Saturday, November 29, 2008

பஞ்ச தந்திரக் கவிதைகள் யுக பாரதி

"
ஒன்று....

தந்திரம் நிரம்பிய நரி
தனது கூட்டணியினரோடு
பேசிக் கொண்டிருந்தது.

எதிர்க் கட்சிகளின்
அதீத மக்கள் பணியை
எப்படி முறியடிப்பதென...

எதற்கெடுத்தாலும்
அறிக்கை தருவதன் மூலம்
ஓரளவு சமாளிக்கலாம்...

கடுமையான வெயிலுக்கு
காரணம் இவர்களென்று
கருத்து பரப்பலாம்...

வித விதமான
விவாதம் குறித்து
எதிர்க்கட்சி நரிகளிடம்
கருத்துக் கேட்க
அவை சொல்லின
'தேர்தல் வரப் போகிறது'


இரண்டு....

பேசுதலே
பெரிதென்றிருக்கும்
தவக்களைகள்
தமக்குள் அடித்துக் கொண்டன
செம்மொழியானதற்கு
யார் காரணமென்று...

மொழியே காரணமென்று
எதிர்க்குரல் கொடுத்தன
முதலைகள்...

வலுத்தது சண்டை
அக்கடைசியில்
செம்மொழியின் சிறப்பு
கெட்ட வார்த்தைகளில்
வெளிப்படலாயிற்று ...

போக்கத்த பிரஷைகளோ
புலம்பத் தொடங்கினர்
குளம்வற்றும் வரைதான்
தவளைக் குச்சல்
கூட்டணி இருக்கும் மட்டும்
கொடி பிடிக்கும்
முதலைகளின் மொழிப்பற்று...

பசிக்கிறது எனச்சொல்ல
செம்மொழியானாலென்ன?
கம்பளியானாலென்ன?


மூன்று...

நதிகளை
இணைப்பதொன்றே
தீர்வென்றன ஒட்டகங்கள்...

தாளாத தாகத்தில்
செத்தொழிதல் பொறுக்காமல்

சூழல் கெடுமே சொல்
இதை விடவும் கெடுவதற்கு
இருக்கிறதா சூழல்...

நாடு கிடக்கிறது
பஞ்சத்தில்
நாசமிழைபோர் மஞ்சத்தில்...


இருதரப்பு பேச்சு வார்த்தை
கேட்ட பிறகு
ஐ நா கரடி அமைதியானது...

தேசிய இனங்கள்
சிலிர்த்தெழுதல்
பயங்கரவாதமென்றும்
சிறுபான்மை
சீற்றம் கொண்டால்
தீவிரவாதமென்றும்
மாளிகை வெள்ளை
நடைமுறை கருப்பு...

தேடினாலும்
கிடைக்கவில்லை பின்லேடன்
தினசரி நடக்கிறது அநியாயம்...


நான்கு...

பட்டமில்லாது வாழ்தல்
பாவமெனக் கருதியது
பச்சோந்தி எனவே

நிறத்துக்கொரு பெயர்
நேரத்திற்கொரு
புனைப்பெயர்...

கெட்டதைத்
தொடர்ந்து செய்தால்
கிடைக்கும் சில கௌரவம்
பட்டதை
உரைக்காவிட்டால்
பாராட்டு விருது உண்டு...

தலைவர்கள் மருத்துவர்கள்
தமிழ்மக்கள் நோயாளிகள்..."

No comments: