Sunday, July 15, 2012

இளம்பிறை கவிதைகள்


நிரம்பித் ததும்பும் நீர்
உங்கள் கிணற்றிலிருந்து
தூர் வாரி வெளியேற்றப்படும்
வெற்று மண்ணாய்க்
கொட்டப்படுகிறேன் நான்.
என் கிணற்றில் எப்போதும்
நிரம்பித் ததும்பும்
நீராக இருக்கிறீர் நீங்கள்.
இறகுகள் உதிர்ந்துகிடக்கும் ஏரி
திருப்பித் துரத்தும் பேராறு
எதிர்பாரா தருணத்தில்
சாபச் சாம்பலை வீசிமறையும்
வரம் கேட்ட தெய்வங்கள்

புழுதி மண்ணில்
புரண்டழுது அடம்பிடிக்கும்
குளிப்பாட்டி துடைத்தெடுத்த
நினைவுகள் தனித்தனியே

விழிப்பைச் சுற்றிலும்
பசித்த மலைப் பாம்புகளாகத்
தொங்கிக்கொண்டிருக்கும்
பயத்தின் நாவுகள்
இருள் வனத்தில்
மின்மினிப் பூச்சிகளாகிப்
பறந்துகொண்டிருக்கும் உயிர்

மனம் கவ்விப் பறக்கும்
பெரும் பறவையொன்றின்
வெளிர் வண்ண இறகுகள்
உதிர்ந்து கிடக்கும்
வற்றிய ஏரியில்
வானம் உரசிப் பறக்கும்
முன்பு அமர்ந்து மீன் தின்ற
பறவைகளைப் பார்த்து
வரப்போகும் மழைக்காலத்தை
எண்ணிக் கொண்டது ஏரி
நீங்களும் நனைவீர்
ஜென்மம் முழுதும்
செலவழித்தே வாழ்ந்தாலும்
தீரப் போவதில்லை
அவமதிப்புகளால் பொறிக்கப்பட்ட
என் துயர நாணயங்கள்

என் ஒரு கரத்தை
இன்னொரு கரத்தால்
பற்றிக்கொண்டு
எழுந்து நிற்பது உங்களை
சபிக்கவோ . . . முந்திச் செல்லவோ . . . என்ற
அச்சம் பதற்றம் அறவே தவிர்ப்பீர்
வாழ்வதற்காக மட்டுமே

எரியும் காட்டில்
தீச்சுடர் பார்க்கத்
திரளும் நீங்களும்
நனைந்து மகிழும்
மழைநாள் . . . வரும் எனக்கு.
கனவுகள் எவையுமற்று
பெரு வெள்ளச் சுழல்களில் சிக்கி
உள்ளிழுத்துச் செல்லப்படும்
நீந்தப் பழகாத கன்றுக்குட்டியின்
உயிர் போராட்டத்துடன்
விடியும் பொழுதுகளில்
தடைகள் கடந்து
விரைந்தோடிக்கொண்டிருக்கிறேன்
என் தூரம்
எங்கோ கிடக்கிறது
அன்பு வண்ணம் பூசப்பட்ட உள்ளங்களின்
வஞ்சகம் புரிந்த பின்
பொய்யும் நடிப்பும்
பொறுக்க முடியா
இயல்பின் நெருக்குதல் சுமந்து
விரைந்தோடிக்கொண்டிருக்கும் நானோ

அசதியுறும் போதெல்லாம்
அவமதிக்கப்பட்ட பிரியங்களின்
உறைந்த ரத்தகட்டிகள்மீது
சற்றயர்ந்து, கண்மூடிக்கொண்டிருக்கிறேன்
கனவுகள் எவையுமற்று.

No comments: