Thursday, August 11, 2011

மாலதி மைத்ரி கவிதைகள்

எனது மதுக்குடுவை

என்னிடமுள்ள இக்குடுவை
என் மூதாதையரிடமிருந்து வந்தது
நூற்றாண்டுகளாக
உன்மத்த வாசம் வீசுமது
எம் பெண்களின்
முத்தத்தால் நிரம்பியிருந்தது
அதன் ரேகைகளில் ஒளிந்திருக்கும்
அமுதின் ஊற்று
என்னைக் காணும்போதெல்லாம்
பிள்ளைச் சூரியனாய் வழிந்தது
கள்ளுடன் சுட்டக்கருவாடும்
மாசிமாதக் கூத்துமாய் களைகட்டிய
இளமையின் நினைவைப் பருகுகிறாள்
குடுவையைப் போலிருக்கும் பாட்டி
ஊர்ச்சுற்றி மீன் விற்கும்
நெடிய அலைச்சலுக்குப்பின்
அவளின் மாலைப் பெரும்பொழுதுகள்
பொங்கும் மதுவுடன்
காதலும் நுரைத்து வழிந்ததாம்
அவளின் பேரானந்தத்தின் குளம்
எப்போதும் நிரம்பித் தளும்பியபடியிருந்தது

எங்களின் தாழ்ந்த எரவாணத்தில்
சொருகிய மீன்பரிக்கு அருகில்
கயிற்றில் ஊஞ்சலாடும் சுரக்குடுவை
ஒரு குட்டித் தேவதையென
எனது பால்யத்திலிருந்து
என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது
அதற்கு எப்போதும் வசீகரமான
ஒரு மர்மப் புன்னகையை
நான் பரிசளித்துக்கொண்டிருந்தேன்

வீட்டுத் தென்னையின் முதல்காய்
குலதெய்வப் படையலானது
அடுத்த பாளையில் கள்ளிறக்கி
உலகை இரண்டாவது முறை
சுவைக்கக் கொடுத்தாள் அம்மா
மோகத்தின் பித்தேறிப் பருகிக்கொண்டிருக்கிறேன்
இவ்வுலகை இக்குடுவையில் ஊற்றி.

ஒட்டகங்கள் குதிரைகள் ஒரு மீன்கூடை

என் பாட்டியிடம்
ஐந்து அரபு ஒட்டகங்களும்
ஆறு கிரேக்கக் குதிரைகளும்
ஒரு மீன்கூடையும் இருந்தன
அவள் தனது கூரை வீட்டின்
சுற்றுக் கால்களிலேயே
அவைகளைக் கட்டிவைத்திருந்தாள்
அதனால் வீடு குழந்தைகள்
கும்மாளமிடும் மைதானமாயிருந்தது

விடிவெள்ளியே எழ அஞ்சும்
கருக்கலிலே வாசல் பெருக்கி
சட்டிப்பானை கழுவி
பல் துலக்கி
நிமிர்ந்து கீழ்வானத்தைப் பார்த்து
ஒரு கும்பிடு வைத்து
ஒரு சொம்பு நீராகாரத்தால்
வயிற்றை நிரப்பியபின்
மீன்கூடையுடன்
பத்துமைல் தொலைவு
கிழக்கே நடப்பாள்
ஒளி தீண்டாத குளிர்காற்று
இவள் அலுப்பைத் துடைத்தபடியே
துணையாய் கைகோத்து வரும்
கரைபிடிக்க முந்தும்
தூரத்துப் பாய்மரங்களுக்கிடையே
இவளின் வெற்றிலைச் சிவப்பேறிய
உதடு போன்ற தொடுவானத்துச் சூரியன்
கடலை முத்தமிட்டுச் சிரிக்கும்
கடற்கரையில்
காத்திருப்பவளைக் கண்டவுடன்

ஊரூராய் மீன் விற்றுத் திரும்புகையில்
காலிக்கூடையில் அரிசி புளி மிளகாய்
பிள்ளைகளுக்குக் கொஞ்சம் தீனி
விறகுகட்டு மொந்தைக் கள்ளுடன்
பேய் பிசாசு முனி மோகினி
தேவதைகளைக் கையில் பிடித்தபடி
மாலை வீடுவந்து சேர்வாள்
இந்த ஒட்டகங்களும் குதிரைகளும்
அவளைப் பின்தொடர்ந்து வந்துவிட்டன

குளித்து முடித்து வாசலில் பாய் விரித்து
வெற்றிலையை மென்றபடியே துவங்குவாள்
மோகினியின் மடியில் உறங்கும்
குழந்தைகளின் அருகில்
ஒட்டகங்கள் அசைபோட்டுக்கொண்டிருக்கும்
குதிரைகள் கால்மாற்றி நின்று கனைக்கும்.

நீலியின் மகன்கள்

கழிவறைத் தடுப்புக்குள்
பிசுபிசுத்துக் காய்ந்த விந்துவை
அலசியபடி மனைவிமார்கள்
பெய்யும் மூத்திரத்துடன்
அதிருப்தியுடன் விடிகிறது
அன்று காலை

தோப்புகளில் புதர்களில்
வல்லுறவில் சிதைக்கப்பட்ட
சிறுமிகளின் பெண்களின்
ரத்தக் களரியான
ஈ மொய்க்கும் யோனியுடன்
எழுகிறது சூரியன்

பசி எரியும் சூல்கொண்ட
வயிற்றைத் தடவியபடி
வீதிகளில்; கையேந்தித் திரிகிறது
பைத்தியக்காரிகளின் அன்றைய பொழுது

ரப்பருறை மாட்டிய குறிகள்
உரசி காந்தும் யோனிக்கு
களிம்பிடும் விலைமகளிர்
மலிந்த விடுதிகள்
ஆறாத ரணங்களுடன்
ஒரு தேநீரின் கதகதப்பில் விழிக்கிறது


காலம்
வன்மமேறி விடைத்த
ஆண்குறியைக் கையில் பிடித்தபடி
வேட்டைக்குக் கிளம்புகிறது தினமும்

சங்கம் தொட்டு
காதல் புதையுண்டுபோன நிலத்தில்
ஈன்று புறம் தரும் மகளிர்

பிரசவமனையில்
அறுக்கப்படும் தொப்புள்கொடிகளுடன்
பிஞ்சுக் குறிகளைக் கொய்கிறாள்
மருத்துவச்சி நீலி.

கெடுக சிந்தை கொடிது இவள் பணிவே

முன்னொரு பாட்டனை இவள் பாட்டி
பரத்தை வீட்டுக்குக் கூடையில் சுமந்து சென்றாள்
தந்தையோ ஊருக்கொரு குடித்தனம்
வில்வண்டி கட்டிக்கொண்டு போனான்
கணவனோ களையெடுக்கும் பெண்களை
மிரட்டிப் புணர்ந்தான் காணிகளில் சிலதை
வித்து விலைமகள்களிடம் சென்றான் மூத்தமகன்
திருவிழா கோலம் பூண்ட கிராமத்தின்
மேளயொலி கேட்டதும் குளித்துக் கிளம்பும்
இளையவனுக்குத் துவைத்த துணி எடுத்துக் கொடுத்து
வேளையோடு வந்து சாப்பிட்டுப் போகும்படி
சொல்லி அனுப்புகிறாள் எல்லாமறிந்த இவள்
கெடுக சிந்தை கொடிது இவள் பணிவே.

சிறுசுடரான யோனி

கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி
காமத்தின் பேரலையை
ஆத்திக்கொண்டிருக்கும் விழுதுகளின்
மேலே கூடமைக்கின்றன
தூரதேசப் பறவைகள்
நட்சத்திரங்கள் புதைந்துபோன
சதுப்பு நிலத்தின்
கூதிர்கால இரவொன்றில்
இளம் குஞ்சுகளுக்கு ஒளியேற்ற
கொத்திக்கொண்டு பறக்கிறது
கருங்கால் நாரை
அதன் அலகில்
சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.

No comments: