Thursday, January 10, 2013

சோலைக்கிளி கவிதைகள்


நான் தயிர்போடுவதும் பூவால்தான்
காற்றே உன்னில் நான் ஏறி ஓர் இடத்திற்கு
விஜயம் செய்ய வேண்டுமென
விரும்புகிறாய்

போகும் வழியெல்லாம் பூப்பறித்து நான் தருவேன்
முகர
என்று நினைக்கின்றாய்

சரிதான்
மழை இல்லாத ஒரு கோடை இதுவாக
இருந்தாலும் என்னால்
பூக்கள் கொய்ய முடியும்
பூவாலே உழுது பூக்களையே விதைத்து
பூக்களையே அறுக்கும் மானிடன் நான்
பூக்கள்தாம் எனது கத்தி
கட்டில்
கண்ணாடி
கூதலுக்குப் போர்த்தும் ஆடையென்று
எல்லாமாய்
பூப் பேனையையும் வைத்திருக்கும் ஒருவன்

என் தலைமுடியே பூப்பனதான்
நான் தயிர் போடுவதும் பூவால்தான்

என் வீட்டுப் பூனைக்குட்டி
பேண்டு மூடுவதும் பூவை
பூவை
பூவை
விளக்காக வைத்துத்தான்
பாட்டும் எழுதுகிறேன்

பூ நிறைந்த ஒருவன்
எனக்குள் பூங்குருவி கத்துது

ஆனபடியால்
நீ நினைப்பதொன்றும் தவறில்லை
எனக்கு முன்னாலே
ஒரு குட்டிக் குதிரையைப் போல் துள்ளும்
தென்றலே
என் கண்ணுக்கு நேராக வந்து
கதவைத் திறக்கும் வாகனமே

என் மனைவி ஒருத்தியும் இருக்கின்றாள்
ஒரு மயிர் என்றாலும் என் மண்டையிலே முளைத்தது
அவளும் ஒரு பச்சைப் பூ

அது வேண்டாமா உனக்கு

அவள் மிளகு என்றால் நான் காய்ந்த கொச்சிக்காய்1
சேர்ந்து இடித்தால்தான் சுவைக்கும்

இந்த இடிகலவை சள்ளல் மீனு2க்குள் தூவி
ஆக்கிக் குலுக்கினால்தான் மணக்கும்

கொச்சிக்காய் இடிக்கத் தெரியாத குளிர்காற்றே
எங்கே விஜயம்
விருப்பம்தான்
என் மிளகையும் கூப்பிடு
உன்னோடு வந்தால் ஊர்ப் பலத்தை ஆய்ந்து
பழுக்கவைத்துச் சாப்பிடலாம்
ஒவ்வொரு மாம்பழம் ஒவ்வொரு ஊரும்
கனியவைத்தால்
o
1 கொச்சிக்காய் - மிளகாய்
2 சள்ளல்மீன் - ஒரு மீன் இனம்

நான் வேறுஎங்கோ இருக்கின்றேன்
காகம் ஏன் குரைக்கிறது
நான் கட்டிலில் படுப்பதை ஜன்னலால் கண்டு
எலும்புத் துண்டென்று நினைத்ததா

இது நாயின் தம்பியா
அரசியல்வாதிகளின் புதல்வனா

இதன் நாட்டில் தேர்தலா
இது நிற்கும் எனது பாக்குமரம்
பிரச்சார மேடையா

தண்ணீர் குடித்துக் குடித்துக் குரைக்கிறது

காதுகள் இரண்டையும் பொத்தியபடி
ஜன்னலை நன்றாகத் திறக்கிறேன்

காதுதான் இப்போது மக்களுக்குப் பாரமான
ஓர் உறுப்பு
இந்தக் காதுக்குள் நெருப்பை காய்ச்சி ஊற்றுகின்ற
திரு நாட்டில்
மழைக்கும் வாய்
மயிலாடி மழை வந்த காலங்கள் கருகி
குரங்கின் வாலில்தான் தீப்பந்தம்
ஊர் ஒளிர

இந்தக் காகத்தின் வாயிலும் தேன் என்று
நினைக்கின்ற குழந்தைகள்
முளைக்கின்ற உலகத்தில்

நான் வேறு எங்கோ இருக்கின்றேன்
இந்த
சமகால உலகத்தில்
வரவே மறுத்தவனாய்
எனக்குள்ளே நானொரு பெட்டிசெய்து
அதற்குள்ளே ஒளித்தவனாய்
நான் போகும் இடத்திற்கான பாதைகளை அமைத்து
அதற்கான வாகனமாய் ஞானத்தூக்கங்களை மாற்றி

என்னை உரித்து
உரிமட்டை எறிந்து
பால் தேங்காய் உருளுகையில் படுக்கையிலே
இந்தத் தொல்லை
என்னைத் தீட்டுவது
இருளைப் பிரிக்கிறவன் மகன்
இருட்டுது
என் மகன் எங்கே
என் இருதயத்தைச் சுமந்த சில்வண்டு
போன இடம் தெரியுமா
மாலை வகுப்பிற்கு போய்வந்து நீ வைத்த
தேநீரைப் பருகிவிட்டு
யாரோ ஒருவனின் பெயரைக் கொறித்தபடி ஓடியவன்
என்னைப்போல்
வேறெங்கோ ஒளித்திருந்து
இருளைப் பிரிக்கிறானா
கும்மிருட்டுள்
வெளிச்சம் தேடுகின்ற ஒருவனின் புதல்வன்
வயது ஏழரை
சின்ன வகுப்பில் படிக்கிறவன்

மதியம் போல்
அவன் செய்துவைத்திருக்கும் கடதாசித் தோணி
அவன் மேசையைக் கடலாக்கி
நிற்கிறது
புத்தகக் கல்லில் பாய்ந்ததா

ஓடாத அந்த
காகிதக் கப்பல்போல்
வழியைப் பார்த்தபடி நானும்

வழி என்பது இவனது வருகையை
எதிர்பார்க்கும் எனக்கு
மனம் முழுக்க ஆணி அடிக்கின்ற
தச்சுத் தொழிற்சாலை
தச்சன் கவலை

இதோ கும்மிருட்டுக்குள் புரண்டபடி வருகின்றான்
நிலவுதான் இவனைக் கழுகி எடுக்கவேண்டும்

வீட்டுக்குள் வந்தவனைத் தேடி
தாயான நீ
அலைகின்றாய்
நிலவும் அலைகிறது
அலைச்சலில்தான் அணையாத தீபங்கள் ஒளிர்கின்றதோ

இந்த வாழ்க்கை புரிபவனும் அலைகின்றான்
காலக்;கிரமத்தில் மெல்லமெல்ல ஜொலிக்கின்றான்
பிறகு
அவனுக்குப் பின்னால் உலகம் சுழல்கிறது

No comments: