Saturday, March 12, 2011

கவிதைகள் பவுத்த அய்யனார்

வெறுமையின் காலம்
படபடப்புடன் மனம் ஓட
நாடி நரம்புகள் புல்லரிக்க
என் ரகசியம்
உனக்கும் தொற்றுகிறதோ
எனப் பதறுகிறேன்
என் கட்டுப்பாடு அறுந்துவிழ
ரகசியத்தின் ஒரு புள்ளி
உன் மனதிலும் ஏறியதோ
எனப் புலம்புகிறேன்
ரகசியங்களற்ற மனம் வேண்டி
வாழ்நாளெல்லாம் இறைஞ்சுகிறேன்
ரகசியங்கள் தொடர்ந்துவர
குவியலாக்கிக் கொளுத்துகிறேன்
மேலும் மேலும்
அடர்த்தியாயின ரகசியங்கள்
ரகசியங்களைத் தோண்டிக்கடாச
எந்த உபாயமும் கூடி வரவில்லை
என் வாழ்வின் வரைபடம் எங்கும்
இறைந்து கிடக்கும் ரகசியங்களை
ஒரு பாயாய்ச் சுருட்டிக்
கடலில் கொட்டுகிறேன்
கடல் நீலமாகி
ரகசியங்களின் கடலாய் மாறிப்போனது.

(ஓவியர் ஆதிமூலம் அவர்களின் நினைவுக்கு)

No comments: