Sunday, September 9, 2012

அரும்பு கவிதைகள்

மாற்றம்
நுழையத் தொடங்கும்போதே
என்னை மாற்றத் தொடங்கினாய்

விரும்பிக் கேட்ட இசையை
வெறுக்கச் சொன்னாய்

மகிழம்பூ மணமும்
உனக்கு உகந்ததாயில்லை

பறவைகளுக்கு நீர்வைப்பதிலும்
உவப்பில்லை உனக்கு

முழுவதும்
ஆக்கிரமித்த பின்னும்
நீ என்னவோ
அப்படியேதான் இருக்கிறாய்.

ஆனால்
ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில்
வந்துகொண்டுதான் இருக்கின்றன
என் பிரியத்துக்குரிய பூனைகள்
மௌனம்
மௌனம் சிறுசிறு துண்டுகளாகச்
சிதறிக்கிடந்தபோதே
ஒரு முறத்தில்
அள்ளியிருக்கலாம்

இப்போது
இந்த அறை நிறைந்திருக்கிறது
அதை நீ செய்வாயா
நான் செய்வேனா
என்ற யுத்தத்தில்

வேண்டாம்
நீயும் அதைச் சொல்லிவிடாதே

உயிர் அளித்து
ஊன் வளர்த்து
திரிய விட்டுவிடாதே

சிசு மரணம்கூடத் தாங்கேன்

இனி
தாய்மைக் கூறுடன் வாழ்ந்து முடிய
சித்தங்கொண்ட பின்
பிரிந்து பிறழ்வுற
அது நிகழ்ந்திட வேண்டாம்.

நீயும் அதைச் சொல்லிவிடாதே

No comments: