Sunday, March 13, 2011

கவிதை அருணாசலம்

துருவேறிய பாத்திரமும் ஒரு முதிர்ந்த கிழவனும்

ஒரு வயது முதிர்ந்தவர் கோடைக்கால நடுப்பகலில்
மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில்
தலைகவிழ்ந்திருக்கிறார்
சோர்வு நிறைந்த அவர் முகத்திலிருந்து
நான் எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை
பரந்த புல்வெளி அருகிலிருக்கும் மந்தைகள்
வெளிர் நிறத்தாலான துருவேறிய பாத்திரம் இவற்றைக்கொண்டு
நான் அவரை மேய்ப்பான் எனக் காண்கிறேன்
குற்றம் நிறைந்த என் விழிகளை அவர் அலட்சியம் செய்கையில்
உதிர்ந்துகிடக்கும் மஞ்சள் கொன்றைப் பூக்களூடே
என் படுகொலைப் பாடல்கள் அவரை நெருங்கிச் செல்கின்றன
என் முகத்திலிருந்து நான் தூர விலகிப்போய்விட்டேன்
எதையும் உறுதிப்படுத்த முடியாமல்
பல ஆண்டுகளின் பின்
நீயும் நானும்
மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில் மீண்டும்
அவரைக் கண்டோம்
அவரைப் பற்றிய ஓர் அழகிய சித்திரத்தை நீ வரையத் தொடங்கினாய்
நான் சில நவீன கவிதைகளை எழுதினேன்
உனது சித்திரம் அவரைப் பைத்தியக்காரராகக் கண்டது
எனது கவிதைகள்
அவரை மந்தை மேய்ப்பான் என்பது போலவே எழுதிச் சென்றது
அமாவாசை இரவொன்றில் உலகின் எல்லாக் கலைஞர்களும்
எமக்குப் பாராட்டுகளையும் பரிசுகளையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்
உன்னதமான கனவின் பொருளை அடைந்துவிட்டதாக
நானும் நீயும் மாறி மாறி முகர்ந்துகொண்டோம்
பின்னொரு நாள்
நானும் நீயும் அவர்களுமாக
மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில்
அவரைக் கண்டோம்
ஒரு கூரிய உலோகத்தால்
அவர் தன் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தார்
காயத்திலிருந்து குருதி பெருகுகிறது
நாம் பேசிக்கொள்கிறோம்
அவரிடமிருந்து தூர இருந்திருக்கிறோம் ஆகவே
நாம் கொலைகாரர்களும் அல்ல துரோகிகளும் அல்ல

வயது முதிர்ந்தவரின் மரணச் சடங்கில்
பல்வேறு முகங்களும் முகர்ந்துகொண்டன.

No comments: