Saturday, March 12, 2011

கவிதைகள் குவளைக் கண்ணன்

நானுக்குள் கடல்

முன்பெல்லாம்
மிதந்துகொண்டிருந்தேன்
ஒருநாள்
போக்கிரித்தனமாகப் பிடுங்கிப் போனது
எனது மிதவையை
பின்னர்
நீந்திக் களைத்தேன்
களைத்து மூழ்கினேன்
மூழ்க மூழ்க

வேறொரு வெளிச்சம்
வேறொரு உலகம்
மீன்களாலான உலகம்
பெரிய சின்ன மீன்கள்
ஒரு மீன்
முன்னே வட்டமிட்டது
என்னை வட்டமிட்டது
உரசிச் சென்றது
உரசி உரசிச் சென்ற அது
கட்டித் தழுவி முத்தமிட
உப்புக் கடல் தித்தித்தது
நானும் அவளும்
புதையுண்ட நகரங்களில் நீந்திச் சுற்றினோம்
நடனமாடினோம்
ஆழ்கடல் அற்புத நடனம்
பின்னர்
அலைப் பரப்புக்கு வந்து அளந்தோம் கடலை

கடல்
தன்னைத்தானே
கரையறுத்துக்கொண்ட கடல்
சிற்றலையும் பேரலையுமாய்
ஓரலை உயர வேறலை தாழ
ஓயாத நடனக் கடல்
மேலே கரித்து
ஆழத்தில் தித்திக்கும் இருசுவைக் கடல்
பூரித்துப் பொங்கியெழும் பொங்குமாங் கடல்

கடல்மீது நான்
கடலுக்குள் நான்
நானுக்குள் கடல்

No comments: