Tuesday, October 11, 2011

தேவதேவன் கவிதைகள்

எங்கே எனத் தெரியாது...

எங்கே எனத் தெரியாது
சாகசங்களும் போராட்டங்களுமாய்க்
கொந்தளித்து விரைந்துகொண்டிருக்கும்
சாலையில்
இரு சக்கர ஊர்தியின் பின்னிருக்கையில்
மருங்கு நோக்கி அமர்ந்திருந்த ஒரு பெண்.
மரச்செறிவின் நிழல் இருக்கை ஒன்றில்
தன் உயிர்வாழ்வின் மர்மத்தை
ஒற்றையாய் உண்டுணர்ந்தபடி
தன்னந்தனியாய் அமர்ந்திருப்பவள் போன்றாள்.
சாலையின் புழுதி தீண்ட அஞ்சும் ஒரு சுடர்
சலனமற்றுக் கனன்றுகொண்டிருந்த ஓர் அற்புதம்!
என் உள்ளுறையும் தெய்வமோ
அன்றி, என் வாழ்வில்
கடந்து மறையும் ஒரு படிமம் மாத்திரம்தானோ?





மாடித்தளத்தில் நின்று கூந்தலுலர்த்தும் பெண்

உப்பரிகையில் வந்துநிற்கும்
ராணி போலிருந்தாள்
மாடித்தளத்தில் வந்துநின்று
கூந்தலுலர்த்தும் பெண்.

அங்கே ஒரு புல்பூண்டையும்
முளைக்கவைக்க இயலாத
சூரியனுக்காய் இரங்கித்தானோ
மாடித்தளம் முகிழ்த்த ஒரு மலராய்
அவள் வந்து நின்றாள்?

அவன் ஆசையால் பூத்த மலர்
தனது ஆசையைக் கோதிக்கொண்டிருந்தாள்
அவனிடமிருந்தே பிறந்து
அவனே அண்ணாந்து பார்க்கும்படியான
எழில் மலர்.

ஒரு முழுநிலவு தன் உலகிருளைச்
செவ்வையாய்ச் சமாளிப்பதுபோல்
அவள் கூந்தல் கோதிக்கொண்டிருந்தாள்

எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு
அவள் முன்னால் வந்து நின்றான்
சூரியன்.

அவள் கூந்தலின் ஈரத்தை
வாங்கிக் குளிர்ந்தானோ?
உலராத அவள் புன்னகையின்
ஈரத்திற் திளைத்தானோ?
அவள் காதலின் கருணையிற்
தனை மறந்தானோ?
மரணமற்ற ஒரு பேரழகில்
தன் உயிர் கரைந்தானோ?

சக்தி ஜோதி கவிதைகள்

வாகை என்ற இனம்

கோடைமழைக்குப் பிந்திய
இந்த அதிகாலையில்
வாகை மரத்தினடியில் நிற்கிறேன்

இந்த வாகை மரம்தான் எத்தனை பெரியது
எத்தனை எத்தனை பூக்கள்
இளமஞ்சளாய் மலர்ந்திருக்கின்றன
என்றபோதும்
வாகை மரம் புறக்கணிக்கப்பட்ட மரங்களில் ஒன்று

நானும் வாகையும் இவ்விதத்தில் ஒன்றுதான்
ஓர் இனத்தின் முன்னே பெண்ணாக
விருட்சங்களின் நடுவே வாகையாக
புறக்கணிப்பின் வேதனையை அறிந்தவர்களாக

வேர்கள் நிலத்திலும்
கிளைகள் ஆகாயத்திலுமாய் வியாபித்திருக்கிறோம்

வெற்றியை அறிந்திடச் செய்பவர்கள்தான் நாங்கள்

வாகையும் நானும் ஒருபோதும்
நிழலுக்காகவோ பூக்களுக்காகவோ
வளர்க்கப்படவில்லை
என்றறியும் ஒருவன்
வாகை மலரைச் சூடிக்கொள்ளும் இரவில்

நிராகரிப்பின் வலி மறந்து பெருமையடைவேன்.

நதிக்கரையில் நிற்கும் புதிர்

நதிக்கரையில்
தனித்து விடப்பட்ட குடத்தைப் பார்க்கிறேன்

ஒரு தாயின்
சுமை தூக்க முடியாத
இயலாமையால் இருக்கலாம்

காதலனுக்காய்க்
காத்திருந்ததன் சலிப்பாக இருக்கலாம்

கணவனின் துன்புறுத்தல் தாங்காமல்
ஆற்றில் விழுவதற்குத்
துணைக்கு வந்ததாய் இருக்கலாம்

புதிதாக
நீர் சுமந்து பழக ஆற்றுக்கு வந்த
சிறுமியின் விளையாட்டாக இருக்கலாம்

ஒரு வெற்றுக் குடத்துடன்
நதிக்கரையில் நின்றிருக்கும்
என்னைப் பற்றி
யாருக்குக் கவலை.

கல்வாரி மலைப்பாதையில்

ஜெருசலத்து நகரின் வீதியில்
கல்வாரி மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தேன்

நெருக்கமான கடைகளும்
கூட்டமாக மனிதர்களும்
சற்றே களைப்புற்ற
பயணத்தின் இடைவெளியில்
இயேசுவைச் சந்தித்தேன்

அவர் முக்காடிட்டிருந்தார்
தேவரீர்
ஏன் முக்காடிட்டிருக்கிறீர்
எனக் கேட்டேன்
ஒருவரும் என்னைத் தரிசிக்க விரும்பவில்லை
மேலும்
நான் வியாபாரப் பொருளாகிவிட்டேன்
வியாபாரிகள்
யாரொருவரையும் பார்க்க விரும்பவில்லை

கைப்பையிலிருந்த
முகம் பார்க்கும் கண்ணாடியை
அவரிடம் தந்தேன்
அவர்
தன் முகத்தையும்கூடக் காண்பதற்கு
விரும்பவில்லை என்றார்

தன் முகமும்
தன் இருப்பும்
மனிதத் திரையில் மறைந்திருப்பதாகவும்
கூறிக் கடந்தார்
அவர் நடந்து செல்லும் பாதையைப்
பார்த்துக்கொண்டிருந்தேன் இருளில்.

ஆடைகளற்ற தினம்

ஒரு நாளில்
நிறைய ஆடைகளை அணிய வேண்டியதிருக்கிறது
ஒவ்வொரு ஆடையை அணிந்துகொள்ளும்போதும்
அத்தனை சலிப்புத்தட்டுகிறது

ஓர் ஆதிவாசியாக இருந்திருந்தால்
இத்தனை ஆடைகள் தேவைப்பட்டிருக்காது

நவீன யுகத்தில் ஆடைகள் பெருகிவிட்டன
ஆடைகள் மனிதர்களைத் தின்றுவிட்டன

நான்
ஆடைகள்மீது வெறுப்புற்று இருக்கிறேன்
ஒரு பெண்ணாய்
இத்தனை ஆடைகளை அணியத்தான் வேண்டுமா

ஒரு நாளின் முடிவில்
வீடு திரும்பி
ஆடைகளைக் களைந்து எறிகிறேன்

என்னைச் சுற்றியிருந்த இரும்பு வளையங்கள்
ஒவ்வொன்றாய்க் கழன்று விழுகின்றன
குளியலறையில் பிரவேசிக்கின்றேன்
தலைக்கு மேல் பொழியும் நீர்
என் துயரங்களைக் கழுவிச் செல்கிறது
நீரால் குளிர்ந்தபடி இருக்கின்றேன்

என்றபோதும்
இன்னும் ஓர் ஆடை
வெளியே காத்துக்கொண்டிருக்கிறது.

எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள்

புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்...

சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ
எதுவோ நகரும் இக்கணத்தில்
வரையப்பட்ட மண்டையோட்டின்
சாயலில் காண்கிறேன் என்னை
வளைந்து நெளிந்து செல்லும்
இப்பாதையொரு முடிவிலி

இரு மருங்குப் புதர்களிலிருந்தும்
வெளிப்பட்டிருக்கும்
புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்
புதையுண்ட மனித உயிர்கள்
காலக்கண்ணாடியைவிட்டும்
இரசம் உருள்கிறது
அதில் தென்பட்ட விம்பங்கள்தான்
புதையுண்டுபோயினவோ

வேர்களில் சிக்கியிருக்கும்
உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும்
உறிஞ்செடுத்த விருட்சங்கள்
எவ்விசை கேட்டு வளரும்
விதியெழுதும் பேனா
எக்கணத்தில் முறிந்திடுமோ
காத்திருக்கலாம்
இங்குப் பூதம் காத்த விளக்காய் நான்

கால்களை விரித்தாடும்
எனது நிழல்களில்
ஒரு குழந்தை
ஒரு கொடூர விலங்கு
இணைந்திரண்டும்
ஒரு கணமேனும் விடாது அசைகின்றன
பார்வைக்குத் தெரியாத இழையொன்றால்
பிணைக்கப்பட்டிருக்கிறேனா
தெரியவில்லை

கடந்த காலத்தைக் காட்டிட
பறவைகளிடமில்லை
என்னிடமிருக்கின்றன
தேய்ந்தழியக் காத்திருக்கும் எனதேயான
பாதத்தடங்கள்

சுற்றிவரச் சட்டமிட்ட கூண்டுக்குள்
வளரும் தளிர் நானா
எவ்வாறாயினும் என்னில் வரையும்
எந்த வண்டிலுமில்லை
உணர்கொம்பில் ஒட்டிய தேன்
மண்டையோட்டிலுமில்லை
குருதியின் ஈரலிப்பு

பிறகும்
என் முகம் எதிலும் இல்லை
இருக்கக்கூடும்
இவ்வரிகளின் ஏதேனுமொரு மூலையில் நான்
நானாகவே

கடிகாரத்திலிருந்து உதிரும் காலம்

ஆடையின் நூலிழைகளைக்
காற்றசைத்துப் பார்க்கும் காலம்
பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில்
துளித் துளியாய்த் திணறும்

ஓவியம் தீட்டும்
தூரத்து மின்னல்
ஆகாயம் கிழித்துக் குமுறிட
அதிவேக விலங்கொன்றென
மழை கொட்டும் பொழுதொன்றில்
வனாந்தரங்களைத் திசைமாற்றவென
எத்தனிக்கும் அதே காற்று

செட்டைகளைத் தூக்கி நகரும்
வண்ணத்துப் பூச்சிக்கு
ஏரி முழுவதும் குடித்திடும் தாகம்

சோம்பலில் கிடத்தியிருக்கும்
உடலுக்குள் உணர்த்தப்படும்
தூரத்து ரயிலினோசை
மழை, காற்று, குளிர்
விழிகள் கிறங்கியே கிடக்கும்
பணி நாள் காலை

கடிகாரத்திலிருந்து உதிர்கின்றன
காலத்தின் குறியீடுகள்
துளித் துளியாய்

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா

‘ஓ பரமபிதாவே’
துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தை
அதிரச் செய்திருக்கக்கூடும்

சளி இறுகிச் சிதைந்த நெஞ்சுக்கூட்டோடு
வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை
பல நூறு கிலோ மீற்றர்கள் தொலைவில் அவளைக்
கண்டிக்கு அனுப்பியிருந்தது
வானமும் அதிர்ந்த நாளதில்
உயர்மருத்துவம்
மகளை எப்படியும் காப்பாற்றிடும்
நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக
ஆச்சியும் வந்திருந்தாள்

பார்வையாள விருந்தினராக
இருவர் மட்டுமே உள்ளனுப்பப்படும்
அவர்களுக்கென்று யாரும் வராத
வாயிலையே பார்த்தபடி
எப்பொழுதும் கட்டிலருகே
மெலிந்த ஆச்சி அமர்ந்திருப்பாள்
குழாய்கள் வழியே வரும்
உயிர்க்காற்று, மருந்து, கரைசல் உணவு
எல்லாவற்றையும் ஏற்றிருக்கும் ஆரோக்கியமேரி
வற்றிய உடல் சுவாசத்துக்கு மட்டுமே அசைய
கண்களில் மீதமிருக்கும் உயிர்
யாரையோ தேடியபடி கண்மணியாயசையும்

அவர்களறியாச் சிங்கள மொழியை
தமிழுக்கு மாற்றிச் சொல்ல உதவப்போய்
அவ்விருவர் துயர்க் கதையறிந்தேன்

பிறப்பிடம்
யாழ்ப்பாணத்தினொரு கடற்கரைப் பிரதேசம்
தற்பொழுது முகாம் வாசம்
மேரிக்கு ஒரே மகன்
சென்ற வருடம் கடத்தப்பட்ட அவனுக்கு
வயது பதினேழு
கணவனும் மற்ற உறவுகளும் போரில் இறந்திட
ஆச்சியும் அவளும் மட்டுமே மிச்சம்
ஷெல்பட்ட தொண்டையில் சத்திரச் சிகிச்சை
அதனோடு சேர்ந்து சளி கட்டிச் சிக்கலாகி
வவுனியா ஆஸ்பத்திரியோடு சில மாதங்கள் வாசம்
அங்கிருந்து கண்டிக்கு வந்து
இன்றோடு பத்து நாள்

‘தம்பி எங்களை வவுனியாவுக்கே
அனுப்பிவிடச் சொல்லுங்கோ
இஞ்ச மொழியும் தெரியேல்ல
கவனிக்கிறாங்களுமில்ல
பொட்டொன்றைக் கண்டால் போதும்
புலியென்று நினைப்பு இவங்களுக்கு
அங்கயெண்டாலும் அயல்கட்டிலுக்கு வாற சனம்
பார்த்துப் பேசிச் செல்லும்
மனசாரப் பேச்சைவிட
மருந்தெல்லாம் எதுக்கு ராசா’

இரு வாரங்களின் பிற்பாடு
மீளப்போய்ப் பார்க்கையில்
அவர்களிருக்கவில்லை
மேரி ஃபிலோமினாவை மரணம் கூட்டிச் சென்று
ஒரு கிழமையாயிற்றென
மருத்துவத் தாதி கூறி நடந்தாள்
காப்பாற்ற வந்த உயிரைக்
காலனின் கையில் பறிகொடுத்த ஆச்சி என்னவானாள்

தெரியாத மொழி பேசும் சூனியப் பூமி
நெரிசல் மிக்க பெருநகரம் அவளை
எந்த வாய் கொண்டு விழுங்கியதோ....
எங்கே போனாளென
எவர்க்கும் தெரியாத இருளை ஊடறுத்துத்
தளர்ந்த பாதங்களினால்
அழுதபடி நடந்தாளோ....

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட
மேரி ஃபிலோமினா
மரணித்த வேளையில்
‘ஓ பரமபிதாவே’
துளி நம்பிக்கையும் சிதறுண்ட அந்நாளில்
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தையே
அதிரச்செய்திருக்கும்