Thursday, August 11, 2011

சுகிர்தராணி கவிதைகள்

பறைத்தொகை

திணை - குறிஞ்சி
துறை - தோழி தலைமகற்கு அறிவுறுத்தியது

இருந்துறை படர்ந்த பாசி அன்ன
ஆழ்நிறம் சுடரும் இலைவடி நீரை
பருகும் சாடி இரட்டை ஊர!
அறிந்திசின் யான்ஒரு மடமொழி தொழி
ஆவின் உலர்ஊன் தொங்கும் இல்வாய்
சாவில் முழங்கும் பறையும் மிளிர
எந்தை செய்தொழில் யாங்கனம் பகர்வேன்
சிந்தை அறிவீர் எம்ஊர் சேரி
பன்னெடும் மரபு அன்னையும் அவள்தாய்
சொல்லரும் துயரம் நெஞ்சம் துய்ப்ப
தோழியாய் உழன்று காலம் கழிப்ப
ஊழியும் வருமோ எம்நிலை தீர?
மண்புதை தேறல் தெளிசுவை உறழ
கண்டிசின் எந்தன் காமமும் உளதே
தருசூழ் அருவி ஆங்கண் புக்கு
மருள்விழி தலைவி நாட்படு காமம்
தண்பூ ஆரம் அணிந்த மார்ப!
பண்டை உரைத்தனள் என்இயல் மறைத்தே
கடுகினும் விரையும் நெடுந்தேர் கொள்ளும்
படுஇடம் அறியுமோ நறும்பூ காற்று?
ஊரும் சேரியும் ஒருநிலம் சுருக்கு
கூர்முலை அழுந்த கூடுதி எனையே!

தவமணி மகள் சுகிர்தராணியார்

திணை - குறிஞ்சி
துறை - தோழி தலைவிக்கு உரைத்தது

முதுவெயில் எல்லி சிலம்பு மறைய
மதுவுண் சுரும்பர் இன்னொலி கிளர்த்தும்
மென்சிற குடைய அம்சிற புள்ளினம்
சென்றுறை கூடு அதிர்வுறும் அன்ன
புன்செய் மாலை கருஇருள் சேர்பு
பொன்சுடர் மங்கும் பசலை பெரிதே
வாழி தோழி யான்என் செய்கேன்
நிலம்புகு முளைவிதை தலைகாண் பன்ன
தளர்நடைப் பருவம் தொடங்கக் கண்டாய்
உம்முடன் யாம்கொள் நட்புவாழி
கால்உகிர்க் கிளியினம் இளம்பழம் கொத்தும்
அகிலுடன் நாற்றம் பிணைதல் போல
தேள்விடக் கூடல் கொங்கை உதிர்க்கும்
காமமும் உடலும் முயங்கல் அறிவாய்
அடிதொழு வினையின் நோயோடு மிக்கு
சுடுமண் சிற்பம் சிதறள் ஆனேன்
வளைவரி புலிசெல் அம்நெடுங் காட்டில்
நெளிஉயிர் ஈனும் சூல்கொள் பேதையாய்
உந்தன் கழிபடர் காமமும் வாழ்வும்
செலுத்துவை நீயே நெறிபட ஆகி
என்நசை வாழ்வு தேர்ந்திசின் யானே!

No comments: