Saturday, May 12, 2012

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் - மஞ்சுள வெடிவர்த்தன கவிதைகள்


1. தராக்கி (சிவராமுக்கு)
துயிலா இரவைக் குலைக்கும்
இருளின் சிற்றலைகளை ஊடறுத்து ஒளிரும்
ஒரு சிறு தாரகை

பாடும் மீன்களின் இரவில்
தராக்கி
உனது காமக் குரல் உயிர்பெறுகிறது

அந்தப் பாடல்கள் இனியன அல்ல
கொடியன
இதுவே உண்மை; யதார்த்தம்

இளங்காற்றில் அலையும் குருதியில்
உனது குரலின் நினைவு
தேங்கி நிற்கிறது

அன்று புயலுற்ற பயங்கர இரவில்
ஏன்
முடிவற்ற ஒளியைத் தேர்ந்தெடுத்தாய்?

நாட்டின் வெட்கத்தின் திரை விலக
இரக்கமற்ற சிரிப்புகளின் எதிரொலி
விம்மும் இதயங்களின் வாயில் திறந்துகொள்வது
உனது குரலைத் தழுவ மட்டுமே
2. எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை
ஈஃபிள் கோபுரத்தின் உச்சியின் மேல்
நிலவு எழுகிறது
கனவும் மேலெழத்
துப்பாக்கியால் எனது இதயத்தைச் சுடுகிறேன்

இன்று எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை

லா சப்பேல் வீதியின் தெருவிளக்குகள்
இருளில் குனிந்து நிற்கின்றன
எனினும் ஒளி பரவுகிறது
ஒவ்வொன்றாக அவற்றுக்கும் வெடிவைக்கிறேன்

தெரியாத தமிழர் ஒருவர் முன்னே வருகிறார்
‘வணக்கம்’ சொல்கிறேன்
‘தீக்குச்சி இருக்கிறதா?’ என்கிறேன்

அவருடைய கண்கள் வாழ்வைத் தேடி அலைவதை
அப்போது பார்க்கிறேன்
நான் நெருப்பைக் கேட்கிறேன்
அவரோ வாழ்க்கையைக் கேட்கிறார்

எரியும் உடல்களிலிருந்து
சிகரெட் மூட்டிய தலைமுறை அல்லவா நாம்?
சிகரெட் புகைத்தபடியே
தெருவில் துவண்டு சரிந்து நடந்து செல்லும்
இறந்த மனிதன் ஒருவன்
உனது புத்தாண்டுக் கனவுகளில் வருகிறானா?
அவருக்கு வீடு இருந்தது
ஆனால் படுக்கக் கட்டில் இல்லை
ஊர் இருந்தது
ஆனால் நடந்து திரியத் தெருக்கள் இல்லை
நாடு இருந்தது
ஆனால் புன்னகைக்கும் உரிமை இல்லை

இன்று
எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை

பாற்சோற்றை உன் வாய்க்குள்
நிறைக்கிறபோது
உனக்குக் குருதி மணக்கவில்லையா?
என்னே சுவை அது!
3. நிலம் இழந்த தாய்நிலம்
இளம் இராணுவ வீரனே
தமிழர்களின் தலைக்கு வெடிவைக்கிறாய்
எவ்வளவு மென்மையானது உன் ஆயுதம்?

குரூரமான பதுங்குகுழி
எப்போதுமே சூதாட்டத்துக்குத் திறந்திருக்கிறது
அங்குப் பகடைக்காய்களின்
நிரந்தர ஆக்கிரமிப்பு

நீ
அவர்களின் கண்களைக் கட்டலாம்
ஆனால் ஆயிரம் கண்கள் திறக்கின்றன
நீ
அவர்களின் கைகளைக் கட்டலாம்
ஆனால் ஆயிரம் கைகள் வீறுடன் மேலெழுகின்றன

அம்மணமாக்கி அவர்களை நீ சுட்டபோது
அவர்களின் கடைசி விருப்பம்
அந்தத் தாய்நாட்டைத் தழுவியபடி
நிலத்தில் வீழ்ந்தது
உனது உருமறைப்பு அம்மணமானது

இளம் இராணுவ வீரனே
தமிழர்களின் தலைக்கு வெடிவைப்பது
உனக்கு விளையாட்டு
எவ்வளவு மென்மையானது உனது ஆயுதம்!
4. பாலச்சந்திரன்
சிறு நிலா
சிறு நிலாவா?
அதைச் சொல்லவும்கூடுமோ?

பத்துத் திக்கும் சுடரொளி வீசிய
சூரியனைக் கொன்றது சிங்கம்

தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால்
சுவரோவியங்கள் வரையப்படுகின்றன

சினத்துடன் சிங்கம்
சிறிய நிலாவையும் கொன்றபோது
முகில்களின் திரையைக் கிழித்து
உள்ளே ஒளிந்தது நிலா
பயத்தில்
ஒடுங்கின நட்சத்திரங்கள்

இருளின் சஞ்சாரம்
நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும்
அப்போது
எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது.

மஞ்சுள வெடிவர்த்தன(37), ராவய சிங்கள வார இதழில் பணியாற்றியவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மரியாவும் மேரியும் தெய்வ நிந்தனை என்னும் குற்றச்சாட்டில் இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையின் கண்டனத்துக்கு ஆளாகியது.
அந்தக் குற்றச்சாட்டில் இலங்கைப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். நூலும் தடைசெய்யப்பட்டது. இரண்டு கவிதை நூல்களும் ஒரு நாவலும் வெளியாகியுள்ளன. தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டமையால் இலங்கை அரசின் துன்புறுத்தலுக்கு ஆளானார். இப்போது பிரான்சில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்துவருகிறார்.

No comments: