Sunday, June 12, 2011

கவிதைகள் பெருந்தேவி

கடைசி மேசையில் ஓர நாற்காலியில்

ஊமத்தைக் குளிர் ஊடுருவ
சாக்ஸை நன்றாக மேலே இழுத்துவிடுகிறேன்
ஆண்களும் பெண்களும் சரவிளக்குகள் கீழே
நிழல்களின்றி நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள்
மெல்ல நடந்து
ஒருவனின் கையைப்பற்ற
விரைகின்றன கால்கள்
“மன்னிக்க வேண்டும்
நான் ஏற்கனவே ஒருத்தியோடு ஆடிக்கொண்டிருக்கிறேன்”
அப்படி யாருமில்லை என்கிறேன்
“இல்லை இங்கே பாருங்கள்”
அங்கே எவளுமில்லை என்கிறேன்
“இதோ இவளைத் தெரியவில்லையா”
நான் தான் இவள் என்கிறேன்
“குடித்திருக்கிறீர்களா?”
அவன் அவமானப்படுத்துவதாகக் கத்துகிறேன்
“நீ பைத்தியமென்று நினைக்கிறேன்”
யார் பைத்தியமென்று தரையை உதைக்கிறேன்
“நாம் சற்றுத் தள்ளி நகர்ந்து ஆடலாம், இந்தக் கிறுக்கு
நம் இன்பத்தைக் குலைக்கிறது”
நானன்றி எவள் உனக்கு இன்பத்தைத் தரமுடியும்?
“தள்ளிப் போ இல்லையென்றால் செக்யூரிட்டியைக் கூப்பிடுவேன்”
யாரையேனும் கூப்பிடு நான்தான் இவள்
இவள் இல்லை நான்தான் இவள்
நீ நீ என்றால் நான்தான் இவள்
ஒரு கணம் அவன் மறுப்பேதுமின்றி
என் கரங்களைத் தொடுகிறான் என்னிடுப்பை வளைக்கிறான்
“என்னாயிற்று, ஏன் எங்கோ பார்க்கிறாய்?”
கடைசி மேசையில் ஓர நாற்காலியில்
ஷூவைச் சரிசெய்தபடி நிமிர்கிறாள் ஒருத்தி
எங்களைப் பார்த்தும் பாராது பின்னர்
வெளியே நடக்கிறாள்.

o

இருவர் கொண்ட ஓர் உறவு

சட்டையிலிருந்து அவனை விடுவித்தாள்
அவன் புஜங்கள் மினுத்து அலர்ந்தன
நீ பஹுத் செக்சி
கருங்குழல் விளக்குகள் இவை
கூச்சப்பட்டான்
ஆறு பேக்குகளில் ஐந்து வந்துவிட்டிருந்தன
அடேயப்பா என்றாள்
என்ன பாதாமா போடறே
மீண்டும் கூச்சப்பட்டான்
மீசையில் பூத்த நுனிநரை
புதுபியரில் நுரை போலொரு துள்ளல்
இதுகூட நல்லாத்தான் இருக்கு
கூச்சப்பட்டான்
என்ன வெட்கம் என் கன்னுக்குட்டி
இறுக்கினாள் முன்னேறினாள்
நம் பரப்பிய புனைவுகளில் காலம்காலமாக
பெண்ணை ஆண் இறுக்குவதுபோல
பெண்ணிடம் ஆண் முன்னேறிக் காட்டுவதுபோல
நிசத்தில் இங்கே
அவள் வலுவில்
அவனையும் முன்னேற்றினாள்
கண்மூடாக் கலை
வித்தற்ற ஒரு புள்ளி
சின்ன நிறுத்தம்
இன்னும் கூச்சப்பட்டான்
பெண்ணிடம் மட்டுமே கூச்சப்படுவேன்
என்று அவளில் குழைந்தான்
அவள் பெண்ணா
யாருக்குத் தெரியும்
அவளுக்கும் வெட்கம் வந்தது
அவள் பெண்ணென்று அது வரவில்லை.

o

தனித்து

நெளிவிலும் சுழிவிலும்
நேரம் தொலைத்தும்
பார்வை தப்பியும்
நினைவற்ற ஒருவழியில்
நின்றும் நிற்காமலும்
ஓட்டமாய் நகர்கிறது
சின்னஞ்சிறு
மணி.

o

நேயம்

யாரையும் பிடிக்காத என்னை
யாரையும் பிடிக்கும் ஓர் உலகு துரத்துகிறது
சக்கரைக்குவியலில் மூச்சுமுட்டி
அழுந்திக்கிடக்கிறது ஓர் எறும்பு

No comments: