Saturday, January 3, 2009

நெடுங்கோடை - திருமாவளவன்

"அடையாளக் குறிப்புகள்
எதுவும் கிடையாது
எங்கிருந்து தோன்றும் என்பதறியோம்
எப்பொழுதென்ற விபரம் ஏதுமில்லை

குதிரை மீதில்
ராஜகுமாரன் ஆரோகணிக்கும் தோற்றத்தில்
அன்றில்
இறக்கை முளைத்த தேவதைக் குஞ்சொன்றாய்
மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்

இன்னும்
நெடிய தோற்றமும் ஒளி கசியும் விழிகளும்
கற்றைச் சடையுமாய் யோகியின்
வடிவில் அவதரிக்கும்
அற்புதங்கள் நிகழ்த்தும்
அள்ளியள்ளிக் கொட்டும்

வெறும் புனைவுகளில் கழிந்துகொண்டிருக்கிற
பொழுதில்
சிலர் கண்டதாகக் கூட
கதைகள் பறைவர்

நீள இரவுகள்
நெடு வருடங்கள்
கொடிய மழை நாட்கள்
எத்தனையோ இலையுதிர் காலம்

கழிந்து போயிற்று

கண்கள் பூத்துப் பூஞ்சை படர்கிறது
தேடிப் போன குழந்தைகளின்
குருதி வாடை
காற்றிலே கைவீசித் திரிகிறது
மூக்கைப் பொத்தியபடி பார்த்திருக்கிறோம்

காத்திருப்பின் ஆற்றில் நெடும் கோடை
பாளம் வெடித்த சுவடுகளிடை
தொலைந்து போயிற்று
வாழ்வு

இப்பொழுது
உடல் மெலிந்து
எலும்பும் தோலுமாய்
குழிக்குள் இறுகிய விழிகளோடு
பிச்சைக்காரன் தோற்றத்தில்
ஒன்றின் நடமாட்டம்
ஊருக்குள் தெரிவதாய் பேச்சுலாவுகிறது..."

No comments: