Saturday, March 12, 2011

கவிதைகள் இசை

பணிமனை

மனோரம்யமான மாலைவேளையின்
கடற்கரை நிலத்திலிருந்து
வெக்கை எழும்பும்
என் இருக்கைக்கு இழுத்துச் செல்லப்படுகிறேன்
ஒரு பிடிவாதமான சிறுமியை
பலம் பொருந்திய ஒற்றைக் கை
அனாயாசமாக இழுத்துச் செல்வதைப் போல்
கடலைத் திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அது எழுந்து உடன் வராது எனும் போதும்
கடல் முயன்று பார்க்கவே செய்தது
வரிசையாக அலைகளை எழுப்பி
என்னை நோக்கி விரட்டியது
பண்டகசாலைகள் பெரிய பெரிய கட்டிடங்கள்
அவைகளை மிரட்டி
மீண்டும் கடலுக்குள் தள்ளிவிட்டன
கடைசியாக ஒருமுறை கால் நனைத்துக்கொள்ள
நான் அனுமதிக்கப்படவில்லை
நுரைகளை அள்ளி
முகம் கழுவிக்கொள்ள
வாய்ப்பேதுமில்லை
பணிமனை நுழைவாயிலில்
கவனமாகச் சோதனையிடப்பட்ட நான்
புட்டத்தில் ஒட்டியிருந்த
ஒன்றிரண்டு மணல் துகளையும்
பறிகொடுக்கிறேன்

n

புத்தன் அழுதான்

ஆற்றமாட்டாது
கண்ணீர் பெருக்கியபடி இருந்த ஆனந்தாவுக்கு
திடீரென தான் ஒரு புத்தன் என்பது
பிரக்ஞையில் படவே
அழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்துக்கொண்டான்
நித்ய ஸாந்தமும் மந்தகாசமுமாய்
தன் முகத்தை நிலை நிறுத்த முயன்றானெனினும்
அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு நெளிந்த
முகரேகைகளின் வழியே கண்ணீர் பீய்ச்சியது
அது அவன் தம்மங்களனைத்தையும்
அடித்துக்கொண்டோடியது
மறைவிடம் தேடி ஓடும் ஆனந்தா
எவ்விடம் போயினும் நீ ஒரு புத்தனே
இன்னும் சில வினாடிகளில்
மரிக்க இருக்கிறான் உன் புத்தன்
அவனுடலெங்கும் சிந்தட்டும் உன் கேவல்கள்
வாரி அள்ளி மடியிலிடு
பெருங்குரலில் வெடித்தழு புத்தா

n

மயக்கு வித்தைக்காரன் பின்செல்லும் சிறுமி

எது உன்னை அவ்விடம் நோக்கி
வசீகரம் கூடிய மாயக்கரங்கள்
வாவென்றழைக்க, கிளம்பிவிட்டாய்
மயக்கு வித்தைக்காரன் பின்செல்லும் சிறுமி நீ
சரளைக்கற்களின் மீது
மேடான மேட்டில்
எதற்கிந்த நடை
வியர்வைப் பெருக்கில் ஆடைகள் நவநவத்து விட்டன
நீ சலித்து ஓயும் ஒவ்வொரு வேளையிலும்
அது தன் வனப்பின் சின்னஞ்சிறு துளியை
உன்மீது தெளிக்கிறது
நீ மறுபடியும் சிறுமியாகிறாய்
வேண்டாம் இவ்வலி என்று சொன்னால்
பாதி தூரம் வந்துவிட்டேனே
எனக் கலங்கும் நண்பா
அரவக்குட்டிகள் பதுங்கிக் கிடக்கும்
காட்டுவழி துவங்குகிறது
நல்லதற்கே சொல்கிறேன்
இப்போதேனும் திரும்பிப் போ

No comments: