத்திலோ
உரையாடலின் தொடர்ச்சியாகவோ
குழந்தைகளுக்கெனச்
சிறு பழம் ஒன்றை வாங்கிவரும்
நினைவின்றியோகூட யாரும் வரலாம்
வீடு இது
ஆனால் வசிப்பிடம் இல்லையென
அவன் ஏன் உணர்ந்தானென யோசி
நானறிந்த
அவன் விலகலின் அண்மையை
அண்மையின் தூரத்தை
எப்படிச் சொல்வேன் மகளே உனக்கு
உன்னின் விதியோ
அவனின் விதியோ
இருவரும் இணைந்தது


சமூகத்தை நேசிப்பவன்
கலைகளைக் கொண்டாடுபவன் என
வருபவர்கள் நினைவிலிருக்கும்
கூட்டைக் கலைத்து
சம்பாதிக்கத் தெரியாதவன்
பூர்வ சொத்தைத் தவறவிட்டவன்
கோபக்காரன் என்றெல்லாம் சொல்லிப் புலம்பாதே
மண்ணில் மழையாய்க் குழைபவன் அல்ல அவன்
நிலத்திலிருந்தபடி ஆகாயம் நேசிப்பவன்
முகம் தெரியா அதிதி ஆயினும்
சுணக்கம் கொள்ளாதே.
சில நிமிஷம் ஆசுவாசம்கொள்ள
ஒரு நாற்காலி கொடு
நம்மிடமிருக்கும் அவல் பொறியில்
ஒரு கைப்பிடி கொடு
ஒரு குவளைத் தண்ணீர் கொடு


மலர்ந்த முகத்தோடு
சில வார்த்தைகளேனும்
பேசி வழியனுப்பு.


ஒருவேளை
நீ துயரென நினைக்கும்
கவலைகளைத் தீர்க்கும்
தேவதூதன் யாரேனும்கூட
மாற்று ரூபத்தில் வரக்கூடும் மகளே.