Sunday, January 4, 2009

என்.டி.ராஜ்குமார் கவிதை

"அம்மாவிற்கு உளுந்துவடை ரொம்பப் புடிக்கும்
நான் விடியற்காலையில் எழுந்து குடிக்கும் முதல் கோப்பை
சாராயத்தைப்போல
ரசித்து ருசித்துத் தின்பாள்

மேலும்
எந்த அவசியத்திற்கு வைத்திருக்கும் பணமானாலும் சரிதான்
கடன் வாங்கியேனும்
கேட்ட உடனே யெடுத்துத்தரும் ஒற்றை ரூபாயில்கூட
அவளின் அதீத அன்பு நிறைந்திருக்கும்

பிறகு
அம்மாயில்லாத வாழ்வை நினைத்தால்கூட
நீரின்றி துடிக்குமெனது மீன்குஞ்சு

இருப்பினும் நான் தாயில்லா பிள்ளையானால் என்ன செய்வேன்

உழைக்காமல் மக்குப்பிடித்துப்போன உடலை
கட்டாயப்படுத்தி கூலிவேலைக்கு அழைத்துச் சென்றுவருகிறேன்

கொஞ்சமிருந்து ஓய்வெடுக்கும் சுக்குக்காப்பிக் கடையில்
சூடு மணக்க வடைபோடுகிறான் தொழிலாளி

ஒரு குழந்தையைப்போல
வாங்கித்தாடாவென
அடம்பிடிக்கிறது அம்மாவின் நினைவு

போன மாதமே பாதுகாத்து வைத்திருக்குமிந்த
நூறுரூபாய் நோட்டை
சில்லறையாக்க மனமின்றி
தினமும் கடந்துசெல்கிறானிந்த அம்மாவின் செல்வம்..."

No comments: