Thursday, March 10, 2011

கவிதைகள் - சல்மா

மாலை நேரக்காற்று
முன்னிற்க
மணநாளில் பவ்யமாய்
விடை பெறுகிறாள்
மணப்பெண்

அவளது பர்தாவுக்குள்
முகம் புதைத்தபடி
மலர்களின் வாசனையோடிணைந்த
புணர்ச்சியைப் போதிக்கிறாள்
தமக்கை.

தானே அறிந்திராத
தடித்த புத்தகத்தின் பக்கங்களை
துரிதகதியில் புரட்டுகிறாள்
எந்த நாளில் புணர்ந்து
கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும்
ஹராமாக்கப்பட்டதெனவும்*
கூடவே
புணர்ச்சிக்குப் பிந்தைய
சுத்த பத்தங்களையும்

தன் குள்ள உருவத்திற்கேற்ற
குற்றக் கண்களில் குறுக்கிடுகிற
வாழ்வின் சுகவீனங்களையும்
நைந்து போன புணர்ச்சியின்
வெற்றுச் சூத்திரங்களையும்
தனக்குள்ளாக ஒளித்தபடி

அவ்வப்போது
வெட்கத்தில் துவண்டு
விழுகிற வார்த்தைகளை
சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையுடன்
துடிப்போடு கடிவாளமிட்டபடி

தன் காதுத் தொங்கட்டானில்
சிக்கி மடங்கிய ஆலோசனைகளை
நீவி எடுத்து

அன்றைய முழு இரவுக்குமாக
படுக்கையில் படர்த்துகிறாள்
புது மணப்பெண்

l

* ஹராம்: தவிர்க்கப்பட வேண்டியது.

மழைக்காலங்களில்
தெருவில் அலையும் சிறுமிகள்
வெண்ணிற மழையையும்

வேனிற் காலங்களில்
வியர்வையை உரித்தெடுத்தபடியே
மஞ்சள் வெயிலையும் உடுத்துகிறார்கள்

தினமும் கருப்பு இரவுகளை உடுத்தி
தெருக்கோடி மூலைகளிடமும்
டூரிங் டாக்கீஸ் மணல் வெளிகளிடமும்
நட்போடு கிசுகிசுக்கிறார்கள்

தம் கட்டற்ற செயல்களால்
பருவங்களை வண்ண உடையாக்கி
காலம் இன்னும் செப்பனிடாத
குட்டி முலைகளின் மீது
உடுத்துகிறார்கள்

பிறகொரு நாளில் மொத்த பருவங்களும்
மொத்த நிறங்களும்
ஒரே நிறமாய் உருப்பெற்று

யோனிக் கிண்ணத்திலிருந்து
உருகி வழிய
அவ்வர்ணத்தை வியந்து சமைகிறார்கள்
சிறுமிகள்

No comments: