Thursday, August 11, 2011

அழகுநிலா கவிதைகள்

மந்திரச்சொல் ஏதுமில்லை
மாயக்காரனும் யாருமில்லை
சுழன்று ஓடும் ஆற்றுக்கடியில்
புரண்டு படுக்கிறது
கூழாங்கல்லும்

o

மீண்டும் அந்த
ஒற்றையடிப்பாதை
காத்துக்கொண்டிருக்கிறது. . .
இந்த முறை
வழியனுப்புவதற்காக.

o

ஆற்றில் விழுந்த இலை
மரத்தைவிட்டு வெகுதூரம்
வந்தாயிற்று.
அது இலை என்பது
ஆற்றுக்குத் தெரியாது.
அடுத்து அருவி என்பது
இலைக்கும் தெரியாது
தும்பியொன்று பயணிக்கிறது
இலைமீது,
ஆறு, தும்பி, அருவி
இலை
யாருக்கும் தெரியாது யார்
யாரென்பது.

o

விண்மீன்கள் ஒளிரும் மகா இரவில்
அண்டத்தின் தீராத பேரிருட்டில்
மரம் உதிர்க்கிறது மற்றுமோர்
இலையை,
அது
இந்த முறை
காற்றில் அலைகிறது.

o

வெண்கலக் குதிரை
உடல் உயிர் வாழ்வு
கனவு எல்லாமே
வெண்கலம்.

o

விளையாட்டு என்றால்
விளையாட்டுத்தான்.
அங்கேயென்ன. . . குருதி
காயம் தழும்பு வலி. . .
அங்கே பாருங்கள்
எத்தனை விளையாட்டாய்
போர்க்களம். . . பாதிப்பாதி
யானைகளும் குதிரைகளுமாய். . .
அல்லிக் குளமாய்
தலைகள் மிதக்க மிதக்க.

No comments: