Saturday, January 3, 2009

பூங்கா - எஸ்.வைதீஸ்வரன்

"மரக் கிளைகளின்
லேசான ஆட்டம்..
காற்றின் மழலையை
கூர்ந்து ரஸிப்பது போல்.

பூமியை அள்ளிக் கொள்ளவென
ஓடுகின்றன குழந்தைகள்
புல்வெளியெங்கும்.
மலருக்குள் பூச்சிகள்
மோதி மோதிப் பரபரக்கின்றன
மகிழ்ச்சி ஏனென்று தெரியாமல்.

வானத்தை மடியில் போட்டுக் கொண்டு
தூங்குகின்றன நீர்க் குட்டைகள்
காலத்தை மறந்து.

வாங்குவோரின்றி பழக்கூடைக் காரன்
வேலியோரம் வதங்கி நிற்கிறான்
விரலைத் தின்றவாறு.
அரிவாளும் இளநீரும்
பகை மறந்து கிடக்கின்றன
பகல் நிற வண்டிகளில்.

இரண்டொரு தனித்தவர்கள்
சோகத்தை அழகாக்கிப் பார்க்கிறார்கள்
அவரவர் கற்பனையில்.

காக்கி சட்டைக்குள் நகருகின்ற
காவல்காரன் கைத்தடியை
தட்டி தட்டிக் கனைக்கிறான்
காதலர்களின் இடைவெளியைக்
காபந்து செய்ய.

கைகளையும் கால்களையும்
வீரமாக உதறி வீசி
நீட்டி ஆட்டி
அண்டிவரும் மரண பயத்தை
ஆன மட்டும் விரட்டுகிறார்கள்
நாகரீக முதியவர்கள்
நடுங்கும் இருதயத்துடன்.

அந்தி யழிந்து
பூட்டிய இருட்டுக்குள்
தூங்காமல் தூங்கும் பூங்காக்கள்
நடந்து போன பலதை எண்ணி
நள்ளிரவில் 'களுக்' கென்று
சிரித்துக் கொள்ளும் எனத் தோன்றுகிறது..."

No comments: