Saturday, March 12, 2011

ஈழத்துக் கவிதைகள் - சோலைக்கிளி

சிகப்பு மயில்

வந்து ஏறியவுடன் குட்மோனிங் என்று
புன்னகையைப் பிசைந்து வார்த்தையிலே பூசி
நீ காலை வந்தனம் தெரிவித்த விதம்
அழகு
நான் தெப்பக்குளத்தில் நீந்துவதுமாதிரி இருந்தது
இப்படி எத்தனை பேருக்கு நீ குட்மோனிங்
சொன்னாய்

மாபெரிய இந்த விற்பனைக்கூடத்தில்
முகப்பில்
ஓர் அழகு மயிலைப் படைத்துவைத்து
மழைகேட்டு
ஆடு என்று
சொல்லிய முதலாளி நுணுக்கமுள்ள கலைஞன்
மயில்கள் செய்வதில் ஒரு தோகைத் தச்சன்
இங்கு எத்தனை மயில்கள் பயிர் விளைந்த
சேனைக்குள்

நின்று மேய்வதைப் போல் தீன்பொறுக்கும்
அத்தனைக்குள்ளும் நீ இறக்குமதிசெய்த
அப்பிள் பழங்களினால் செய்த சிகப்பு மயில்
நீ இப்போது யாருக்கோ இன்னுமொரு
புன்னகையை

பசியாறக் கொடுக்கின்றாய்
சொல்
உன் புன்னகையைப் பசியாறி உள்ளே வருகின்ற
ஆண்களெல்லாம் மழையென்றால்
பூவாக
மொட்டாக
வண்ணத்துப்பூச்சியாக
இங்கே வருகின்ற பெண்களெல்லாம்
மின்னல்களோ
தினம்
கடைக்காரன் நிலம் குளிருதோ
ஆயிரம் மின்னல்கள் வெட்டி வெட்டி இங்கே
உடுப்புகள் வாங்கும்
ஆசைதான் அழகுத் துணிமணிகள் என்றாலே
இடுப்பு வாங்கும் கடைக்கும் சில புழுக்கள்
போயாக வேண்டும்.

No comments: