Saturday, January 3, 2009

மனம் - ஜெயபாஸ்கரன்

"நகரப் பேருந்துகளின்
நடத்துனர்களின் மீது
அதிருப்தியாய்
இருக்கிறேன் நான்.

தரவேண்டிய பத்து பைசாவை
தருவதேயில்லை
தருவதற்கில்லை என்றும்
சொல்வதற்கில்லை

ஏறுவதற்குள் விசிலடித்து
எத்தனையோ பயணிகளை
குப்புறக் கவிழ்த்திருக்கிறார்கள்
அவர்கள்.

போட்டி போட்டுக் கொண்டு
போகிறார்கள் காலியாக.
நிறுத்தங்களில் நிறுத்தாமல்
நிற்பவர்களின் வலியறியாமல்.

எல்லாவற்றுக்கும் மேலாக
எச்சிலைத் தொட்டுத் தொட்டு
பொட்டு வைத்து
பயணச் சீட்டுகளை
பரிமாறுகிறார்கள்

இப்படியாக
நடத்துனர்களுக் கெதிரான
கற்களை தேடித் தேடி
கண்டெடுத்து வந்து
மீண்டும் மீண்டும்
கல்லறை கட்டுகிறேன் நான்.

ஆயினும்
ஒவ்வொரு முறையும்
அதை உடைத்து
உயிர்த்தெழுந்து நிற்கிறது
5E நடத்துனரிடம்
அதிகப்படியாக நான்
பெற்றுக் கொண்டு வந்துவிட்ட
ஐந்து ரூபாய்..."

No comments: