Sunday, November 11, 2012

வே. பாபு கவிதை


நான்கு இட்லிகளும்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலும்
முதல் இட்லியோடு
K தெருவின் 23ஆம் எண் வீட்டிற்குள்
அவன் நுழைந்தபோது
கோழிகள்
கூடையினுள் அடைந்துகொண்டிருந்தன
இரண்டாவது இட்லியோடு
போனபோது
அவை
குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தன
மூன்றாவது இட்லியோடு
போனபோது
அவற்றின் கண்கள்
கேமராபோல் சுழன்றுகொண்டிருந்தன
நான்காவது இட்லியோடு
தண்ணீர்ப் பாட்டிலையும்
எடுத்துச் சென்றபோது
அவை
அவனைப் பின்தொடர ஆரம்பித்தன

அப்பொழுதிலிருந்துதான்
நான்கு இட்லிகள்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலை
யார்
எடுத்துச் சென்றாலும்
அறம் அறம் எனக்
கோழிகள் கூவ ஆரம்பித்தன.

அகச்சேரன் கவிதை


அந்திக் கருக்கலில்
பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்
அந்திக் கருக்கலில்
மிதக்க ஆரம்பித்து விடுகிறது
என் நிச்சலனத் தனி ஏரி

அதில்
ஒரு பரிசல்
ஒரு துடுப்பு
உங்களை அழைக்கிறது
என் வற்புறுத்தலுக்குப் பிறகும்

இரும்பு ரேழிக்கு வெளியே
பேசத் துடிக்கும்
பைத்தியத்தின் கைபோல.

ஹெச். ஜி. ரசூல் கவிதைகள்


ஒரு மலைப் பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்
யாரைக் கூப்பிட்டாலும்
என்னைக் கூப்பிடுவதுபோல் இருக்கிறது
எதிரே மரத்தின் இலை அசையும் போதும்
பயம் தொற்றிக்கொள்கிறது
எனது நிழலைப் பார்த்தபோது
கூரிய ஆயுதங்களோடு
அது என்னைத் துரத்திவருகிறது.
எனது பெயரை திரும்பக் கூப்பிடுகிறாய்
அது எனது பெயரல்ல என்பது தெரிந்தும்.
எழுந்துநின்று வணங்குகிறேன்
வெவ்வேறு சைகைகள் காட்டி
என் இருப்பையே நிலைகுலையச் செய்கிறாய்.
எழுதிய பேனாவின் ரத்தத் துளியில்
வெற்றுத்தாள் நனைந்திட
எழுத்துகள் எதுவும் தெரியவில்லை.
ஒவ்வொருதடவையும் வெவ்வேறு வேண்டுதல்களோடு
கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன.
எனது பெயர் சொல்லி
என்னையே நான் கூப்பிட்டுக் கொள்கிறேன்
உட்கார்ந்திருந்த இருக்கை
திடீரென அசைகிறது.
ஒரு மலைப்பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்.
நான் குடித்த விஷம்
எனது கடைசி நம்பிக்கையை
இந்த மனுவில் சுமந்துகொண்டு வந்திருக்கிறேன்.
நீ இதை வாசித்து முடிக்குமுன்
ஒருவேளை
நான் குடித்த விஷம்
என்னைக் கொன்றுவிடக் கூடும்.
உன் முதுகில் அமர்ந்திருக்கும் குழந்தை
மிகப் பிரமாண்ட கட்டடங்களின் வாசலோரம்
ஒரு சின்ன எறும்பாய்
ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்.
உன் முதுகில் அமர்ந்திருக்கும்
குழந்தை கதறி அழுகிறது
குழந்தையின் அழுகையை அடக்க
வாயைப் பொத்துகிறாய்
மூச்சுத் திணறி
அது செத்துக் கொண்டிருப்பதை
உன்னால் உணர முடியவில்லை.
கடலின் கிளர்ச்சி
\கடலைக் கொல்வதற்கு ஒத்திகைப் பார்க்கிறாய்.
கடல் பிணமாகிவிட்டால்
எந்த அலைகளையும்
கடலால் எழுப்பமுடியாதென்ற
இறுமாப்பில் இருக்கிறாய்.
கடல்நீரை வற்றச் செய்வதற்கு
நீ செய்த மந்திரவாத வேலைகள்
பலனளிக்காமல் போய்விட்டது.
ஆழிக் காத்து வீசி எறிந்த
கடற்கரை மணல்துகள்பட்டு
கண்களைக் கசக்கிக் கொள்கிறாய்.
ராட்சச திமிங்கலங்களைப் பிடிப்பதற்கு
வலைகளை மணலில் வீசி காத்திருக்கிறோம்.
துப்பாக்கிகளால் குறிவைத்து
கடலலையைத் துளைக்கிறாய்.
தன் குஞ்சுக்கு உணவூட்டிக்கொண்டிருந்த
தாய்மீன் மடிந்து போகிறது.
கடலில் மிதக்கும் வள்ளங்கள்
கன்ணீரால் நிறைந்திருக்கிறது.
குண்டு துளைக்காத ஆடை போட்டு
அணு மின்பொம்மை
தனது ஆட்டத்தைத் துவக்குகிறது.
கடல் மீண்டும் கிளர்கிறது.
கொலைகாரன் இசைக்கத் துவங்கிய பாடல்
திறக்காத புத்தகத்தின் பக்கங்களை
அவன் வாசித்துவிட்டதாக
என்னிடம் கூறுகிறான்
ஒரு புத்தகத்தைத் திறந்து பார்க்காமலே
வாசித்துவிட்ட அவன்
எழுதப்படாத எனது புத்தகத்திற்கு
விமர்சனமும் சொல்கிறான்.
அவனின் அதீத ஆற்றல் கண்டு
புத்தகம் திகைத்து நிற்கிறது.
புத்தகத்தின் வரிகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த
கொலைகாரன் எழும்பிவந்து
விமர்சகனைத் தாக்க முற்பட்டபோது
புத்தகம் கிழிந்து தொங்க ஆரம்பித்தது.
விதவிதமாகப் புத்தகங்களை
கிழித்துத் தொங்கவிட்ட பெருமிதத்தில்
கொலைக்காரன்
புல்லாங்குழலெடுத்துத் தனது பாடலை
இசைக்கத் தொடங்குகிறான்.

Thursday, October 18, 2012

Salutes The Author

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! 
வசதியாகத்தான் இருக்கிறது மகனே… 
நீ கொண்டு வந்து சேர்த்த 
முதியோர் இல்லம் 

பொறுப்பாய் என்னை 
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ 
வெளியேறிய போது, முன்பு நானும் 
இது போல் உன்னை 
வகுப்பறையில் விட்டு விட்டு 
என் முதுகுக்குப் பின்னால் 
நீ கதறக் கதறக் 
கண்ணீரை மறைத்தபடி 
புறப்பட்ட காட்சி 
ஞாபகத்தில் எழுகிறது! 

முதல் தரமிக்க 
இந்த இல்லத்தை 
தேடித் திரிந்து 
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட 
அன்று உனக்காக நானும் 
பொருத்தமான பள்ளி 
எதுவென்றே 
ஓடி அலைந்ததை 
ஒப்பீடு செய்கிறேன்! 

இதுவரையில் 
ஒருமுறையேனும் 
என் முகம் பார்க்க 
நீ வராமல் போனாலும் 
என் பராமரிப்பிற்கான 
மாதத் தொகையை 
மறக்காமல் 
அனுப்பி வைப்பதற்காக 
மனம் மகிழ்ச்சியடைகிறது 
நீ விடுதியில் 
தங்கிப் படித்த காலத்தில் 
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற 
ஆவல் இருந்தாலும் 
படிப்பை நினைத்து 
உன்னை சந்திக்க மறுத்ததன் 
எதிர்வினையே இதுவென்று 
இப்போது அறிகிறேன்! 

இளம் வயதினில் 
நீ சிறுகச் சிறுக சேமித்த 
அனுபவத்தை 
என் முதுமைப் பருவத்தில் 
மொத்தமாக எனக்கே 
செலவு செய்கிறாய் 
ஆயினும்… 
உனக்கும் எனக்கும் 
ஒரு சிறு வேறுபாடு 
நான் கற்றுக்கொடுத்தேன் 
உனக்கு… 
வாழ்க்கை இதுதானென்று 
நீ கற்றுக் கொடுக்கிறாய் 
எனக்கு… 
உறவுகள் இதுதானென்று! 

Sunday, September 9, 2012

அனார் கவிதைகள்

1 கருமை
முற்று முழுதாய் இருட்டி
கறுத்துப்போன அமாவாசையின் ஏணியில்
உன் உயரங்களுக்கு
ஏறிவருகின்றன என் கால்கள்

இருட்டிய மழைக் காற்று
தூசிகளாலும் காய்ந்த இலைகளாலும்
ஆகாயத்தை நிரப்புகிறது

கருமுகில் மூட்டங்கள் மூடிய வானத்தின் கீழ்
காகங்கள் மாத்திரமே பறவைகள்

வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குள்
ஒரு ஜன்னல் என
என் கண்கள் திறந்துகிடக்கின்றன

முதலும் முடிவுமற்ற
உன் உச்சரிப்புகள்
இடத்தைப் பாழ்படியவைத்து
வவ்வால்களாகத் தலைகீழாய்த் தொங்குகின்றன

என் உதடுகளை
விரல்களைச்
சுழலும் காற்றில் உதிர்த்துவிடுகிறேன்

காரிருளில் பாய்ந்தோடும்
கறுப்புக் குதிரையின் கண்களில்
இறுகி மின்னுகிறது
என்னுடைய கண்ணீர்

கறுப்புமொழியின் கரைகளிலே
எங்கோ ஒதுங்கிக்கிடக்கும்
இரு கூவல் சங்குகள்
என்னுடைய காதுகள்
2 போகும் ரயில்
நிலைகொள்ளாது ஆடும்
பொன் மிளிர்வுத் தூவல்களில்
ரயில் பட்டுப்புழுவைப் போல் நீளுகிறது

வெள்ளைப் பேய்களும். . . கரும் பூதங்களும். . . உலவும்
ஆகாயம். . . பூமிக்கிடையேயான தண்டவாளத்தில்

எனக்குள் கேட்கின்ற ரயிலில்
காலங்களின் வெளியே
பயணித்துக்கொண்டிருந்தேன்

ரயிலின் பெட்டிகள் அனைத்திலும்
பருவங்களின் பன்மைகளாய். . .
பல்வேறு உருவங்கள் கொண்ட
நான் அமர்ந்திருக்கிறேன்

எங்கோவோர் திசையில் வைத்து
மறைந்த சூரியன்
பெட்டியில் வந்தமர்ந்துள்ளது

உலகம் இருளிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும் பயணத்திலிருந்தேன்

அருகாமையில் இருந்த அனைத்தும்
தூரத்துக்கே போய்விடுகின்றன

புகைக்கோடுகளில்
பழுப்புநிறத்தில்
பிரகாசமும் மங்கலுமான தடங்கள்

உள் நரம்புகளில்
ரயில் போகும் தடக். . . தடக். . . ஓசை
குளிரும் பனியின் வசியமாகக் கவியும் மேகப்பஞ்சு. . .
ரயிலின் நினைவைத் தழுவுகின்றன

அந்த ராட்சதப்பூரான்
வெறும் பெட்டிகளையா?
நிரப்பிவிடப்பட்டவற்றையா இழுத்துச் செல்கிறது?

3 படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன்
கோடை அந்தி நிழல் சாயும்
சதுக்கமொன்றின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான்

தொலைவுப் பாலத்தின் மேலே
சூரியனையும்
படிக்கட்டுகளின் கீழே
செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்

முழுச் சிவப்பேறிய சூரியன் பாலத்தின் மத்திக்கு
வந்ததும்
‘கொலை முயற்சி நடந்துகொண்டிருக்கையில்
எதையும் ரசிக்கமுடியாதென’
அன்று எழுந்து சென்றுவிட்டான்

படித்துறையில் அமர்ந்தவாறு
தூண்டிலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கையிலும்
சேர்ந்து குளிக்கையிலும்
‘சடுதியாக வெடித்து
வித்துகளை உதிர்க்கின்ற பருத்திகள்’ என
உலைந்து
நிலைகுலையுமொரு துயரப்பாடலையே
விடாமல் பாடிக்கொண்டிருந்தான்

நேர்ந்த விபத்தொன்றின் பிறகு
கடைசியாகப் பார்த்தபொழுது
மணல் குன்றுகளும் தாழை மரங்களும் தாண்டி
பாழடைந்த பேய் வீட்டின்
உடைந்த குட்டிச் சுவரருகே
காளான்களும். . . புற்களும் மண்டிய. . .
எட்டாவது படிக்கட்டில்
அவன் அமர்ந்திருந்தான். =

அரும்பு கவிதைகள்

மாற்றம்
நுழையத் தொடங்கும்போதே
என்னை மாற்றத் தொடங்கினாய்

விரும்பிக் கேட்ட இசையை
வெறுக்கச் சொன்னாய்

மகிழம்பூ மணமும்
உனக்கு உகந்ததாயில்லை

பறவைகளுக்கு நீர்வைப்பதிலும்
உவப்பில்லை உனக்கு

முழுவதும்
ஆக்கிரமித்த பின்னும்
நீ என்னவோ
அப்படியேதான் இருக்கிறாய்.

ஆனால்
ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில்
வந்துகொண்டுதான் இருக்கின்றன
என் பிரியத்துக்குரிய பூனைகள்
மௌனம்
மௌனம் சிறுசிறு துண்டுகளாகச்
சிதறிக்கிடந்தபோதே
ஒரு முறத்தில்
அள்ளியிருக்கலாம்

இப்போது
இந்த அறை நிறைந்திருக்கிறது
அதை நீ செய்வாயா
நான் செய்வேனா
என்ற யுத்தத்தில்

வேண்டாம்
நீயும் அதைச் சொல்லிவிடாதே

உயிர் அளித்து
ஊன் வளர்த்து
திரிய விட்டுவிடாதே

சிசு மரணம்கூடத் தாங்கேன்

இனி
தாய்மைக் கூறுடன் வாழ்ந்து முடிய
சித்தங்கொண்ட பின்
பிரிந்து பிறழ்வுற
அது நிகழ்ந்திட வேண்டாம்.

நீயும் அதைச் சொல்லிவிடாதே

Sunday, July 15, 2012

இளம்பிறை கவிதைகள்


நிரம்பித் ததும்பும் நீர்
உங்கள் கிணற்றிலிருந்து
தூர் வாரி வெளியேற்றப்படும்
வெற்று மண்ணாய்க்
கொட்டப்படுகிறேன் நான்.
என் கிணற்றில் எப்போதும்
நிரம்பித் ததும்பும்
நீராக இருக்கிறீர் நீங்கள்.
இறகுகள் உதிர்ந்துகிடக்கும் ஏரி
திருப்பித் துரத்தும் பேராறு
எதிர்பாரா தருணத்தில்
சாபச் சாம்பலை வீசிமறையும்
வரம் கேட்ட தெய்வங்கள்

புழுதி மண்ணில்
புரண்டழுது அடம்பிடிக்கும்
குளிப்பாட்டி துடைத்தெடுத்த
நினைவுகள் தனித்தனியே

விழிப்பைச் சுற்றிலும்
பசித்த மலைப் பாம்புகளாகத்
தொங்கிக்கொண்டிருக்கும்
பயத்தின் நாவுகள்
இருள் வனத்தில்
மின்மினிப் பூச்சிகளாகிப்
பறந்துகொண்டிருக்கும் உயிர்

மனம் கவ்விப் பறக்கும்
பெரும் பறவையொன்றின்
வெளிர் வண்ண இறகுகள்
உதிர்ந்து கிடக்கும்
வற்றிய ஏரியில்
வானம் உரசிப் பறக்கும்
முன்பு அமர்ந்து மீன் தின்ற
பறவைகளைப் பார்த்து
வரப்போகும் மழைக்காலத்தை
எண்ணிக் கொண்டது ஏரி
நீங்களும் நனைவீர்
ஜென்மம் முழுதும்
செலவழித்தே வாழ்ந்தாலும்
தீரப் போவதில்லை
அவமதிப்புகளால் பொறிக்கப்பட்ட
என் துயர நாணயங்கள்

என் ஒரு கரத்தை
இன்னொரு கரத்தால்
பற்றிக்கொண்டு
எழுந்து நிற்பது உங்களை
சபிக்கவோ . . . முந்திச் செல்லவோ . . . என்ற
அச்சம் பதற்றம் அறவே தவிர்ப்பீர்
வாழ்வதற்காக மட்டுமே

எரியும் காட்டில்
தீச்சுடர் பார்க்கத்
திரளும் நீங்களும்
நனைந்து மகிழும்
மழைநாள் . . . வரும் எனக்கு.
கனவுகள் எவையுமற்று
பெரு வெள்ளச் சுழல்களில் சிக்கி
உள்ளிழுத்துச் செல்லப்படும்
நீந்தப் பழகாத கன்றுக்குட்டியின்
உயிர் போராட்டத்துடன்
விடியும் பொழுதுகளில்
தடைகள் கடந்து
விரைந்தோடிக்கொண்டிருக்கிறேன்
என் தூரம்
எங்கோ கிடக்கிறது
அன்பு வண்ணம் பூசப்பட்ட உள்ளங்களின்
வஞ்சகம் புரிந்த பின்
பொய்யும் நடிப்பும்
பொறுக்க முடியா
இயல்பின் நெருக்குதல் சுமந்து
விரைந்தோடிக்கொண்டிருக்கும் நானோ

அசதியுறும் போதெல்லாம்
அவமதிக்கப்பட்ட பிரியங்களின்
உறைந்த ரத்தகட்டிகள்மீது
சற்றயர்ந்து, கண்மூடிக்கொண்டிருக்கிறேன்
கனவுகள் எவையுமற்று.

Thursday, June 28, 2012

பத்மபாரதி கவிதைகள்


(அ)
சம்ஷாபாத் விடுதியின் கதவுகள்
மிக அலங்காரமானவை
அழகிய சிற்பங்கள் கொண்டவை
உனது சொற்களைப் போன்ற
தேர்ந்த கவனத்துடன் துல்லியமாகச்
செதுக்கப்பட்ட சிற்பங்கள்
கச்சிதமான இடத்தில் எவரையும்
மெல்லத் தொட்டுவிடுபவை
அதன் பிறகு ஒன்றுமேயில்லை
கரைந்து கரைந்து மிக ஆழத்தின்
துக்கங்களுக்கான
பெருகி வழியும் கண்ணீருடன்
இந்த உலகமே அரவணைக்கக் கதறுகிறார்கள்
மிகமிக லேசான மனத்துடன்
தங்கள் சின்னஞ்சிறு கரங்களால்
உலகத்தைத் தழுவிக்கொள்கிறார்கள்
நீயோ இந்த உலகத்துக்கு வெளியே
நிறைந்த கவனத்துடன் ஒளிந்துகொள்கிறாய்
அழகிய சிற்பங்கள் கொண்ட
இந்த அகன்ற கதவுகள்
தங்களுக்குப் பின்னே
அறைகளெவையுமற்றிருப்பது போலவே
மறைந்துபோகிறாய் நீயும்

(ஆ)
இலக்குகளற்ற இந்தப் பயணத்தில்
நகர்ந்து செல்லப்
புதிய திசையின் வசீகரங்களைத்
துளித்துளியாய் வியக்க
எனது விழிகளை
என்னிடம் அளிக்கிறாய்
எனது விரல்கள் குரல் செவி
இன்னும் இந்த உடலும் மனமும்
என்னிடமே இருக்கும்படி
சுதந்திர எழுச்சி அல்லது
விதிகளெவையுமற்று இன்றும்
கிழக்கில் உதிக்கும்
சூரியோதயத்தைப் போன்று
அவ்வளவு சுதந்திரத்துடன்
தங்கள் அழகில் ஈர்ப்பில் வண்ணங்களில்
காற்றில் தூவும் மணங்களில் லயித்திடாமல்
தொடர்ந்து பூத்துக்கொண்டேயிருக்கும்
இந்த மலர்களைப் போன்று
அவ்வளவு சுதந்திரத்துடன்
என்னிடமிருக்கும்படி
என்னை என் எல்லாவற்றுடனும்
என்னிடமளிக்கிறாய்

(இ)
இந்த இடம் ஏன் எனக்குச்
சமயங்களில் ரோமானிய
மைதானங்களை நினைவூட்டுகிறது
உங்கள் அழைப்பைச்
சரியாகப் புரிந்திருக்கிறேனா என்றேன் அச்சமுறுகிறேன்
இனி ஒன்றுமேயில்லை எனும்படி
நான் திறந்திருக்கிறேன்
நீங்களும் அதை உணர்ந்திருக்கிறீர்கள்
உணர்ந்திருக்கிறீர்கள்தானே
உங்களில் துளிர்க்கும் கண்ணீரும்
என் ஆவி அமைதியுறும்படியான அரவணைப்பும்
இருந்தும் ஏன் தனிமையடைகிறேன்
உள்ளே ஆழத்தில் செல்லச் செல்ல
நான் அடையும் பதைபதைப்பு
என்னோடிருக்கும் உங்களுக்குப் புரிந்திருக்கும்தானே
சொற்களை ஏன் நமக்கிடையில் நிறுத்துகிறீர்கள்
உங்கள் கையிலிருக்கும் வாளின் கூர்மையை
அறியாதவனிடம்
ஏற்கனவே ஆழத்தில் தத்தளிப்பவனிடம்
அதன் பளபளக்கும் கூர்மையைப் பிரயோகிக்கிறீர்கள்
துளிமாசும் ஒட்டியிராத
இந்த மனத்துக்காகத்தானே தவமிருக்கிறோம்
உனது ஆழங்களை நீதான் தொடவேண்டுமெனும்போது
ரோமின் அன்றைய மைதானங்களில்
தனித்துத் தவிக்கிறேன்
நல்லது
தேவதைகளின் பரந்த இறக்கைகள்
வானத்தின் பிரம்மாண்டத்திலிருந்து
துளி ஒளியைக் கசியச்செய்திடும்
காலத்துக்காக
நிழலின் கருமையை இன்னும் கூட்டியபடி
அடர்ந்த
ஆலமரப்பொந்துகளில்
சொக்கிக்கிடக்கும் சிட்டுக்குருவியின்
சின்னஞ்சிறு கண்மணிகளில் பட்டுப்
பிரகாசிக்கும் துளிக் கிரணத்துக்காகக்
காத்திருக்கலாம்தான்.

(உ)
உன்னைச் சந்தேகிக்கவில்லை..

இந்தப் பேரொளியில்
மூழ்கிக்கொண்டிருக்கும்போது
நான் தனித்திருப்பதாகவே தோன்றுகிறது
இது உன்னை அவமதிப்பதல்ல
உன் பிரியத்தைச் சந்தேகிப்பதல்ல
மீளாத் துயரில் உன்னை ஆழ்த்துவதல்ல
நீயும் அறிவாய்
எங்கிருக்கிறேன் நானென்பதை
பிரகாசத்தின் உச்சம்
என்னை இல்லாமலாக்கிக்கொண்டிருப்பதை
வழியும் கண்ணீரில்
நாமறிந்த உணர்வுகளின்
சாயல் இல்லாதிருப்பதை
உன்னைச் சந்தேகிப்பது
துயரில் ஆழ்த்துவது
உனது அண்மையை மறுதலிப்பது
எல்லாமே எனக்குச்
செய்துகொள்வதாகத்தான் இருக்கிறதென்பதை
நீ அறிவாய்தானே
இந்தப் பேரொளி இருவிழிகளைக் குருடாக்குவது
சுற்றத்தை இயலிருப்பை
அறியாமைக்குள் தள்ளுவது
அறியாமையின் குற்றவுணர்வைப் போஷிப்பது
அது வீணானதொரு உணர்வு எனினும்
புரிந்துகொள்ளப்படாமல் போவதான சாபத்திலிருந்து
என்னை ரட்சித்துச்
சேய்மையிலுமான உன் அருகிருப்பு
இந்தப் பூமியில் என்னை நிறுத்தும்தானே.

(ஊ)
என்மீது கோபங்கொள்ளுங்கள்
உங்கள் கையிலிருக்கும் பொருளைத்
தூக்கியெறியுங்கள்
கொலைவெறித்தாக்குதல் நடக்கட்டும்
என் இருப்பின் மீது
உங்கள் நேசத்தில் மூழ்கி
இறப்பது அல்லது ஜீவித்திருப்பது
என்மீதான துயரம் சந்தேகம் அல்லது மகிழ்ச்சி
இவையெல்லாமே
ஒரு புன்னகையைத்தான் தருகிறது
இவை எதுவும்
தியாகம் அல்லது வியப்பின் எச்சமன்று
என்மீதான உங்கள் குறுக்கீடு
மகிழ்ச்சியளிக்கிறது
என்னைக் கையளித்துவிடுகிறேன் உங்களிடம்
அதற்கான மனவுறுதியைத் துணிச்சலைத் தந்தது
நீங்கள்தானே
உங்கள் வெளிப்பாடுகளெல்லாம்
எனது இருப்பின் அல்லது இல்லாமையின் மீதான
உங்கள் பிரியமன்றி வேறென்ன

(எ)
எனது அன்பை யாரிடம் பகிர்ந்துகொள்ள

உனது பேரன்பை யாரிடம் பகிர்ந்துகொள்வாய்
என்றந்தக் கேள்வி எழுமுன்னேயே
என்னைப் பதைபதைப்புக்குள்ளாக்குகிறது
அது நிகழ்ந்துவிடக் கூடாது என்று
உள் ஆழத்தில் விரும்புகிறேன்
ஆனால் விதிகள் நம் விருப்பங்களை வென்றுவிடுகின்றன
இந்த உலகமே என்மீது நேசத்தைப் பொழிகையில்
எப்படி நான் உன்னுடன் தனித்திருக்க விரும்புவது
எப்படி நாம்
நேசத்தின் படிநிலைகளை உள்வெளியாக
மேல்கீழாக அடுக்குவது
அவ்வளவு கொடூரமான மனம் நமக்கிருக்கிறதா
விதிகளின் மீது முரண்பட நான் இன்னும் துணியவில்லை
எனது அந்தத் துணிச்சல் உன்னிடம்தானே இருக்கிறது
ஏதோ ஒரு கணத்தின் மீச்சிறு துளியில்
மெலிதானதொரு வற்புறுத்தலாக
என் பிரியம் அமைந்துவிடுவதை வெறுக்கிறேன்
ஆனால் ஏற்றுக்கொள்கிறாய் அப்படியே என்னை
மறுமுறை என்னை இழுத்து அரவணைக்கையில்
உன் மனத்தின் மீத்தூய்மை பொங்கும் பிரியம்
அதன் கதகதப்பு
எனது ஆவியை அமைதிப்படுத்துகிறது
விதிகளற்று முகிழ்க்கும் பிரியமது
இந்த உலகம் உருவானபோது
துளிர்த்த பிரியமாக அடைகிறது என்னை

பா. அகிலன் கவிதைகள்


கால்
மனிதர்கள் சுவாசிக்க முடியாதவொரு காலை
எடுத்துவந்தார்கள் இன்று
தற்காப்புப் படைகள் தரித்த பின்
ஒழுகும் சீழுக்கு ஒரு கிண்ணமும்
சிதம்பிய தசைக்கு இன்னொரு பாத்திரமும் வைத்தபின்
பிடுங்கியுடன் அமர்ந்து
நெளியும் புழுக்களைப் பிடுங்கத் தொடங்கினேன்.

அதிசயம் தெரியுமா?
காலுக்கு ஒரு தலையும்
தலைக்கு இரண்டு கண்களும் இருந்தன.

பிண இலக்கம் 178
இரத்த விளாறாய்க் கிடந்தான்:
பாதித்தலை
பிளந்த நெஞ்சறையில் நூலிட்டு இறங்க
திரவமாய்க் கசிந்தது இருள்
தடுமாறிக் கடந்தால்
காத்துப் பசித்தவொரு முதிய தாய்
ஒரு நோயாளித் தந்தை
மாலையிட்ட சில புகைப்படங்கள்

தேகத்தின் பாதாளத்துள் இறங்க முதல்
முற்றிலாக் கேவலால் துரத்துண்டோம்
முள்ளாள் கிடந்த கனத்தது கண்ணீர்

அவசரமாய் வெளியேறிய பின்
மூடி
துணிப் பந்தொன்றை அடைத்து
தைக்கத் தொடங்கினேன்.

பிண இலக்கம் 182
சிதைவாடை
நீக்கினால்
ஓலமுறைந்து சீழ்கொண்ட இன்னோராடை

முலையொன்றில்லை:
மறு முலையில் கிடந்தது ஒரு சிறுவுடல்
பிரித்தால் பிரியாது
ஓருடலாய் ஒட்டிக் கிடந்தது

சுத்தப்படுத்திய பின் எழுதினேன்
பிண இலக்கம் 182.

பிண இலக்கம் 182உம்,
உயிரிலக்கம் 02உம்
உயிரில்லை:
இரத்தம் ஒரு சேலை
யோனியிற் தொங்கிய தொப்புழ் வீழ்தில்
ஆடியது ஓர் புத்துடல்.
வெட்டிப் பிரித்தோம்:
குலுக்கிய பின் அழுதது.

எழுதினேன் பேரேட்டில்
பிண இலக்கம் 183
உயிரிலக்கம் 02.

பொதி இலக்கம் 106 உம் பிறவும்
முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை.
இரத்த வெடில்
சிதம்பியழுகிய உடலைத் தொட முதல்
முறிந்தன என்புகள்

“குழந்தைகள் போலும்”

முடையாய்க் கட்டிய பின்
ஓரமாய்க் குவிக்கத் தொடங்கினோம்.

மாந்தோவின் பெண்கள்*
ஒட்டிக் கிடந்தது உயிரின் கடைசிச் சவ்வு

அருகு வர
யாந்திரிகமாய் நீக்கினாள் கீழாடை
இரத்தக் கிடங்கில்
மொய்த்துக் கிடந்தன ஆயிரமாண் குறிகள்

நீரள்ளிப் பெய்த பின்
அவள் மூளையிலிருந்து
ஒவ்வொரு ஆண்குறியாய் பிடுங்கத் தொடங்கினேன்.

காலம் கலங்கியபடி மடிந்தது.

*சதாத் ஆசன் மந்தோவின் சிறுகதை ஒன்றில் வரும் தொடர்ச்சியாக வன்புணர்ச்சிக்கு உட்பட்ட பெண் பாத்திரம்.
கைகள்
மணிக்கட்டுகள் சில
முழுக்கைகள் சில
அங்குமிங்குமாய் உடைந்தும் கிழிந்த வேறும் பல

ஒன்றெடுத்தேன்
பராயம் இருபதிருக்குமோர் ஆண் கை
முரட்டு விரல்கள்
நெடிய ஆயுள்ரேகை கைவிட்டிறங்கி
மேலும் பயணமானது

இறங்கிப் பார்த்தேன்
பச்சை குத்தியிருந்தான்
“சஞ்சுதா”

விசரி
காயமேதும் இல்லை.

ஒற்றையாடையில் மலமும்
மாதவிடாய் இரத்தமும் ஊறிக்கிடக்க
மாற்றுடை மறுத்தாள்
ஊன் மறுத்தாள்
பகலையும் இரவையும் ஊடறுத்தலறினாள்
மகவே
மகவே
மாயமே

துரத்தி
விலங்கிட்டுக் கூடிய பின்
உள மருத்துவருக்கு சிபாரிசு செய்தோம்.

பா.அகிலன்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். முதலாவது கவிதைத் தொகுதியான பதுங்கு குழி நாட்கள் 2001இல் வெளியானது. இரண்டாவது கவிதைத் தொகுதி சரமகவிகள் என்னும் தலைப்பில் 2011இல் யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ளது. சரமகவிகள் தொகுதியிலிருந்து இந்தக் கவிதைகள் எடுக்கப்பட்டன.

Sunday, May 13, 2012

உரிைம - கு.விநாயக􏰔ர்த்தி


இ􏰍தி வார்த்ைத - - சுந்தர்ஜி


விளிம்􏰂 - - நீ.ஸத்யநாராயணன்



உரிைம - கு.விநாயக􏰔ர்த்தி


ுடிேயறிய􏰌டன்
வழக்கமான சம்பாஷைணகைள ஆரம்பித்தி􏰃ந்ேதன்.
அண்ைடவட்ீ டாரிடம் அறி􏰉கப்ப􏰅த்திக்ெகாண்டி􏰃க்ைகயில் அங்கு நின்றி􏰃ந்த குழந்ைதயிடம்
'உங்க ேப􏰃 என்ன?’ என்ேறன்.
'தமிழ்... அரசி’ என்கிறாள்
கன்னக் குழி விழ.
வழக்கம்ேபாலேவ
வம்பி􏰇க்கும் ெதானியில்
'இனிேம இ􏰆 எங்க அம்மா’
என்கிேறன்.
'ம்ஹூம்... எங்க அம்மா’ என்கிறாள். 'சரி, இ􏰆 எங்க அப்பா.’
'ம்ஹூம்... எங்க அப்பா.’
இப்படியாக
தாத்தா, பாட்டி என நீள்ைகயில் வாசலில் விைளயா􏰅ம்
குழந்ைதகளின் குரல் ேகட்􏰅
ெவளிேய ஓடிவி􏰅கிறாள். விைளயாட்􏰅 􏰉டிந்􏰆
தி􏰃ம்பிச் ெசல்ைகயில்
பக்கத்தில் நிற்கும் குழந்ைதகளிடம் கண்கைள அகல விரித்􏰆
மார்பின் ேமல் ைக ைவத்􏰆
என்ைனக் காட்டி
'இ􏰆 எங்க மாமா’ என்கிறாள் உரிைம􏰎டன் தமிழரசி.
இல்ைல,
எங்க தமிழ்க் குட்டி!



Saturday, May 12, 2012

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் -


மாலதி கல்பனா அம்புரோஸ் கவிதை
தொலைந்த நிலம்
இடம்பெயரும் உறைந்த மென்காற்று
குரலற்று அலகு இழந்த பறவைகள்
இலைகளும் நிழல்களுமற்ற மரங்கள்
முகிழ்த்தாலும் மலர முடியாமல் விம்மும் பூக்கள்

உதிர்ந்து விழ அஞ்சும் ஒரேயொரு கண்ணீர்த் துளி
சுவரை உடைத்துவிடத் துடிக்கும் ஒரேயொரு
நெடுமூச்சு
பாட எவருமே அற்ற மாபெரும் பாடல்
ஆன்மாவைத் தொலைத்துவிட்ட
ஒரு சொர்க்க நிலம்.
 

மாலதி கல்பனா அம்புரோஸ் கொழும்பில் வசித்துவரும் சிங்களக் கவிஞர். சிங்களத்தில் கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கவிதைகளையும் கவிதை குறித்த கட்டுரைகளையும் மொழிபெயர்த்துவருகிறார்.

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் - மஞ்சுள வெடிவர்த்தன கவிதைகள்


1. தராக்கி (சிவராமுக்கு)
துயிலா இரவைக் குலைக்கும்
இருளின் சிற்றலைகளை ஊடறுத்து ஒளிரும்
ஒரு சிறு தாரகை

பாடும் மீன்களின் இரவில்
தராக்கி
உனது காமக் குரல் உயிர்பெறுகிறது

அந்தப் பாடல்கள் இனியன அல்ல
கொடியன
இதுவே உண்மை; யதார்த்தம்

இளங்காற்றில் அலையும் குருதியில்
உனது குரலின் நினைவு
தேங்கி நிற்கிறது

அன்று புயலுற்ற பயங்கர இரவில்
ஏன்
முடிவற்ற ஒளியைத் தேர்ந்தெடுத்தாய்?

நாட்டின் வெட்கத்தின் திரை விலக
இரக்கமற்ற சிரிப்புகளின் எதிரொலி
விம்மும் இதயங்களின் வாயில் திறந்துகொள்வது
உனது குரலைத் தழுவ மட்டுமே
2. எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை
ஈஃபிள் கோபுரத்தின் உச்சியின் மேல்
நிலவு எழுகிறது
கனவும் மேலெழத்
துப்பாக்கியால் எனது இதயத்தைச் சுடுகிறேன்

இன்று எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை

லா சப்பேல் வீதியின் தெருவிளக்குகள்
இருளில் குனிந்து நிற்கின்றன
எனினும் ஒளி பரவுகிறது
ஒவ்வொன்றாக அவற்றுக்கும் வெடிவைக்கிறேன்

தெரியாத தமிழர் ஒருவர் முன்னே வருகிறார்
‘வணக்கம்’ சொல்கிறேன்
‘தீக்குச்சி இருக்கிறதா?’ என்கிறேன்

அவருடைய கண்கள் வாழ்வைத் தேடி அலைவதை
அப்போது பார்க்கிறேன்
நான் நெருப்பைக் கேட்கிறேன்
அவரோ வாழ்க்கையைக் கேட்கிறார்

எரியும் உடல்களிலிருந்து
சிகரெட் மூட்டிய தலைமுறை அல்லவா நாம்?
சிகரெட் புகைத்தபடியே
தெருவில் துவண்டு சரிந்து நடந்து செல்லும்
இறந்த மனிதன் ஒருவன்
உனது புத்தாண்டுக் கனவுகளில் வருகிறானா?
அவருக்கு வீடு இருந்தது
ஆனால் படுக்கக் கட்டில் இல்லை
ஊர் இருந்தது
ஆனால் நடந்து திரியத் தெருக்கள் இல்லை
நாடு இருந்தது
ஆனால் புன்னகைக்கும் உரிமை இல்லை

இன்று
எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை

பாற்சோற்றை உன் வாய்க்குள்
நிறைக்கிறபோது
உனக்குக் குருதி மணக்கவில்லையா?
என்னே சுவை அது!
3. நிலம் இழந்த தாய்நிலம்
இளம் இராணுவ வீரனே
தமிழர்களின் தலைக்கு வெடிவைக்கிறாய்
எவ்வளவு மென்மையானது உன் ஆயுதம்?

குரூரமான பதுங்குகுழி
எப்போதுமே சூதாட்டத்துக்குத் திறந்திருக்கிறது
அங்குப் பகடைக்காய்களின்
நிரந்தர ஆக்கிரமிப்பு

நீ
அவர்களின் கண்களைக் கட்டலாம்
ஆனால் ஆயிரம் கண்கள் திறக்கின்றன
நீ
அவர்களின் கைகளைக் கட்டலாம்
ஆனால் ஆயிரம் கைகள் வீறுடன் மேலெழுகின்றன

அம்மணமாக்கி அவர்களை நீ சுட்டபோது
அவர்களின் கடைசி விருப்பம்
அந்தத் தாய்நாட்டைத் தழுவியபடி
நிலத்தில் வீழ்ந்தது
உனது உருமறைப்பு அம்மணமானது

இளம் இராணுவ வீரனே
தமிழர்களின் தலைக்கு வெடிவைப்பது
உனக்கு விளையாட்டு
எவ்வளவு மென்மையானது உனது ஆயுதம்!
4. பாலச்சந்திரன்
சிறு நிலா
சிறு நிலாவா?
அதைச் சொல்லவும்கூடுமோ?

பத்துத் திக்கும் சுடரொளி வீசிய
சூரியனைக் கொன்றது சிங்கம்

தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால்
சுவரோவியங்கள் வரையப்படுகின்றன

சினத்துடன் சிங்கம்
சிறிய நிலாவையும் கொன்றபோது
முகில்களின் திரையைக் கிழித்து
உள்ளே ஒளிந்தது நிலா
பயத்தில்
ஒடுங்கின நட்சத்திரங்கள்

இருளின் சஞ்சாரம்
நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும்
அப்போது
எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது.

மஞ்சுள வெடிவர்த்தன(37), ராவய சிங்கள வார இதழில் பணியாற்றியவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மரியாவும் மேரியும் தெய்வ நிந்தனை என்னும் குற்றச்சாட்டில் இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையின் கண்டனத்துக்கு ஆளாகியது.
அந்தக் குற்றச்சாட்டில் இலங்கைப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். நூலும் தடைசெய்யப்பட்டது. இரண்டு கவிதை நூல்களும் ஒரு நாவலும் வெளியாகியுள்ளன. தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டமையால் இலங்கை அரசின் துன்புறுத்தலுக்கு ஆளானார். இப்போது பிரான்சில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்துவருகிறார்.

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் - அஜித் ஹேரத் கவிதைகள்


வழிபாடு
புதுக்குடியிருப்புக்குச் செல்லும் தெருவில்
உன்னை அவர்கள் கிடத்தினர்
எறிகளண் துண்டித்த உனது செயற்கைக் காலை
தீய்ந்து கருகிச் சிதறிய மண்ணில்
உன்னருகே வைத்தனர்.


முழந்தாளிட்டு
அந்தச் செயற்கைக் காலை வணங்குகிறேன்
மகனே.
சிலுவையில் அறையப்பட்ட
யேசுவின் பாதங்களைப் போலவோ
தேவதத்தனால் காயம்பட்ட
புத்தரின் காலைப் போலவோ
இந்தக் கால் குருதி சிந்தவில்லை.


எரிந்துபோன உன் உதடுகளைத் திறந்து
எனக்குச் சொல்
மகனே
உனது கடைசிக் கனவைப் பற்றி
தெருவோரத்தில் உனது மரணம் நிகழும் முன்
உன் இறுதித் தாக்கத்தைப் பற்றி.


பரவசம் தரும் இளமைக் கனவொன்றில்
உன் தோழர்களுடன்
அப்போது முழுமையாக இருந்த
உன் கால்களுடன் ஓடித் திரிந்தாயா


இருளிலும் இருளான இரவொன்றில்
குருதி கசியும் வெறுங்கைகளால்
இழந்துபோன காலைத் தேடி
முடிவற்றுப் பெருகும் மனிதப் புதைகுழி மேடுகளைத்
தோண்டுகிற
தனித்து அலையும் ஒருவனைப் பற்றிய
கொடுங்கனவா
மெல்ல மெல்ல ஒளி இழந்துபோகிற
உன் கண்களில்
எங்கள் பாவங்களும்
நூற்றாண்டுக் கால எங்கள் தோல்விகளும்
எழுதப்பட்டுள்ளன.


முகமற்று மரித்த எல்லோர் பேரிலும்
இல்லாமல் போன எல்லாக் கடவுளர் பேரிலும்
மகனே
எங்களை மன்னித்துவிடு.


படுகொலைகளுக்குப் பிற்பாடு
எந்தச் சாட்சியமும் இல்லை
எந்த நீதிபதியும் இல்லை
குற்றவாளிகளையும் கொலையுண்டோரையும் தவிர.
ஏழு கனவுகள்
முதல் கனவு: நீ கவனிக்கவே இல்லை
முடிவிலியின் கற்பனைக்கு எட்டாத
புள்ளிகளிலிருந்து
நான் விழுகின்றேன்
நகரின் தெருக்களில்
சேற்று நீர் பெருகுகிறது.
நீரில் விழுவதற்குக் கணப்பொழுது முன்பாக
மிதந்து வரும் சிதிலங்களுக்கு நடுவில்
ஒரு தொட்டிலில்
குழந்தையாக விழித்தெழுகிறேன்
தங்களுடைய ஆடைகளை
அள்ளித் தூக்கியபடி
சேற்று நீரில் நடந்துவரும்
ஆண்களையும் பெண்களையும்
கடந்துபோகிறேன்.
புன்னகையுடன் கையசைக்கிறார்கள்.


தொட்டில் கவிழ்ந்து
சாக்கடையுள் வீழ்கிறபோது
தாங்கொணாக் குளிரில் நடுங்கித்
தொட்டிலை விட்டு வெளியேறி
ஏக்கத்துடன் உன்னைத் தொடர்கிறேன்
நீ கவனிக்கவே இல்லை
திடீரென
யாரோ என்னை இழுத்துப்
பெருகும் நீருள் வீசியெறிகிறார்
மீளவும்
வீழ்கிறேன், வீழ்கிறேன்
நிலத்தில் மோதும் முன்பாக
விழித்தெழுந்ததாய் உணர்ந்தேன்.
இரண்டாவது கனவு: உனது முத்தம் எனது சாபத்தைப் போக்கவில்லை
முடிவற்ற மழை
சாளரத்தின் வெளியே பார்க்கிறாய்
உனது மூச்சிலிருந்து எழும் புகார்
நக்கிள்ஸ் மலைத் தொடரை மறைக்கிறது


பச்சையத்தின் வீச்சில்
தூக்கத்தில் ஆழ்கிறேன்
விழித்தெழுகிறபோது
ஒரு கண்ணீர்த் துளி உனது கண்ணிலிருந்து
இறங்குகிறது
அறுவைக்கான ஆய்வுக்கூட மேசையில்
விரிந்துகிடந்தபடி
உன்னைப் பார்க்கிறேன்
ஒரேயொரு முறை, அதுதான் இறுதி,
என்னை அணைத்து முத்தமிடுகிறாய்
சாளரத்தைத் திறந்து
என்னை வெளியே வீசி எறிகிறாய்
அன்றைக்கு ஆய்வுக்கூடத்தை விட்டுச் சென்றாய்
பள்ளிக்குத் திரும்பவே இல்லை
உனது முத்தம்
எனது சாபத்தைப் போக்கவில்லை
வீழ்வதற்கு முன்பாக நான்
விழித்தெழவும் இல்லை.
மூன்றாவது கனவு: வெல்ல முடியாத பாலம்
பாலத்தின் மேல்
அம்மணமாக உன்னை
முழந்தாளில் இருத்துகிறார்கள்
உனது கைகளைப் பின்புறமாகக் கட்டுகிறார்கள்
அலறுகிறேன் உன்னைக் காப்பாற்ற
எஞ்சியிருந்த கடைசித் துப்பாக்கியை
ஒளித்த இடத்தை
நீங்கள் யாருமே சொல்ல மறுக்க
நான் நிலத்தைக் கிளறுகிறேன்
துப்பாக்கி தன்னைத் தானே புதைத்திருந்தது
அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை
ஆற்றில் பிணங்கள் மிதந்துவருகின்றன.


எப்போது இந்தப் பாலத்தைக்
கடக்க நேர்ந்தாலும்
காயம்பட்ட இதயத்துடன்
நீரில் வீழ்கிறேன்
இன்னும் வீழ்கிறேன்
நான்காவது கனவு: நீல ஆகாயத்தையும் முகில்களையும் பார்த்தேன்
பழமரம் கொடியாகப் படர்ந்திருக்கிற வேலியோரம்
தடை முகாமில்
உக்கிப்போன மரத்துண்டே கட்டிலென
அமர்ந்திருக்கிறேன்
தப்பிச் செல்லும் வழிகளைப் பற்றியே எண்ணம்
சுரங்கம் அமைத்தால்
ஏழு மலைகளுக்கும் பெருங்காடுகளுக்கும் அப்பால்
இன்னொரு நீல ஆகாயத்தையும்
முகில்களையும் பார்க்க முடியுமென
நீ
என் காதுகளில் மெல்லச் சொல்கிறாய்.


கைவிடப்பட்ட பொதுக் கிணற்றில்
நீர் சாந்தமாக இருக்கும் மதியத்தில்
கிணற்றுக் கட்டில் அமர்ந்தேன்
கிழே தெரிந்தது சுரங்கம்
பூமியின் மறுமுனையில்
இன்னொரு நீல ஆகாயத்தையும்
முகில்களையும் காட்டியது அடியற்ற கிணறு
அங்கிருந்து
என் கண்களுடாகவே நீ என்னைப் பார்க்கிறாய்


படிமங்கள் கலைகின்றன
தடுப்பு முகாம் கைதிகளின் வாளிகளால்
நீர் கலங்கும் முன்பாக
இந்தக் கிணற்றூடாகத் தப்பி ஓட விரும்புகிறேன்
மறுபடியும்
முடிவற்ற குகை ஊடாக
ஆகாயத்தை நோக்கி வீழ்கிறேன்.
ஐந்தாவது கனவு: நீலத் தரப்பாள்* சிதை
நீலத் தரப்பாள் குடிசையும்
அதனுள் தொட்டிலும் எரிகிறபோது
உன் பிஞ்சுக் கைகளும் கால்களும் எரிய
வெளியே தவழ்ந்து வந்தாய்
அச்சம் நிறைந்த உன் போராட்டத்தை
கையறு நிலையில் பார்க்கிறேன்
ஒரு கணம் எங்கள் கண்கள்
சந்தித்துக்கொள்கின்றன
அதை நீ கவனித்தாயா என்பதை
நான் ஒருபோதும் அறியப்போவதில்லை
உறைந்துபோயிருந்த என்னைக் கடந்து சென்று
குழிக்குள் விழுந்தாய்.


பிணங்களுடனும் புகையுடனும்
மறைந்து போய்விட்டாய்
அந்தக் குழியை மண்ணால் மூடி
ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பின
புல்டோசர்கள்
அவை மெல்ல மெல்லத் தொலைவுகொண்டு
மறைந்தாலும்
எனக்குத் தெரிவதெல்லாம்
மண்ணின் மேல் உன் பிஞ்சுக் கை.


*TARPAULIN
ஆறாவது கனவு: தாமதமாக வந்ததால் உன்னை இழந்தேன்
இன்னும் இரவு
துயர்மிகு விழிப்புடன் எழுகிறேன்
யாரோ எங்கோ எனக்காகக் காத்திருப்பதான
உணர்வு
யாரென அறியேன் எங்கே எனவும் தெரியாது
அது நீயாகவும் இருக்கக்கூடும்
சந்திப்புகள், பணிகள் என என் நாள் நிறையும்
கடந்துபோன நாள்களும் மாதமுமே
எஞ்சி இருக்க


கி - 9 தெருவில் நடந்து
கடைசி ராணுவக் காவல் அரணையும் தாண்டி
வருகிறேன்.
நீ இல்லை
தாமதமாக வந்துவிட்டதால்
நீ போய்விட்டாயோ தெரியாது
வன்னிக்கு வந்தேன்; நீ இல்லை
இடிந்திருக்கும் உன் வீட்டின் கதவருகே
காத்திருக்கிறேன்.
கையில் சிகரெட்டின் உனக்கான பாதி.
ஏழாவது கனவு: சிதறிப் பறந்தது கடந்த காலம்
சுற்றி வளைப்பும் தேடுதல் வேட்டையும்
முடிந்த பிற்பாடு படையினர் போய்விட்டனர்
உடைக்கப்பட்டிருந்தது அறை
துண்டு துண்டாகக் கிழித்து வீசப்பட்டிருந்தது
எங்கள் குழுவின் கடைசிப் புகைப்படம்.
காலம் மங்கி மறையும் அந்தத் துண்டுகளில்
இருந்தது எங்கள் புன்னகை
தெரியாத முடிவிடங்களை நோக்கி
நாங்கள் வழி பிரியும் முன்பாக
ஒன்றாக இருந்த கணங்கள்
ஒட்டலாம் என நினைத்து
யன்னலோரமாய் அந்தத் துண்டுகளை
வைக்கிறேன்.
ஒரு மாயக் காற்று அவற்றைக்
குலைத்து வீசிற்று
இலையுதிர் காலத்தின் கடைசி இலைகளோடு
அவற்றைத் தூர இடங்களுக்கு
எடுத்துச் சென்றது
காற்றில் உலையும் காகிதத் துண்டுகள்
நாம்.
1967இல் மத்திய இலங்கையில் பிறந்த அஜித் சி ஹேரத் மாணவர் அரசியல் இயக்கங்களில் தீவிரப் பங்காற்றி 1989இல் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். இவருடைய கவிதைகள் மாற்று ஊடகங்களில் அதிகம் வெளியாகியுள்ளன. தற்போதைய இலங்கை அரசின் இனவாத ராணுவ அடக்குமுறையை எதிர்த்துக் கவிதைகளும் கேலிச் சித்திரங்களும் படைத்துவருகிறார்.

Monday, March 12, 2012

விஸ்வாவா சிம்போர்ஸ்கா கவிதைகள்


நூற்றாண்டின் வீழ்ச்சி
நமது இருபதாம் நூற்றாண்டு முன் வந்தவற்றை
முன்னேற்றும் என்று இருந்தது.
இனி அதற்கு எந்த ஆதாரமுமில்லை.
அதன் எஞ்சியிருக்கும் வருடங்கள் சிலவே,
அதன் நடை தள்ளாடுகிறது,
அதற்கு மூச்சிரைக்கிறது.

நடக்கக் கூடாத பல
நடந்துவிட்டன.
நடப்பதாக இருந்தவை
நடந்தேறவில்லை.

வேறு பல விஷயங்கள் தவிர,
மகிழ்ச்சியும் வசந்தமும் ஒன்றை ஒன்று
நெருங்கி வருவதாக இருந்தன.

மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் விட்டுப் பீதி வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொய்யைவிட உண்மையின் தாக்கம் துரிதப்படும் என்பதாக இருந்தது.

சில பிரச்சினைகள் இனி
எழவே எழாது என்றும் நம்பப்பட்டது:
உதாரணத்திற்கு, பட்டினி,
போர், இத்யாதிகள்.

இயலாதோரின் இயலாமைக்கு மதிப்பு,
நம்பிக்கை, போன்றவை
ஏற்படுவதாக இருந்தது.

உலகத்தை ரசிப்பதாகத் திட்டமிட்டிருந்த எவருக்கும்
அது இப்பொழுது நம்பிக்கையூட்டும்
செயலாக இல்லை.

முட்டாள்தனம் நகைப்பூட்டுவதாக இல்லை.
அறிவு மகிழ்வுள்ளதாக இல்லை.
நம்பிக்கை என்பது முன்பிருந்ததுபோல
இளம் பெண்ணில்லை,
இப்படிப் பல விஷயங்கள்...

நல்லவனும் வலிமையானவனுமான ஒரு மனிதனை
இனி கடவுள் நம்பப்போவதாக இருந்தது.
ஆனால் நல்லவனும் வலிமையானவனும்
இன்னும் வெவ்வேறு மனிதர்களே.

“நாம் எப்படி வாழ வேண்டும்?” என்று ஒருவர் கடிதத்தில் கேட்டிருந்தார்.
நான் அவரிடம் அதையே
கேட்க நினைத்திருந்தேன்.

மீண்டும், எப்பொழுதும் போலவே,
மேற்கண்டது போலவே,
அசட்டுத்தனமான கேள்விகளே
மிக அவசரமானவையாக இருக்கின்றன.

போர்னோக்ராஃபி பற்றி ஒரு கருத்து
சிந்திப்பது என்பதைவிட ஒழுக்கங்கெட்ட செயல் ஒன்று கிடையாது.
மலர்களுக்கென உள்ள நிலத்தில்
காற்று பரப்பும் களை போன்றது இந்தப் பொறுப்பின்மை.

சிந்திப்பவர்களுக்கு எதுவுமே புனிதமல்ல.
வெட்கமின்றி எதையும் பெயரிட்டு அழைப்பது,
ஆபாசமான ஆய்வுகள், காம வெறிகொண்ட கூட்டிணைவுகள்,
அம்மணமான உண்மைகளின் பின் அவசரமான சிற்றின்பத் துறத்தல்கள்,
உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய விஷயங்களைத் தம்
அசிங்க விரல்களால் தொடுதல்,
சூடான விவாதங்கள் - இவை இவர்கள் காதுகளுக்கு இன்னிசை.

வெட்ட வெளிச்சத்திலோ இரவின் பதுக்கத்திலோ
இவர்கள் வட்டமாகவோ முக்கோணமாகவோ ஜோடிகளாகவோ
இணைகிறார்கள்.
கூட்டாளிகள் ஆணா பெணா, என்ன வயது என்பவை முக்கியமல்ல.
இவர்களது கண்கள் ஒளிர்கின்றன, கண்ணங்கள் சிவக்கின்றன.
நண்பர் நண்பரை வழிதவறச் செய்கிறார்.
சீரழிந்த மகள்கள் தங்கள் தந்தையரைக் கெடுக்கிறார்கள்.
தன் குட்டித் தங்கைக்கு அண்ணன் கூட்டிக்கொடுக்கிறான்.

பளபளக்கும் இதழ்களின் பக்கங்களில் உள்ள
சிவந்த பிட்டங்களைக் காட்டிலும் அவர்கள்
மறுக்கப்பட்ட அறிவுமரத்தின் பழங்களையே விரும்புகிறார்கள் -
இறுதியில் இவர்கள் விட்டுச் செல்லும் அழுக்குத் தடங்கள்
இவர்களின் எளிய இதயங்களுடையவை மட்டுமே.
இவர்கள் ரசிக்கும் புத்தகங்களில் படங்கள் இருப்பதில்லை.
வேறுபாடு என்பது இவர்கள் விரல் நகத்தாலோ
க்ரெயானாலோ குறிக்கும் சில சொற்றொடர்களில் மட்டுமே.

இவர்கள் எடுக்கக் கூடிய நிலைகள்,
தடையற்ற எளிமையுடன் ஒரு மனது
மற்றொன்றைக் கருவுறச் செய்வது, இவை அதிர்ச்சியூட்டுபவை!
இந்த நிலைகளைக் காமசூத்திரம்கூட அறிந்திருக்கவில்லை.

இவர்களது இந்தச் சந்திப்புகளின்பொழுது சூடாக இருக்கும் ஒரே விஷயம்
தேநீர் மட்டுமே.
நாற்காலிகளில் அமர்கிறார்கள், உதடுகளை அசைக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் காலின் மீதும் இருக்கும் இன்னொரு கால்
அவரவர்களுடையது மட்டுமே.
எனவே ஒரு கால் தரையிலும்
மற்றொன்று சுதந்திரமாய் காற்றில் தொங்கிக்கொண்டும் இருக்கின்றன.
எப்பொழுதாவது மட்டுமே ஒருவர்
எழுந்து சன்னலுக்குச் செல்கிறார்.
திரையின் விரிசலின் வழியே
தெருவை எட்டிப் பார்க்க.

ஒரு சிறிய நட்சத்திரத்தின் கீழ்
எதேச்சையான ஒன்றைத் தவிர்க்க முடியாத ஒன்றெனக் கூறியதற்கு என் மன்னிப்புகள்.
அதுவும் தவறு எனின், அந்தத் தவிர்க்க முடியாமைக்கு என் மன்னிப்புகள்.
மகிழ்ச்சியே, உன்னை நான் உரிமையுடன் எடுத்துக்கொள்வதைக் கண்டு கோவிக்காதே.
அவர்களைக் குறித்த என் நினைவு மங்குவதைப் பற்றி
இறந்தவர்கள் என்மீது பொறுமை கொள்ளட்டும்.
ஒவ்வொரு நொடியும் நான் காணத் தவறுபவை குறித்து காலத்திடம் என் மன்னிப்புகள்.
இந்தச் சமீபத்திய காதலே முதலானதென்று எண்ணியதற்காகக் கடந்த காதல்களிடம் என் மன்னிப்புகள்.
வீட்டிற்குப் பூக்களைக் கொண்டு வந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள், தொலைவில் நிகழும் போர்களே.
திறந்த காயங்களே, என் விரலைக் குத்திக்கொண்டதற்கு
என்னை மன்னித்துவிடுங்கள்.
என்னிடமுள்ள இசைத் தட்டுகளுக்காக மன்னிப்புக் கோருகிறேன் தங்கள்
ஆழங்களிலிருந்து கதறுவோரிடம்.
இன்று காலை ஐந்து மணிக்கு உறங்கிக்கொண்டிருந்ததற்காக
மன்னிப்புக் கேட்கிறேன் இரயில் நிலையத்தில் அப்பொழுது
காத்துக்கிடந்தவர்களிடம்.


துரத்தித் தேடப்படும் நம்பிக்கையே, அவ்வப்போது சிரித்ததற்காக என்னை மன்னித்துவிடு.
பாலைவனங்களே, கையளவு நீருடன் உங்களை நோக்கி நான் விரையாமலிருந்ததற்கு என்னை மன்னியுங்கள்.
கழுகே, நீ வருடங்கள் தோறும் மாறவில்லை, எப்பொழுதும் அதே கூண்டில்,
உன் விழி என்றும் வெளியில் ஒரு புள்ளியில் உறைந்ததாய்.
நீ பஞ்சடைக்கப்பட்ட ஒன்றெனினும் என்னை மன்னித்துவிடு.
மேசையின் நான்கு கால்களுக்காக வீழ்த்தப்பட்ட மரத்திடம் என் மன்னிப்புகள்.
சிறிய பதில்களுக்காகப் பெரிய கேள்விகளிடம் என் மன்னிப்புகள்.
உண்மையே, என்னைப் பெரிதாய்க் கண்டுகொள்ளாதே.
கௌரவமே, தயவுகூர்ந்து பெரிய மனதுசெய்.
இருத்தல் எனும் புரியா புதிரே, நான் எப்பொழுதோ ஒருமுறை மட்டுமே உன் ஓட்டத்தின்
ஓர் இழையைப் பிடித்துவிடுவது பற்றிப் பொறுத்துக்கொள்.

ஆன்மாவே, நான் அவ்வப்பொழுது மட்டுமே உன்னைக் கொண்டிருப்பதற்காகப் புண்படாதே.
நான் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாததற்காக
எல்லாவற்றிடமும் என் மன்னிப்புகள்.
நான் ஒவ்வொரு பெண்ணாகவும் ஒவ்வொரு ஆணாகவும் இருக்க
முடியாததற்காக எல்லோரிடமும் என் மன்னிப்புகள்.
நான் வாழும்வரை என்னை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது
என்று எனக்குத் தெரியும்.
ஏனெனில் நானே என் வழியில் குறுக்கிடுகிறேன்.
மொழியே, கனமான சொற்களைக் கடன்வாங்கி அவற்றை
இலேசானதாக்கக் கடினப்படும் என்னிடம் வெறுப்பு கொள்ளாதே.

தமிழில்: அனிருத்தன் வாசுதேவன்
ஆங்கில மூலம்: ஸ்டானிஸ்லாவ் பாரன் ழாக் மற்றும் க்லேர் கவனா

இக்கவிதைகளுக்கான ஓவியங்கள் சஜிதா ஜியின் STREE புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

ரவிசுப்ரமணியன் கவிதை



நெருக்கமான அந்நியனைத் தேடி வருபவர்கள்
புலன்களுக்கு அகப்படாத
ஸ்தூலமான பிறவி
அவன்.
உணர்வுகளால் சித்திக்கும் ஸ்பரிசங்களை
முரட்டு அழுத்தத்தால் சொல்ல இயலாது.
புரிதலின்றி உன்னியல்பில்
திரிபுகொள்ளாதே மகளே
வெய்யிலின் உக்கிரத்தில் அலைந்து திரிந்தோ
மழையின் ஈரக்குளிரில் நனைந்தபடியோ வரலாம்


பயணக் களைப்பில் சோர்ந்திருக்கலாம்
முகவரியை விசாரித்தரிய அலைந்திருக்கலாம்.


அவன்
நல்ல தந்தை இல்லையென்றும்
நல்ல கணவன் இல்லையென்றும்
வருபவர்களிடம் சொல்லாதே


நேசிப்பை அதிகப்படுத்தத்தான்
விலகிச்செல்கிறான்
சொற்களைவிடவும்
உயர்ந்தது செயலென்றே
மௌனித்திருக்கிறான்
மன அவசம் கொள்ளாது
தெளிவுகொள்
அவனின் ப்ரியங்களில் திளைத்தபடியோ
பாடிய குரலின் ஞாபகத்திலோ
உரையாடலின் தொடர்ச்சியாகவோ
குழந்தைகளுக்கெனச்
சிறு பழம் ஒன்றை வாங்கிவரும்
நினைவின்றியோகூட யாரும் வரலாம்
வீடு இது
ஆனால் வசிப்பிடம் இல்லையென
அவன் ஏன் உணர்ந்தானென யோசி
நானறிந்த
அவன் விலகலின் அண்மையை
அண்மையின் தூரத்தை
எப்படிச் சொல்வேன் மகளே உனக்கு
உன்னின் விதியோ
அவனின் விதியோ
இருவரும் இணைந்தது


சமூகத்தை நேசிப்பவன்
கலைகளைக் கொண்டாடுபவன் என
வருபவர்கள் நினைவிலிருக்கும்
கூட்டைக் கலைத்து
சம்பாதிக்கத் தெரியாதவன்
பூர்வ சொத்தைத் தவறவிட்டவன்
கோபக்காரன் என்றெல்லாம் சொல்லிப் புலம்பாதே
மண்ணில் மழையாய்க் குழைபவன் அல்ல அவன்
நிலத்திலிருந்தபடி ஆகாயம் நேசிப்பவன்
முகம் தெரியா அதிதி ஆயினும்
சுணக்கம் கொள்ளாதே.
சில நிமிஷம் ஆசுவாசம்கொள்ள
ஒரு நாற்காலி கொடு
நம்மிடமிருக்கும் அவல் பொறியில்
ஒரு கைப்பிடி கொடு
ஒரு குவளைத் தண்ணீர் கொடு


மலர்ந்த முகத்தோடு
சில வார்த்தைகளேனும்
பேசி வழியனுப்பு.


ஒருவேளை
நீ துயரென நினைக்கும்
கவலைகளைத் தீர்க்கும்
தேவதூதன் யாரேனும்கூட
மாற்று ரூபத்தில் வரக்கூடும் மகளே.

றஷ்மி கவிதைகள்


நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய்
ஒதுங்கிய உன் குதிரைகள்
இச்சைகளின் அரசி சர்ப்பங்களை வசியம்செய்து
ஏவல் வாங்கினாள்:
சமிக்ஞைகளைச் சிரமேற்கொள்ளவாய்க் கட்டுண்ட சர்ப்பங்களுக்கு
ஏக்கங்களை ஏற்றி உரு மறைந்து திரிய அவள் கற்பித்தாள்,
போகங்களின் நெருப்பைத் தீனியிட்டாள்


அஞ்சனமிட்ட நீள் விழிகளுக்கு
-அவை மத்தியில் கூறாய்ப் பிரியா இணைந்த கட்புருவமுடையன-
சைகைகளினால் போர்களை ஆணையிடும்
வலுவிருந்தது.
களங்களின் சூட்சுமங்கள் தேறிக்
கொய்த குறிகளை மாலை அணிந்தவளின் ஆழ் புலங்களில்
அவளை மாசு அற விசுவாசித்தவர்கள்
சேவகம் பணிக்கப்பட்டிருந்தார்கள்.


ஆசைகளால் உருவேற்றி மந்திரித்த பாம்பின் முட்டைகளை
காற்றில் தூவி ஆண்களில் தீரா வியாதிகளை ஏற்றடுத்தியவள்
நேரங்களைக் குறுக்கீடுசெய்து
அவர்களைப் பித்து நிலையில் பேணிப் பதப்படுத்திவைத்திருக்கும்
வித்தை அறிந்திருந்தாள்.


வசீகரத்தினால் வரம்பெற்றிருந்த அவளது நா
கபட மிகு கண்களின் வார்த்தைகளுக்கு
ஒலி வடிவு கொடுத்தது - அவை
மரபணுக்களில் போகங்களின் துயரச் சாயைகளைப்
படியவைக்கிற ஆற்றல் பெற்றிருந்தன.


அவள் மேனியில் கமழும் வாசனை
தாழம் மடல்களினதும்
கொல்லையில் அவள் உரித்த தோல்களுள் வளரும்
குடைக்காளான்களினதுமாயிருந்தது.
அது தீண்டப்பெற்ற
இளைஞர்களுக்குக் கட்குருடு வந்தது
அவளை மட்டுமே முன்னிறுத்திய அந்தகம் சிந்தைக்கு.


ஒரு நூறு ஆண்டுகள் காலம்
சித்து விளையாட்டுகள்பால் ஆட்கொள்ளப்பட்டிருந்தவன்
பிறகொருநாள் துர்க் கனாவிலிருந்து
விழித்தெழுவதுபோல அந்தத் தோட்டத்திலிருந்து
வெளியேறியிருந்தேன்.
தீரா வேட்கையின் வலியிருந்தது பின்
கொஞ்சம் நாட்களுக்கு. . .


எனது இரவுகளின் கருமையில் மினுங்கிக்கொண்டிருந்த
சிவந்த, வெறிநாய்களின் மணிக் கண்களை
இடறும்படி உருட்டிவிட்ட இச்சைகளின் அரசி
குயுத்தி மிக்கதும் சாதுர்யமானதுமாய்-
என்னை நோக அடிக்க
உயிர்நிலைகளைத் தேர்ந்தெடுத்த
முதற்கட்டமாய்
உனக்கான வலைகளில் தானியங்களைத் தூவத் தொடங்கினாள்.
உன்னை நோக்கி நெளிந்தன பாம்புகள்-
நெளிந்தவை தீண்டவாய்த் தோதுசெய்தாய் நீ.


நுரைதள்ளிற்று.


நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய் ஒதுங்கிற்று உன் குதிரைகள். . .


பகட்டுமிக்க மாயத்தனங்களில் நீ
சிரசு பணிந்தபோது
நொய்மையான எனது உறுதிகளின் மீது
கேள்வி எழும்பிற்று.
அவளுடைய இடைப்பட்டியில்
ஒரு விஷம் தோய்ந்த கத்தியாய்
உன்னைச் சொருகிக்கொண்டாய். . .
எனது காப்பு வியூகங்கள் ஆற்று மணல் அரண்போல்
உதிரத் தொடங்கியிருந்தன.


எச்சரிக்கைகளை உதாசீனம் செய்தவனாய்
நச்சு இயல்புள்ள குட்டையின் கரையில் குதிரைகளை
அவிழ்த்துவிட்டாய் ஆற,
குறி ஊறிக் குளிக்கவாய் குதித்தாய் நிர்வாணம்கொண்டு.


நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய் ஒதுங்கிற்று உன் குதிரைகள். . .
இப்படித்தான் முன்பொருக்கால்
நானும் என் குதிரையும் நண்ப. . .
o
இப்போதுள்ள குறி வந்த கதை 2
தள்ளி, உனது கங்குகள் எரிகின்ற
கிடங்குகளுள் அவனை முங்கியபோது
அப்போதுதான்
துணைப் பாலியல்புகள் அவனில்
தோன்றத் தொடங்கியிருந்தன.


இனிப்புகளைப் பராக்குக் காட்டி
திக்குகள் தெரியாக் காடுகளில்
விரல்பிடித்து
வழிநடாத்தி
பிஞ்சு என்புகளை ஒடித்து உனது பீடங்களில்
பேயின் சிதைகளுக்கு எரியூட்டினாய்.


இரத்தத்தின் சாற்றிலிருந்து உருக்கொண்டு
மனிதர்களை இரைகொள்ளும் விலங்கின் முன்
தம்மைப் படையலிடும் வகையைப் பரீட்சிக்க
அவனை நெறிப்படுத்தினாய்.


துர் நடத்தைகளின் கடவுளுக்கு அவனை நீ
பலியிட்டபோது
கிளர்வுகளைத் தாங்கும் வலுவை
அவனது தசைநார்கள் பெற்றிருக்கவில்லை.
பிறகு வந்த நாட்கள் காய்ச்சல் கண்டவன்போல்
உள் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தான்.


அறியாமையின் கண்கள் துலக்கி
வயதுக்கு மீறிய ஆற்றலால் அவனை நீ
முதிர்ந்த சிறுவனாக்கிப்
பருவத்தின் இயல்புகளைச் சிதைத்தழித்த மறுபுறம்
கேள்விகளாலும் ஆச்சரியங்களாலும் வழிந்தான்.


ஊன் உருகும் வாசனையும்
கொந்தழிக்கும் குருதியின் ஓசையும்
சில்லெனச் சுரந்து ஊற்றெடுத்த ஹோமோன் ஒரு கடலுமாய்த்
தீயில் கிடந்தவன் ஊறினான்.


இருண்ட அடவிகளின் ஆழத்தில் வேட்டையாடும் கலையையும்-
முடித்து திசை தவறாத் திரும்புதல்
மலைகளில் குதித்து நீர்நிலைகளில் சுழித்துக்
கரையேறும் சாகசங்களையும் நீ பயிற்றுவித்த பிறகு
வதைகளிலிருந்த தேனின் கள்ளைத் தெரிந்தான்.
உன்னை, போகங்களின் முடிவில்
நீண்ட நாழிகளுக்குக் கண்கள் சொருக
மயங்கிக் கிடக்கச் செய்தான்.


பிறகெப்போதும் அவனைத் தன் ப்ராயத்திற்குத் திரும்ப
அனுமதித்திராத உன்னிடம்-
வெறிகொண்ட நாய்கள் தன்னுள் குரைப்பதாக
அவன் முறையிட்ட அன்று
உனது மார்பினைத் திறந்து பற்களின்
தடங்களைக் காட்டினாய்.


பிறகொருநாள்
தன்மீது நிகழ்த்தப்பட்டிருந்த
துஸ்பிரயோகத்தை அவன் அறிந்த நாளில்
காலம் தூர நழுவிப்போய்
ஆயுளுக்கும் வேறெவளும் துடைத்தெறிய முடியாதபடி
உனது எச்சிலும்
வாசனையுமாய் அவனை நிரப்பியிருந்தன.


தனது வாநாள் முழுவதுமாய் உனது
பாரித்துத் தகிக்கும் மார்புகளையும்
விம்மிக் கௌவும் வழியையும்
தனது சொந்தக் குறியையும் சுமந்து திரியும்படி நீ
அவனைச்
செய்துவிட்டிருந்ததை உணர்ந்தபோது
இளைஞன் பருவத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்தான்.


மரணத் தறுவாயில்
சைகைகளினால் அவன் அவற்றை
மீளவும் வேண்டிக்கொண்டிருந்தான்