Thursday, August 11, 2011

அனார் கவிதைகள்

பெண் சிலந்திப்பூச்சியின் வீடு

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

நிலவில் துளையிட்ட ராட்சத முனையை
மலைமுகட்டில் இழுத்துக்கட்டி
முடிகிறாள் மறுமுனையை

முதலையின் தருணக் காத்திருப்பில்
கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்

வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்
ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்
பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க

கனவின் துவாரங்கள் வழி
சொட்டித் தேங்கிய
காமக் கடல் அலைகள் பாய்கின்றது
சிலந்தி வயிற்றினுள்

சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி
நீளத் தொடங்குகிற நூலாம்படைகள்
மிதமிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி
உலகைத் தாண்டிப் பெரிதாகிறது . . .

வெசாக் பூரணை தினம்

நினைவின் அதிமென்மை படியும்
பனியின் அணைப்பு ஒளியில் எரிகின்றது

பளபளப்பான வெள்ளி வார்ப்புகள் கொண்டசையும்
சூரியகாந்தி வயல்களில் சஞ்சரிக்கின்றது
நம்முடைய பௌர்ணமி

ஒரு பாவமும் அறியாத
உன் கை விரல்களின் குளிர் தூவல்களில்
காதலை உணர்ந்தவாறு கூடவருகிறேன்

விகாரையின் முகப்பில்
கண்ணீர் துளிர்த்த இமைகளை மூடிய புத்தனின் சிலை
மேலே ஆண்மையின் திளைப்பைப் பாடுகின்ற அரசிலைகள்
காதலாகிக் கசிந்து வழிகின்ற பூரணை ஒளி

ஒளித்தாரைகளை அள்ளும் காற்று
சிறு சுடர்களின் உயிருடன் விளையாடுகின்றது
வாவிக்கரையில்
மூன்று சிவப்புநிற வெசாக் தாமரைகள் பூத்துநிற்கின்றன

அனைத்தையும் தாண்டி எங்கு செல்கின்றோம் ?

நிலவின் மங்கலான அழுகை ஒலியுடன்
சறுக்கலும் அபாயமுமான பயணத்தில்
வந்துகொண்டேயிருக்கிறது
விம்மும் தாரகைகளும்
ஆறத்தழுவுகின்ற உன் கைகளும்

No comments: