Sunday, June 12, 2011

கவிதைகள் மனோமோகன்

அரக்கனும் கதைகளும்

விடுகதைகளாலான அவளது சுருக்குப்பை
அவ்வளவு எளிதில் அவிழ்வதில்லை
இரண்டு வெற்றிலையோ ஒற்றை மண்பாக்கோ
குழந்தையின் கள்ளமற்ற சிரிப்போ
ஏதேனும் வேண்டும் ஒரு புதிரவிழ
அவளது கதைகளில்
இளவரசியைக் கடத்திப்போகும் அரக்கனின்
உயிர் எதிலிருக்குமென்று அவளுக்கு மட்டுமே தெரியும்
ஒருமுறை அது கிளியிலிருந்தது
ஒருமுறை வண்டியிலிருந்தது
ஒருமுறை சமுத்திரத்தின் அடியாழத்தில்
கடல்குதிரைகளால் பாதுகாக்கப்படும்
எலுமிச்சம் பழத்திலிருந்தது
ஒருமுறை தேடிச் செல்பவனின் கனவிலிருந்தது
ஒருமுறை
அதுவரை அவிழ்க்கப்படாத புதிரொன்றிலிருந்தது
ஒருமுறை
என் வீட்டுத் தேநீர்க் கோப்பையிலிருந்தது
இளவரசியை மீட்கப்போகும்
குதிரைவீரர்களால் நிறைந்த எனது தெருவில்
நேற்றைய தினம் அரக்கன் வந்து போனான்
இந்தமுறை அவன் கடத்திப்போனது இளவரசியையல்ல
இளவரசியைப் பற்றிய கதைகளை
விடியலில் எரிப்பார்களோ புதைப்பார்களோ
கதைகளைத் தொலைத்த பின்னிரவில்
அரக்கனைக் கொல்லும் சூட்சுமம் மறந்து
வெளிவாசலில் உறங்குகிறாள்
ஆயிரம் கதைகளாலான அந்தப் பாட்டி.

வால் தின்னும் பல்லி

இழக்கவியலாத வால் பகுதியில்
தனது மரணம் இருப்பதறிந்து
என்னை எதிர்கொள்ளும் கணங்களில்
தனது வாலைப் புசித்துவிடும்
சுவர்ப் பல்லி வடிவிலான அவதாரக் கதையை
உன்னைப் போலவே கதைகளோடு வாழ நேர்ந்த நான்
வால் தின்னும் கதையென்கிறேன்
நீயதைப் புராணமென்கிறாய்
யாரிடமும் சொல்லிவிடாதே
ஆப்பிள் தோட்டத்தில் சந்தித்த பெண் சாத்தானின்
நிர்வாணம் ரசித்த உலகத்தின் முதல் பெண்
தானொரு பெண்சுகியென உணர்ந்த கணத்தை
உண்டு செரித்தலும்கூட
அந்தப் பல்லிதான்

No comments: