Monday, March 12, 2012

விஸ்வாவா சிம்போர்ஸ்கா கவிதைகள்


நூற்றாண்டின் வீழ்ச்சி
நமது இருபதாம் நூற்றாண்டு முன் வந்தவற்றை
முன்னேற்றும் என்று இருந்தது.
இனி அதற்கு எந்த ஆதாரமுமில்லை.
அதன் எஞ்சியிருக்கும் வருடங்கள் சிலவே,
அதன் நடை தள்ளாடுகிறது,
அதற்கு மூச்சிரைக்கிறது.

நடக்கக் கூடாத பல
நடந்துவிட்டன.
நடப்பதாக இருந்தவை
நடந்தேறவில்லை.

வேறு பல விஷயங்கள் தவிர,
மகிழ்ச்சியும் வசந்தமும் ஒன்றை ஒன்று
நெருங்கி வருவதாக இருந்தன.

மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் விட்டுப் பீதி வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொய்யைவிட உண்மையின் தாக்கம் துரிதப்படும் என்பதாக இருந்தது.

சில பிரச்சினைகள் இனி
எழவே எழாது என்றும் நம்பப்பட்டது:
உதாரணத்திற்கு, பட்டினி,
போர், இத்யாதிகள்.

இயலாதோரின் இயலாமைக்கு மதிப்பு,
நம்பிக்கை, போன்றவை
ஏற்படுவதாக இருந்தது.

உலகத்தை ரசிப்பதாகத் திட்டமிட்டிருந்த எவருக்கும்
அது இப்பொழுது நம்பிக்கையூட்டும்
செயலாக இல்லை.

முட்டாள்தனம் நகைப்பூட்டுவதாக இல்லை.
அறிவு மகிழ்வுள்ளதாக இல்லை.
நம்பிக்கை என்பது முன்பிருந்ததுபோல
இளம் பெண்ணில்லை,
இப்படிப் பல விஷயங்கள்...

நல்லவனும் வலிமையானவனுமான ஒரு மனிதனை
இனி கடவுள் நம்பப்போவதாக இருந்தது.
ஆனால் நல்லவனும் வலிமையானவனும்
இன்னும் வெவ்வேறு மனிதர்களே.

“நாம் எப்படி வாழ வேண்டும்?” என்று ஒருவர் கடிதத்தில் கேட்டிருந்தார்.
நான் அவரிடம் அதையே
கேட்க நினைத்திருந்தேன்.

மீண்டும், எப்பொழுதும் போலவே,
மேற்கண்டது போலவே,
அசட்டுத்தனமான கேள்விகளே
மிக அவசரமானவையாக இருக்கின்றன.

போர்னோக்ராஃபி பற்றி ஒரு கருத்து
சிந்திப்பது என்பதைவிட ஒழுக்கங்கெட்ட செயல் ஒன்று கிடையாது.
மலர்களுக்கென உள்ள நிலத்தில்
காற்று பரப்பும் களை போன்றது இந்தப் பொறுப்பின்மை.

சிந்திப்பவர்களுக்கு எதுவுமே புனிதமல்ல.
வெட்கமின்றி எதையும் பெயரிட்டு அழைப்பது,
ஆபாசமான ஆய்வுகள், காம வெறிகொண்ட கூட்டிணைவுகள்,
அம்மணமான உண்மைகளின் பின் அவசரமான சிற்றின்பத் துறத்தல்கள்,
உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய விஷயங்களைத் தம்
அசிங்க விரல்களால் தொடுதல்,
சூடான விவாதங்கள் - இவை இவர்கள் காதுகளுக்கு இன்னிசை.

வெட்ட வெளிச்சத்திலோ இரவின் பதுக்கத்திலோ
இவர்கள் வட்டமாகவோ முக்கோணமாகவோ ஜோடிகளாகவோ
இணைகிறார்கள்.
கூட்டாளிகள் ஆணா பெணா, என்ன வயது என்பவை முக்கியமல்ல.
இவர்களது கண்கள் ஒளிர்கின்றன, கண்ணங்கள் சிவக்கின்றன.
நண்பர் நண்பரை வழிதவறச் செய்கிறார்.
சீரழிந்த மகள்கள் தங்கள் தந்தையரைக் கெடுக்கிறார்கள்.
தன் குட்டித் தங்கைக்கு அண்ணன் கூட்டிக்கொடுக்கிறான்.

பளபளக்கும் இதழ்களின் பக்கங்களில் உள்ள
சிவந்த பிட்டங்களைக் காட்டிலும் அவர்கள்
மறுக்கப்பட்ட அறிவுமரத்தின் பழங்களையே விரும்புகிறார்கள் -
இறுதியில் இவர்கள் விட்டுச் செல்லும் அழுக்குத் தடங்கள்
இவர்களின் எளிய இதயங்களுடையவை மட்டுமே.
இவர்கள் ரசிக்கும் புத்தகங்களில் படங்கள் இருப்பதில்லை.
வேறுபாடு என்பது இவர்கள் விரல் நகத்தாலோ
க்ரெயானாலோ குறிக்கும் சில சொற்றொடர்களில் மட்டுமே.

இவர்கள் எடுக்கக் கூடிய நிலைகள்,
தடையற்ற எளிமையுடன் ஒரு மனது
மற்றொன்றைக் கருவுறச் செய்வது, இவை அதிர்ச்சியூட்டுபவை!
இந்த நிலைகளைக் காமசூத்திரம்கூட அறிந்திருக்கவில்லை.

இவர்களது இந்தச் சந்திப்புகளின்பொழுது சூடாக இருக்கும் ஒரே விஷயம்
தேநீர் மட்டுமே.
நாற்காலிகளில் அமர்கிறார்கள், உதடுகளை அசைக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் காலின் மீதும் இருக்கும் இன்னொரு கால்
அவரவர்களுடையது மட்டுமே.
எனவே ஒரு கால் தரையிலும்
மற்றொன்று சுதந்திரமாய் காற்றில் தொங்கிக்கொண்டும் இருக்கின்றன.
எப்பொழுதாவது மட்டுமே ஒருவர்
எழுந்து சன்னலுக்குச் செல்கிறார்.
திரையின் விரிசலின் வழியே
தெருவை எட்டிப் பார்க்க.

ஒரு சிறிய நட்சத்திரத்தின் கீழ்
எதேச்சையான ஒன்றைத் தவிர்க்க முடியாத ஒன்றெனக் கூறியதற்கு என் மன்னிப்புகள்.
அதுவும் தவறு எனின், அந்தத் தவிர்க்க முடியாமைக்கு என் மன்னிப்புகள்.
மகிழ்ச்சியே, உன்னை நான் உரிமையுடன் எடுத்துக்கொள்வதைக் கண்டு கோவிக்காதே.
அவர்களைக் குறித்த என் நினைவு மங்குவதைப் பற்றி
இறந்தவர்கள் என்மீது பொறுமை கொள்ளட்டும்.
ஒவ்வொரு நொடியும் நான் காணத் தவறுபவை குறித்து காலத்திடம் என் மன்னிப்புகள்.
இந்தச் சமீபத்திய காதலே முதலானதென்று எண்ணியதற்காகக் கடந்த காதல்களிடம் என் மன்னிப்புகள்.
வீட்டிற்குப் பூக்களைக் கொண்டு வந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள், தொலைவில் நிகழும் போர்களே.
திறந்த காயங்களே, என் விரலைக் குத்திக்கொண்டதற்கு
என்னை மன்னித்துவிடுங்கள்.
என்னிடமுள்ள இசைத் தட்டுகளுக்காக மன்னிப்புக் கோருகிறேன் தங்கள்
ஆழங்களிலிருந்து கதறுவோரிடம்.
இன்று காலை ஐந்து மணிக்கு உறங்கிக்கொண்டிருந்ததற்காக
மன்னிப்புக் கேட்கிறேன் இரயில் நிலையத்தில் அப்பொழுது
காத்துக்கிடந்தவர்களிடம்.


துரத்தித் தேடப்படும் நம்பிக்கையே, அவ்வப்போது சிரித்ததற்காக என்னை மன்னித்துவிடு.
பாலைவனங்களே, கையளவு நீருடன் உங்களை நோக்கி நான் விரையாமலிருந்ததற்கு என்னை மன்னியுங்கள்.
கழுகே, நீ வருடங்கள் தோறும் மாறவில்லை, எப்பொழுதும் அதே கூண்டில்,
உன் விழி என்றும் வெளியில் ஒரு புள்ளியில் உறைந்ததாய்.
நீ பஞ்சடைக்கப்பட்ட ஒன்றெனினும் என்னை மன்னித்துவிடு.
மேசையின் நான்கு கால்களுக்காக வீழ்த்தப்பட்ட மரத்திடம் என் மன்னிப்புகள்.
சிறிய பதில்களுக்காகப் பெரிய கேள்விகளிடம் என் மன்னிப்புகள்.
உண்மையே, என்னைப் பெரிதாய்க் கண்டுகொள்ளாதே.
கௌரவமே, தயவுகூர்ந்து பெரிய மனதுசெய்.
இருத்தல் எனும் புரியா புதிரே, நான் எப்பொழுதோ ஒருமுறை மட்டுமே உன் ஓட்டத்தின்
ஓர் இழையைப் பிடித்துவிடுவது பற்றிப் பொறுத்துக்கொள்.

ஆன்மாவே, நான் அவ்வப்பொழுது மட்டுமே உன்னைக் கொண்டிருப்பதற்காகப் புண்படாதே.
நான் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாததற்காக
எல்லாவற்றிடமும் என் மன்னிப்புகள்.
நான் ஒவ்வொரு பெண்ணாகவும் ஒவ்வொரு ஆணாகவும் இருக்க
முடியாததற்காக எல்லோரிடமும் என் மன்னிப்புகள்.
நான் வாழும்வரை என்னை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது
என்று எனக்குத் தெரியும்.
ஏனெனில் நானே என் வழியில் குறுக்கிடுகிறேன்.
மொழியே, கனமான சொற்களைக் கடன்வாங்கி அவற்றை
இலேசானதாக்கக் கடினப்படும் என்னிடம் வெறுப்பு கொள்ளாதே.

தமிழில்: அனிருத்தன் வாசுதேவன்
ஆங்கில மூலம்: ஸ்டானிஸ்லாவ் பாரன் ழாக் மற்றும் க்லேர் கவனா

இக்கவிதைகளுக்கான ஓவியங்கள் சஜிதா ஜியின் STREE புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

ரவிசுப்ரமணியன் கவிதை



நெருக்கமான அந்நியனைத் தேடி வருபவர்கள்
புலன்களுக்கு அகப்படாத
ஸ்தூலமான பிறவி
அவன்.
உணர்வுகளால் சித்திக்கும் ஸ்பரிசங்களை
முரட்டு அழுத்தத்தால் சொல்ல இயலாது.
புரிதலின்றி உன்னியல்பில்
திரிபுகொள்ளாதே மகளே
வெய்யிலின் உக்கிரத்தில் அலைந்து திரிந்தோ
மழையின் ஈரக்குளிரில் நனைந்தபடியோ வரலாம்


பயணக் களைப்பில் சோர்ந்திருக்கலாம்
முகவரியை விசாரித்தரிய அலைந்திருக்கலாம்.


அவன்
நல்ல தந்தை இல்லையென்றும்
நல்ல கணவன் இல்லையென்றும்
வருபவர்களிடம் சொல்லாதே


நேசிப்பை அதிகப்படுத்தத்தான்
விலகிச்செல்கிறான்
சொற்களைவிடவும்
உயர்ந்தது செயலென்றே
மௌனித்திருக்கிறான்
மன அவசம் கொள்ளாது
தெளிவுகொள்
அவனின் ப்ரியங்களில் திளைத்தபடியோ
பாடிய குரலின் ஞாபகத்திலோ
உரையாடலின் தொடர்ச்சியாகவோ
குழந்தைகளுக்கெனச்
சிறு பழம் ஒன்றை வாங்கிவரும்
நினைவின்றியோகூட யாரும் வரலாம்
வீடு இது
ஆனால் வசிப்பிடம் இல்லையென
அவன் ஏன் உணர்ந்தானென யோசி
நானறிந்த
அவன் விலகலின் அண்மையை
அண்மையின் தூரத்தை
எப்படிச் சொல்வேன் மகளே உனக்கு
உன்னின் விதியோ
அவனின் விதியோ
இருவரும் இணைந்தது


சமூகத்தை நேசிப்பவன்
கலைகளைக் கொண்டாடுபவன் என
வருபவர்கள் நினைவிலிருக்கும்
கூட்டைக் கலைத்து
சம்பாதிக்கத் தெரியாதவன்
பூர்வ சொத்தைத் தவறவிட்டவன்
கோபக்காரன் என்றெல்லாம் சொல்லிப் புலம்பாதே
மண்ணில் மழையாய்க் குழைபவன் அல்ல அவன்
நிலத்திலிருந்தபடி ஆகாயம் நேசிப்பவன்
முகம் தெரியா அதிதி ஆயினும்
சுணக்கம் கொள்ளாதே.
சில நிமிஷம் ஆசுவாசம்கொள்ள
ஒரு நாற்காலி கொடு
நம்மிடமிருக்கும் அவல் பொறியில்
ஒரு கைப்பிடி கொடு
ஒரு குவளைத் தண்ணீர் கொடு


மலர்ந்த முகத்தோடு
சில வார்த்தைகளேனும்
பேசி வழியனுப்பு.


ஒருவேளை
நீ துயரென நினைக்கும்
கவலைகளைத் தீர்க்கும்
தேவதூதன் யாரேனும்கூட
மாற்று ரூபத்தில் வரக்கூடும் மகளே.

றஷ்மி கவிதைகள்


நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய்
ஒதுங்கிய உன் குதிரைகள்
இச்சைகளின் அரசி சர்ப்பங்களை வசியம்செய்து
ஏவல் வாங்கினாள்:
சமிக்ஞைகளைச் சிரமேற்கொள்ளவாய்க் கட்டுண்ட சர்ப்பங்களுக்கு
ஏக்கங்களை ஏற்றி உரு மறைந்து திரிய அவள் கற்பித்தாள்,
போகங்களின் நெருப்பைத் தீனியிட்டாள்


அஞ்சனமிட்ட நீள் விழிகளுக்கு
-அவை மத்தியில் கூறாய்ப் பிரியா இணைந்த கட்புருவமுடையன-
சைகைகளினால் போர்களை ஆணையிடும்
வலுவிருந்தது.
களங்களின் சூட்சுமங்கள் தேறிக்
கொய்த குறிகளை மாலை அணிந்தவளின் ஆழ் புலங்களில்
அவளை மாசு அற விசுவாசித்தவர்கள்
சேவகம் பணிக்கப்பட்டிருந்தார்கள்.


ஆசைகளால் உருவேற்றி மந்திரித்த பாம்பின் முட்டைகளை
காற்றில் தூவி ஆண்களில் தீரா வியாதிகளை ஏற்றடுத்தியவள்
நேரங்களைக் குறுக்கீடுசெய்து
அவர்களைப் பித்து நிலையில் பேணிப் பதப்படுத்திவைத்திருக்கும்
வித்தை அறிந்திருந்தாள்.


வசீகரத்தினால் வரம்பெற்றிருந்த அவளது நா
கபட மிகு கண்களின் வார்த்தைகளுக்கு
ஒலி வடிவு கொடுத்தது - அவை
மரபணுக்களில் போகங்களின் துயரச் சாயைகளைப்
படியவைக்கிற ஆற்றல் பெற்றிருந்தன.


அவள் மேனியில் கமழும் வாசனை
தாழம் மடல்களினதும்
கொல்லையில் அவள் உரித்த தோல்களுள் வளரும்
குடைக்காளான்களினதுமாயிருந்தது.
அது தீண்டப்பெற்ற
இளைஞர்களுக்குக் கட்குருடு வந்தது
அவளை மட்டுமே முன்னிறுத்திய அந்தகம் சிந்தைக்கு.


ஒரு நூறு ஆண்டுகள் காலம்
சித்து விளையாட்டுகள்பால் ஆட்கொள்ளப்பட்டிருந்தவன்
பிறகொருநாள் துர்க் கனாவிலிருந்து
விழித்தெழுவதுபோல அந்தத் தோட்டத்திலிருந்து
வெளியேறியிருந்தேன்.
தீரா வேட்கையின் வலியிருந்தது பின்
கொஞ்சம் நாட்களுக்கு. . .


எனது இரவுகளின் கருமையில் மினுங்கிக்கொண்டிருந்த
சிவந்த, வெறிநாய்களின் மணிக் கண்களை
இடறும்படி உருட்டிவிட்ட இச்சைகளின் அரசி
குயுத்தி மிக்கதும் சாதுர்யமானதுமாய்-
என்னை நோக அடிக்க
உயிர்நிலைகளைத் தேர்ந்தெடுத்த
முதற்கட்டமாய்
உனக்கான வலைகளில் தானியங்களைத் தூவத் தொடங்கினாள்.
உன்னை நோக்கி நெளிந்தன பாம்புகள்-
நெளிந்தவை தீண்டவாய்த் தோதுசெய்தாய் நீ.


நுரைதள்ளிற்று.


நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய் ஒதுங்கிற்று உன் குதிரைகள். . .


பகட்டுமிக்க மாயத்தனங்களில் நீ
சிரசு பணிந்தபோது
நொய்மையான எனது உறுதிகளின் மீது
கேள்வி எழும்பிற்று.
அவளுடைய இடைப்பட்டியில்
ஒரு விஷம் தோய்ந்த கத்தியாய்
உன்னைச் சொருகிக்கொண்டாய். . .
எனது காப்பு வியூகங்கள் ஆற்று மணல் அரண்போல்
உதிரத் தொடங்கியிருந்தன.


எச்சரிக்கைகளை உதாசீனம் செய்தவனாய்
நச்சு இயல்புள்ள குட்டையின் கரையில் குதிரைகளை
அவிழ்த்துவிட்டாய் ஆற,
குறி ஊறிக் குளிக்கவாய் குதித்தாய் நிர்வாணம்கொண்டு.


நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய் ஒதுங்கிற்று உன் குதிரைகள். . .
இப்படித்தான் முன்பொருக்கால்
நானும் என் குதிரையும் நண்ப. . .
o
இப்போதுள்ள குறி வந்த கதை 2
தள்ளி, உனது கங்குகள் எரிகின்ற
கிடங்குகளுள் அவனை முங்கியபோது
அப்போதுதான்
துணைப் பாலியல்புகள் அவனில்
தோன்றத் தொடங்கியிருந்தன.


இனிப்புகளைப் பராக்குக் காட்டி
திக்குகள் தெரியாக் காடுகளில்
விரல்பிடித்து
வழிநடாத்தி
பிஞ்சு என்புகளை ஒடித்து உனது பீடங்களில்
பேயின் சிதைகளுக்கு எரியூட்டினாய்.


இரத்தத்தின் சாற்றிலிருந்து உருக்கொண்டு
மனிதர்களை இரைகொள்ளும் விலங்கின் முன்
தம்மைப் படையலிடும் வகையைப் பரீட்சிக்க
அவனை நெறிப்படுத்தினாய்.


துர் நடத்தைகளின் கடவுளுக்கு அவனை நீ
பலியிட்டபோது
கிளர்வுகளைத் தாங்கும் வலுவை
அவனது தசைநார்கள் பெற்றிருக்கவில்லை.
பிறகு வந்த நாட்கள் காய்ச்சல் கண்டவன்போல்
உள் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தான்.


அறியாமையின் கண்கள் துலக்கி
வயதுக்கு மீறிய ஆற்றலால் அவனை நீ
முதிர்ந்த சிறுவனாக்கிப்
பருவத்தின் இயல்புகளைச் சிதைத்தழித்த மறுபுறம்
கேள்விகளாலும் ஆச்சரியங்களாலும் வழிந்தான்.


ஊன் உருகும் வாசனையும்
கொந்தழிக்கும் குருதியின் ஓசையும்
சில்லெனச் சுரந்து ஊற்றெடுத்த ஹோமோன் ஒரு கடலுமாய்த்
தீயில் கிடந்தவன் ஊறினான்.


இருண்ட அடவிகளின் ஆழத்தில் வேட்டையாடும் கலையையும்-
முடித்து திசை தவறாத் திரும்புதல்
மலைகளில் குதித்து நீர்நிலைகளில் சுழித்துக்
கரையேறும் சாகசங்களையும் நீ பயிற்றுவித்த பிறகு
வதைகளிலிருந்த தேனின் கள்ளைத் தெரிந்தான்.
உன்னை, போகங்களின் முடிவில்
நீண்ட நாழிகளுக்குக் கண்கள் சொருக
மயங்கிக் கிடக்கச் செய்தான்.


பிறகெப்போதும் அவனைத் தன் ப்ராயத்திற்குத் திரும்ப
அனுமதித்திராத உன்னிடம்-
வெறிகொண்ட நாய்கள் தன்னுள் குரைப்பதாக
அவன் முறையிட்ட அன்று
உனது மார்பினைத் திறந்து பற்களின்
தடங்களைக் காட்டினாய்.


பிறகொருநாள்
தன்மீது நிகழ்த்தப்பட்டிருந்த
துஸ்பிரயோகத்தை அவன் அறிந்த நாளில்
காலம் தூர நழுவிப்போய்
ஆயுளுக்கும் வேறெவளும் துடைத்தெறிய முடியாதபடி
உனது எச்சிலும்
வாசனையுமாய் அவனை நிரப்பியிருந்தன.


தனது வாநாள் முழுவதுமாய் உனது
பாரித்துத் தகிக்கும் மார்புகளையும்
விம்மிக் கௌவும் வழியையும்
தனது சொந்தக் குறியையும் சுமந்து திரியும்படி நீ
அவனைச்
செய்துவிட்டிருந்ததை உணர்ந்தபோது
இளைஞன் பருவத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்தான்.


மரணத் தறுவாயில்
சைகைகளினால் அவன் அவற்றை
மீளவும் வேண்டிக்கொண்டிருந்தான்