Saturday, December 10, 2011

தேவேந்திர பூபதி கவிதைகள்

நீர்த் தாமரை மணல்

முதல் கப்பல் இன்னும் வந்து சேரவில்லை
கலங்கரை விளக்கருகே
மாலையின் பொன்வண்ணக் கிரணங்கள்
கரை மீனவர்களின் படகு
அதில் மிளிர்கிறது

கால்கள் மணல் புதைய
அலைவீசும் காற்றில்
மண் கண் விழுந்து எரியும்
வெகு நீளக்கரை
நண்டுகள் காய்ந்த குழிகளுக்குள்
ஓடி இறங்குகின்றன

நெய்தலைப் பாடிய புலவன்
நீர்த் தாமரை மணலில்
எவளோடு கூடியிருப்பான்
கள் பானைகள் உருட்டி
எச்சாமம் மரக்கலம் தள்ளியிருப்பான்

இந்நிலத்துப் பாணன் வழியிலோர்
கவிஞன் என்னை
ஆழ்கடல் வெருட்டுகிறது
முன்னிரவில் வருவேன் என்றவள்
நகரத்தின் எச்சாலை நெருக்கடியில்
காத்திருக்கிறாளோ

தொலைவில் எரியும் கட்டடம் போல் ஒரு கப்பல்
மீனவர்கள் மறைந்துவிட்ட இருள்
வீடு திரும்பச்சொல்லி இரைச்சலிட்டு
உறுமுகிறது கடல்

ஒரு நண்டுவளைக்குள் குதித்து
தாமதமாக வீடு வந்துசேர்ந்தேன் நான்

அறையெங்கும் கடல் வாசனை.

நெடுந்தூரம் போக வேண்டியவன்

நடு வழியில் அழைப்பதால்
என்ன சொல்லிக் கடந்து போவது
ஆரம்பம் முடிவும்
தெரியும் என்று சொல்கிறீர்கள்
எதற்காகக் கடக்கிறேன் என்ற
யூகமும் உங்களிடமே இருக்கிறது

எங்கிருந்து எதை
எப்படி ஏன்
அதை எக்காலத்தில் கடக்கிறேன்
என்பதற்கு உங்கள் பழைய கூண்டில்
அகப்படும் வகையில்
ஏதேனும் நான் சொல்லப் போய்
இவ்வளவுதானா எனக் கேட்கவும்
தயாராய் இருக்கிறீர்கள்

நடுநிசியில் நின்று விழித்து மௌனமாய்
ஒளி பயில்கிறது
நெடுந்தூரம் போக வேண்டிய
நிலா.


எம். யுவன் கவிதைகள்

காக்கைப்பாட்டு

அந்தக் காக்கைக்கு
அடுத்த தலைமுறை வந்து
பேரக் காக்கைகள் பறக்கின்றன இப்போது
ஆகாயமே சொந்தமாய் இருந்தும்
அண்டி வாழத் துடிப்பவை
எச்சில் பருக்கைக்கு
ஏங்கி அலைகிறவை
குப்பைத் தொட்டியை
அட்சயப் பாத்திரமாய் நம்பிக் கிளறுபவை
சென்றவாரம் மின்னடிபட்ட
சககாக்கையை மறந்து திரிகிறவை
வெகுளிகளை ஏமாற்றி
தட்டிப் பறித்துத் தின்கிறவை
மின்னணுக் கோபுரத்தின் சன்ன ஒலித்
தாக்குதலில் குருவியினம் அழிவதை
விசனிக்காதவை
என்றாலும்
எல்லாக் காக்கைகளும் காக்கைகள் அல்ல
விலகிவந்த காக்கை ஒன்று
என் ஜன்னல் தட்டில் அமர்கிறது
வழக்கமான பார்வை இன்றி
வேறொரு கோணத்தில் தலைசாய்த்து
ஓரசைப் பதங்களை
நீட்டியும் குறுக்கியும்
புதுமொழி பேசுகிறது
காக்கைக் குரலில் இசைமை சேர்க்கும்
நாடகத் தன்மை
பாராமுகம் காட்டும் இல்லத்தரசிமேல்
லேசான விமர்சனம்
எதிர்வரும் காக்கைகள்
யாருடைய பித்ருக்களோ என்றார்
ஆத்மாநாம்
ஆத்மாநாமேதானோ
வியக்கிறேன் நான்

o

மொட்டை மாடியில் கிடந்தேன்
சும்மாத்தான்
மழைக்காலப் பகல்
வெயிலும் இல்லை வெக்கையும் இல்லை
கட்டாந்தரையில் அழுந்திய முதுகின் கீழ்
அழுந்திய பருக்கைக் கற்கள்
கண்ணில் நிறைவது வானம் இல்லை
பார்வையின் அளவே பரந்து கிறங்கிய
மனம் என்றது மனம்
அளப்பரிய விரிவின் முன்
அடையாளம் எதுவுமற்று
நசுங்கிக் கிடக்கும்
பருக்கைக் கல்லென உணர்ந்தேன்
அற்பன் அற்பன் என்று துடித்தது நாடி
கொதிக்கும் வாழ்வு பலிகொண்ட தருணங்களும்
தினசரியின் பூகம்பத்தில் புதைந்த ஆசைகளும்
நிலவு உறங்கிய நேரத்தில்
கொள்ளைபோன கனவுகளும்
இன்னும் இன்னுமென்று வழக்கம்போல்
துயரத்தின் புதைகுழியில்
அமிழ்ந்துகொண்டேயிருந்தேன்
மதகுடைந்து பெருகியதில்
அணை முழுதும் வெளியோடி
நீர்க்கொடிகளின் பசுமை மண்டி
வறளவும் தொடங்கியது
துரிதமாய்ப் படர்ந்த பாலையின் பரப்பில்
தகித்து ஊர்ந்தபோது
நெற்றியில் சொட்டியது
ஈரத்தின் குளுமையொன்று
எச்சமோ
- என்று விதிர்த்தேன்.
இல்லை, நீர்த்துளி.
பெயரற்ற பெருங்கருணை
விரலால் தீண்டியதோ?
விம்மியது மனம்
அற்பன்தான் நான். ஆனாலும்
அவ்வளவு அற்பமில்லை.

புத்தகங்களின் கூட்டறிக்கை- சுகுமாரன்

பொதுவாக நாங்கள் நிர்க்குணமானவர்கள்
எங்களைப் புரட்டும்போது
முனகலைவிடவோ
சுவாசத்தைப்போலவோ எழும்
மெல்லிய ஓசையிலிருந்து
நீங்கள் அதைத் தெரிந்துகொண்டிருக்கலாம்.

நீங்கள் அறியாத ஏதோ வனத்தின்
பூர்வஜென்ம பந்தம்
இன்றும் எங்களுக்குள் தொடர்கிறது
நாங்கள் புரண்டுகொடுக்கும்போது
ஒரு கானகமும் அசைவதைக் கவனித்திருக்கலாம்

நீங்கள் தொட்டுத் துடிப்பறியாத நாளங்களில்
மண்ணின் குருதி
இன்றும் எங்களுக்குள் பாய்கிறது
மை வரிகளுக்கிடையில் விரலோட்டும்போது
அதன் ஓட்ட அதிர்வை உணர்ந்திருக்கலாம்

உங்களில் யாரோ ஒருவரின்
கண்டு தீராக் கனவு
இன்றும் எங்களுக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
திரைக்காட்சியைப் போல
முதுகுக்குப் பின்னாலிருந்தல்ல
தொலைக்காட்சியைப்போல
தலைக்கு முன்னாலிருந்தே
அது எல்லார் கண்களுக்குள்ளும் நுழைவதைப் பார்த்திருக்கலாம்

பொதுவாக நாங்கள் சாத்வீகமானவர்கள்
எங்களில்
உன்னதர்களும் நடுவர்களும் கடையர்களும்
நிர்வாணிகளும் வேடதாரிகளும்
வழிகாட்டிகளும் திசைதிருப்பிகளும் இருப்பது உண்மை
எனினும்
நாங்கள் விதிகளை மதிப்பவர்கள்
எங்களைப்போல வரிசையைக் கடைப்பிடிப்பவர்களை
நீங்கள் ஒருபோதும் காணமுடியாது

நாங்கள் சமாதானப் பிரியர்கள்
எங்களுடைய
ஒரு பக்கம் கிழியும்போது
மறுபக்கம் தானாகவே பிய்த்துக்கொள்கிறது
அழிந்தும் அழியாமல் இருக்கிறோம் என்பது உண்மை
ஏனெனில்
நாங்கள் பக்கங்களில் மட்டும் இருப்பவர்களல்ல

நாங்கள்
குணமற்றவர்கள்
இன்முறையானவர்கள்
அமைதி விரும்பிகள்

எனினும் நீங்கள்
எப்போதும் எங்களை நினைத்து மிரளுகிறீர்கள்
வரிசையாக நிற்கும் நாங்கள்
விதிகளை மீறி
ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்படுவோம் என்றும்
அதன் உயரம்
உங்களை விட உயர்ந்திருக்குமென்றும்
அஞ்சுகிறீர்கள்
பிய்த்துக் கிழித்தாலும்
எங்கள் பக்கங்களுக்கிடையிலிருந்து
அழியாக் கனவுகளின் சாபம்
உங்களைப் பின்தொடரும் என்று
பயப்படுகிறீர்கள்

உங்கள் வெருட்சிக்குக் காரணம்
நாங்களல்ல
பயத்தின் களிமண் கால்களில் நிற்கும்
உங்கள் அதிகார உடல்

நாங்கள் அப்பாவிகள்
தன்னியக்கமில்லாத வெறும் ஜடங்கள் -
மனதில் ஜுவாலையுள்ள ஒருவர்
எங்களைத் தொடும்வரை