Tuesday, September 20, 2011

மண்குதிரை கவிதைகள்

திணைகளின் காதல்

நீ விடுமுறைக்குச் சென்ற
உன் சிற்றூரைச் சுற்றி
சூழ்ந்து படர்கின்றன
மேகங்கள்

கலக்கத்திலோ மகிழ்ச்சியிலோ
பதற்றமடைந்த
ரப்பர் மரங்கள் எல்லாம்
சலசலக்கத் தொடங்குகின்றன

மழையின் வாசனையை உணர்ந்த
உன் குடும்பத்தின் நிறைந்த மனுஷி
வெளியே உலர்த்தவிட்டிருந்த ஆடைகளைச்
சேகரித்துத் திரும்புகிறாள்

உன்னச்சனின்
நிறமிழந்த பழைய ஆடையில்
வாசனை பிடித்துக் கிடக்கும் நீ
ஒரு மழைப் பூச்சியைப் போல்
சோம்பல் முறித்தெழுந்து
ஓடு வேய்ந்த அவள் வீட்டிலிருந்து
கீழிறங்கி வருகிறாய்

உன் ப்ரியமான லேகாவைப் போல்
மேட்டு நிலத்திலிருந்து வாஞ்சையோடு
கைகள் விரித்து வருகிறது
அம்மழை

ரப்பர் மரங்களில் இறங்கிய துளிகள்
தேங்காய் ஓடுகளில் நிரம்பி
உன் நிலத்தில் வழிந்தோடுகின்றன

ஒரு துளியைப் பருகும் ஆவலோடு
ஓடுடைத்த சிறிய ஜீவன்போல்
வாய் திறந்து ஓடுகிறாய்

என் மூதாதையர்
செப்பனிட்டு மேடேற்றிய
எங்கள் கரிசல் நிலத்தில்
உளுந்து விதைத்துக் காத்திருக்கும்
எங்கள் மூத்தவளும்
மழையின் குறிப்பையறிந்து
ஒட மரத்தின் கீழ் பதுங்குகிறாள்

வியர்வை மணக்கும்
அவள் சீலையணைப்பிலிருந்து விடுபட்டு
ஒரு துளியைப் பற்றிவிடும்
ஆவல் கொண்டோடுகிறேன் நானும்

நம்மிருவருக்குமான
அச்சிறுமழை
என் உள்ளங்கையில் விழுந்து
உன் தெத்துப் பல்லில் தெறித்துக்கொண்டிருக்கிறது

o

எண்ணற்ற பறவைகள் சிறகு விரித்துப் பறந்த
என் வானத்தில்
ஓர் ஒற்றைப் பறவையாய்
வியாபித்துவிட்டாய்

காலம் என்னும் பெரும் புதிர்
என் வானுக்கும் நிலத்துக்குமான
உன் சிறிய சிறகசைவில்தான்
அவிழ்ந்துகொண்டிருக்கிறது

பால்யச் சட்டங்களில் நடந்து
எங்கள் கரிசல் நிலத்திலிருந்து
உனக்கொரு மண்குதிரையை
எடுத்துத் தருகிறேன்
நீயும் உன் மலையாள நிலத்தின்
நானறியா மஞ்சள் பூவொன்றைப் பறித்துத் தருகிறாய்
நிலமும் வானுமற்ற ஓர் இடத்தில்
சந்தித்துக்கொள்கிறோம்
அது பிரபஞ்சம் தோன்றிய முதல் நாள் போலிருக்கிறது.

மீதமிருக்கும் என் நாட்களுக்கான ஆதாரமே
இவற்றையெல்லாம் நம்பமுடியவில்லையெனச்
சொல்லிக்கொண்டே இருக்கிறாய்
என் சிதைவின் துகள்கள் தொட்டு
மையிட்டுக்கொள்ளும் ஒருமுறையாவது உணர்வாயா
என் மனப் பூவின் மென்மையை

o

உன் இருபத்தெட்டு வயது உடலைத் தூக்கிக்கொண்டு
சிறுபெண்பிள்ளைபோல் துள்ளிக் குதித்தோடுகிறாய்
நான் உன்னைத் தொடர்ந்து வருகிறேன்

என்னைப் புறக்கணிக்கிறாய்
செல்லமான மலையாளச் சொல்லொன்றை எறிந்து விரட்டுகிறாய்
சின்னஞ்சிறு கையை உயர்த்தி எச்சரிக்கிறாய்
நான் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்

நானே எதிர்பாராத வேளையில்
திடீரெனக் கையிலேந்தி என்னைக் கொஞ்சுகிறாய்
மொழியறியா நாய்க்குட்டிபோல்
உன்னைச் சுற்றிச் சுற்றி வருகிறேன்

நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்
நான் கேட்டுக்கொண்டே நடக்கிறேன்
உன் சிறு வார்த்தையில்
ஓர் ஒற்றைச் சொல்லில்கூட
நான் பாதுகாப்பாக அடைந்துகொள்வேன்

பேசிக்கொண்டே இரு
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
உன் பேச்சுகள் தீர்ந்தெஞ்சும் மௌனம் போதும்
என் பெண்ணே
மீதமிருக்கும் என் நாட்களுக்கு

No comments: