Saturday, March 12, 2011

கவிதைகள் அனார்

வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை

உனது பெயருக்கு
வண்ணத்துப்பூச்சியென்றொரு அர்த்தமிருப்பது
எவ்வளவு பொருத்தம்
இல்லாவிட்டால்
என் கூந்தலிலும் தோள்களிலும்
உதடுகளிலும் அமர்ந்து பறந்து திரிய
உன்னால் முடிந்திருக்குமா என்ன
உணர்வெங்கும் குந்திச் சிறகடித்துத் திரியும்
சாகசத்தை
வண்ணத்துப்பூச்சியாய் இல்லாது போனால்
எப்படி நிகழ்த்திக் காட்டுவாயெனக்கு
உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது
உள்ளே பாடல்போல மிதக்கின்ற
வண்ணத்துப்பூச்சி
வெளியே பிடித்துவைக்க முடியாத கனா

பைத்தியம் பிடித்திருக்கும் இந்நாள்களிலெல்லாம்
வண்ணத்துப்பூச்சியை மொய்க்கின்ற மலராகப்
பறந்துகொண்டேயிருக்கிறேன்
வாழ்வின் கனாக்காலம் முழுவதும்
பருவங்கள் மாறிமாறிப் பறக்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
தம் வண்ணங்களால் உயிரூட்டுகின்றன
நம் அந்தரங்க வெளிகளில்
வானவில் படிந்து உருகிக்கிடக்கும்
மலைகளின் தொன்மப் புதையல்களில்
மௌனம் குருதிசொட்ட ஒளிந்திருக்கிறேன்
இன்னொரு முறை
மகரந்தச் சொற்களினால் சிலிர்ப்பூட்டும்
பூங்கொத்துகளில் துளிர்த்துத் தேனூறும்
வண்ணத்துப்பூச்சியின் பிரம்மாண்டமான
கனாக்காலக் கவிதை நானென்பதில்
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்

பகிர்ந்துகொள்ளாத மாலை

சாம்பல் வெள்ளையாய்
மழை மூசாப்பு தொடங்கும்
அந்தியில் விகசிப்பது
என்னைச் சுற்றிக் குளிர் வலையை
விரித்துக்கொண்டேயிருப்பது
உன் உருவம்
வைக்கோற் கட்டுக்களை
அடைத்துக்கொண்ட மாட்டு வண்டிகள்
வரிசையாக
வயல் பாதையில் வருகின்றன
கறிவேப்பிலை பொரிந்த எண்ணெய் மணம் பரவச்
சிணுங்கும் மணிகளின் இசையோடு
மாலையின் ருசியைக் கூட்டுகிறான்
கடலை வியாபாரி
காற்றின் கிழிந்த ஓரங்களைத்
தைத்து முடிப்பதில்
அவசரம் காட்டுகின்றன
ஒரு சோடித் தும்பிகள்
நெருப்பு நிற மாலைக் கதிர்கள்
ஆற்றுநீர் மேற்பரப்பில்
மருதாணியிடுகின்றதா மயக்கத்தை
பதுங்கிவரும் வாடைக் காற்றின்
எதிர்பாராத தொடுதலில்
அதிர்ந்து சிலிர்க்கின்றன மஞ்சள் மலர்கள்
நான் கற்பனை செய்கின்றேன்
இத்தருணங்களில்
உன் இதமான நெருக்கத்தைப்
பருகாது ஆறிய தேநீரிடம்
நாம் பகிர்ந்துகொள்ளாத
இம்மாலைப் பொழுது தோல்வியைத்
தழுவுகின்றது.

வெறித்தபடி இருக்கும் கனவு

வெளிச்சத்தை இருட்டைத்
தின்று வளர்கிறது கனவு
தண்ணீரிலும் காற்றிலும்
தன்னைப் பூசிவிடுகின்றது
காலத்தின் தொலைவுவரை தகிக்கும்
வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென
உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது
அறியப்படாத புலத்திலிருந்து
நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று
அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவைத்
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில்
உருவற்று அலைகின்றன
ஆதியில் விடுபட்டுப்போயிருந்த
என் பொற்காலக் கனவை
மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்
இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு
அதன் இயல்புகளுடன்
அனுமதிக்கின்றது மழையின் கனவை
நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்
தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்
கட்டிலின் மூலை நான்கிலும்
முயலின் பளபளக்கும் கண்களாய்
மிரட்சியுடன்
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு

அனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்) கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் பிறந்தவர். இவரது 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.

No comments: