Saturday, March 12, 2011

கவிதைகள் இரா. சுந்தரேஸ்வரன்

இன்னுமொருவிதமாய் வானம்

அரிய, கலப்பற்ற, வலுவான
உலோகத்திற்குப் பதிலாக, தினமும்
வெளிர்நிறப் பூக்களைப் பூக்கும் கொடியினைக் கொண்டு
கிரீடம் செய்யச் சொல்பவர்களுக்குப்
பூவையோ ஏன் கிரீடத்தையோகூட
ஆளுக்கு ஒன்றெனக் கொடுத்துவிட வேண்டும்

கிரீடத்தைச் செய்தவரும் அணிபவரும்
அவர் ஒருவரே ஆனாலும்
கிரீடத்தின் நிழலைக் கண்டு கண்கூசுபவர்களிடம்
'கிரீடங்களை மன்னர்தாம் அணிய வேண்டும்'
என்பதைச் சளையாமல் மறுக்கும்போதுதான், அணிந்தால்
கழற்ற முடியாத பிரச்சினையை அது தருகிறது
என்னும் உண்மை அவர்களுக்குப் புரியும்; கண்ணாடியில்,
தலை அல்லது கிரீடம், இதில் ஒன்று மட்டுமே
தெரிகிற பிரச்சினையும் அதைப் புரிந்துகொள்ளும் திறமும்
அவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை

'எல்லோருக்குமான கிரீடம்,
வானம்தான்' என்னும் வசனத்திற்குள்,
'இப்போதுதான் பிறந்த குழந்தைக்கு,
இத்தனை கனமாய்த் தெரியும் கிரீடம் எதற்கு?'
என்கிற கேள்வி மறைந்திருந்தாலும்
வானத்தையும் கிரீடத்தையும் பற்றித்
தங்களுக்குள்ளே விவாதித்துக்கொள்வது
தத்துவவாதிகளின் பணிதானே?

பாலத்தின் தூண்களுக்கிடையேயான தூரம்

கண்ணாடியைப் பார்க்க மறுப்பவனின்
அறியாமையை நீ நம்ப ஆரம்பித்த பிறகு, அது
உன்னைப் பீடித்து, இப்போது பரவிக்கொண்டிருக்கிறது

உன்னிடம் இருப்பது ஒளியா இருளா
என்று தெரியாத நிலையில், அறியாத ஊரின் தெருவில்
நின்று, பகிர்தலைப் பற்றி என்ன சொல்லப்போகிறாய்?

வார்த்தைகளையும் முகங்களையும் விற்பவனின்
உதவியுடன் நீ கவிதை எழுதியபின், எஞ்சியிருக்கும் இரவை, உன்
பிம்பத்தைச் சரிசெய்யச் செலவிடாமல், விண்ணில்
எறிந்துவிட முடிவெடுத்திருக்கிறாய், சரி, சற்று இளைப்பாறு!

ஊற்றுக்கண் அற்ற பிரகாசமான ஒளியை, நேர்ப்படுத்தி,
பிரபஞ்சத்தின் எல்லைவரை கொண்டுசெல்லும் பாலம் அமைக்க
ஒரு தூணாக உன்னை நிறுவிக்கொள்கிறாய்.

No comments: