Sunday, June 12, 2011

கவிதைகள் ரவிசுப்ரமணியன்

செயற்கைக்கோள் சிகிச்சை

அதிகாரத்தின் குரலைக் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டதால்
ஒரு நாள் கேட்கவில்லை எனினும் துடித்துப் போவர் மக்கள்
மயக்கும் அதன் மதுரத்தில் சொக்கிக்கிடந்தனர்

அலுவலகங்களில், வீடுகளில்,
கடைத்தெருவில், சந்தைகளில்
கடற்கரையில், குளக்கரையில்
கோவில் வாசல்கள் உட்பட
அதன் கட்டளைகள் கேட்டபின்தான் விடியும்பொழுது

படிக்கச் செல்பவர்களும்
இதற்கு விதிவிலக்கில்லை
காற்றைப் போல் தவழ்ந்து வந்து
அனைவரது செயலையும் தீர்மானிக்கும் காரணியான
அதன் உள்ளடக்கக் சுருதியே வேதமானது எல்லோருக்கும்

எல்லா வலிகளுக்கும் மருந்தாக
எல்லா அவசங்களுக்கும் ஆறுதலாக
எல்லாத் தேவைக்கான தத்துவங்களாக
எல்லோரும் முணுமுணுக்கும்
எளிய மந்திரமாக மாறியிருந்தது அது

நண்பகல் நேரத்துத் தேநீரின்போது வடையாக
மதிய உணவின் ஊறுகாயாக
மாலைநேரச் சிற்றுண்டியின்
சன்ன உரைப்புக்குப்பின் ருசிக்கும் காப்பியாக
இரவு உணவுக்குப் பின்னான மலிவுப்பழமாக
மாறி மாறி உவகை தந்த அற்புதமது

சீமானுக்கும்
சாக்கடையின் மூடியில் படுத்துறங்கும் தோமானுக்கும்
அதுவே அமுது
ஓர் அசரிரீயின் வாக்கைப் போல
அதிகாரத்தின் குரலைக் கேட்டுச் சீரழியும் மக்களுக்கு
அதிகாரம் சதா
தங்களைப் பகடிசெய்யும் குரல் மட்டும் கேட்கவேயில்லை.

யார் காதிலும் விழாதவாறு
எல்லோரது காதுகளின் ஒரு மர்ம நரம்பை மட்டும்
எப்படிச் செயற்கைக்கோளின் லேசர் சிகிச்சையால் அறுத்தார்கள்
என்பதைத்தான் இன்னும் வெளிநாட்டு உளவாளிகளாலும்
கண்டுபிடிக்க முடியவில்லை.

No comments: