Saturday, December 10, 2011

தேவேந்திர பூபதி கவிதைகள்

நீர்த் தாமரை மணல்

முதல் கப்பல் இன்னும் வந்து சேரவில்லை
கலங்கரை விளக்கருகே
மாலையின் பொன்வண்ணக் கிரணங்கள்
கரை மீனவர்களின் படகு
அதில் மிளிர்கிறது

கால்கள் மணல் புதைய
அலைவீசும் காற்றில்
மண் கண் விழுந்து எரியும்
வெகு நீளக்கரை
நண்டுகள் காய்ந்த குழிகளுக்குள்
ஓடி இறங்குகின்றன

நெய்தலைப் பாடிய புலவன்
நீர்த் தாமரை மணலில்
எவளோடு கூடியிருப்பான்
கள் பானைகள் உருட்டி
எச்சாமம் மரக்கலம் தள்ளியிருப்பான்

இந்நிலத்துப் பாணன் வழியிலோர்
கவிஞன் என்னை
ஆழ்கடல் வெருட்டுகிறது
முன்னிரவில் வருவேன் என்றவள்
நகரத்தின் எச்சாலை நெருக்கடியில்
காத்திருக்கிறாளோ

தொலைவில் எரியும் கட்டடம் போல் ஒரு கப்பல்
மீனவர்கள் மறைந்துவிட்ட இருள்
வீடு திரும்பச்சொல்லி இரைச்சலிட்டு
உறுமுகிறது கடல்

ஒரு நண்டுவளைக்குள் குதித்து
தாமதமாக வீடு வந்துசேர்ந்தேன் நான்

அறையெங்கும் கடல் வாசனை.

நெடுந்தூரம் போக வேண்டியவன்

நடு வழியில் அழைப்பதால்
என்ன சொல்லிக் கடந்து போவது
ஆரம்பம் முடிவும்
தெரியும் என்று சொல்கிறீர்கள்
எதற்காகக் கடக்கிறேன் என்ற
யூகமும் உங்களிடமே இருக்கிறது

எங்கிருந்து எதை
எப்படி ஏன்
அதை எக்காலத்தில் கடக்கிறேன்
என்பதற்கு உங்கள் பழைய கூண்டில்
அகப்படும் வகையில்
ஏதேனும் நான் சொல்லப் போய்
இவ்வளவுதானா எனக் கேட்கவும்
தயாராய் இருக்கிறீர்கள்

நடுநிசியில் நின்று விழித்து மௌனமாய்
ஒளி பயில்கிறது
நெடுந்தூரம் போக வேண்டிய
நிலா.


1 comment:

Devendhirapoopathi said...

Sir,the last poem written by yuvan and the first two poems only belongs to me,if you are able to correct i'll be happy.Thanks for your postings,Thank you very much,
with regards
poopathy