இரண்டு பெண்கள்
முழு அர்த்தத்தில்
நம்மைப் பகிர்ந்தபடி உரையாடிக்கொண்டிருந்தோம்
கண்ணாடி வானம்
நானுமாகி நீயுமாகியிருந்தோம்
நம்மைத் தொந்தரவு செய்யாமல்
மூன்று இரவுப் பறவைகள்
ஒன்றையன்று தொடர்ந்து செல்கின்றன
காற்றை உடைத்து
அளவுக்கு மீறிய அகண்ட சிறகுகளினால் அலையெழுப்பி
உடைந்த காற்றுத் துண்டங்கள்
கண்ணாடியில் பட்டுச் சிதறுகின்றன
தொலையில்
ஏதோ தவிப்புடன் துடித்துக்கொண்டிருந்த ஒற்றை வெள்ளி
அடுத்த வீட்டு நிழல் மூக்குக் கூரைமுகட்டில்
மூக்குத்தியென ஜொலிப்பதைப் பார்த்திருந்தோம்
உனது கூடு நிரம்பித் தேன் வழிந்துகொண்டிருந்த
மாயப்பொழுதைச் சொல்லிச் சிரித்தபடி
நீ ஏக்கமுற்ற பொழுது
மற்றுமொரு பறவை பறந்து செல்கிறது
நான் திகட்டும்வரை உணவூட்டியதில்
நிலா ஓரமாய்ச் சென்று அமர்ந்திருக்கலாம்
ஒவ்வொரு ஓலை மடிப்பிலும்
தன்னை ஒழுகவிட்டிருக்கும்
விசுவாசமான தூய்மையான அதன் ஒளியைப் பூசுகின்றேன்
விரல்களில் விசித்திரமாய் நீ பார்க்கும்
அவ்வொளிச் சாறு
அதிசயமான பானமாகிவிடுகின்றது
நாம் முடிவற்றுப் பருகப் பருக
தாகங்கொண்டு இரண்டு பெண்களை அருந்தும் இவ்விரவு
இதற்குமேல் இல்லையென்ற
அற்புதத்தைச் சுவைத்துவிட்ட திளைப்பில்
சாய்ந்து செல்கின்றது
அந்தமற்ற கண்ணாடி வானம்
நானுமாகி நீயுமாகிக் கிடந்தோம்
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment