Sunday, January 4, 2009

விலகின தடத்தில் - பூமா.ஈஸ்வரமூர்த்தி.

"மாமிசம் உண்ணும்
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
இந்நேரம் கிடைத்திருக்கும் சமிக்ஞை
பக்கத்து ரயில்நிலையத்திற்கும்
விபத்து நடக்கும் போதெல்லாம்
திருடக் காத்திருக்கும்
சனங்களுக்கும்தான் இன்னும் இல்லை

எல்லாம்
ஒற்றைக் கணத்தின்
ஒரு துளியிலேயே நடந்தேறியது

தடம் விலகின
ரயில்ப் பெட்டிகள்
உடைந்துபோன எழுத்துக்கள் போல
அந்தரத்தில் தொங்கின

நுரையீரலை
பதட்டமும் திகைப்பும் நிறைக்க
ஓலமும் கதறலும் பிளிறலும்
காற்று வெளியை நிறைத்தது

திருகிப் போடப்பட்ட உடல்கள்
மிஞ்சின ரத்தத்தோடு சுயநினைவும்
வெளியேற
ஒளி விலகின உடல்கள்
தோல் கிழிந்து சதை தெரிந்த உடல்கள்
இரத்தம் உறையத் துவங்கியிருக்கும்
உடல்கள்

ஆனால் எனக்குத் தெரியும்
பிறிதொரு இடத்தில்
மறுநாள் காலை
பணிக்குத் திரும்பும் சாவு
கையில் அன்றைய
செய்தித்தாளை
சரி பார்த்துக் கொண்டிருக்கும்
மிகுந்த அக்கறையுடன்..."

No comments: