Friday, March 11, 2011

கவிதை - சத்யன்சிபி

உனக்கும் எனக்குமான வேறுபாடு

கொலைவாளாய்த் துரத்திக்கொண்டேயிருக்கின்றன
உனது கண்கள்
நாளும் மழை பொழியும்பொழுது
நனையாமல் ஒதுங்கிக்கொள்வாய்
நான் நீராய் ஓடியோடி
மடையென மாறி வயலில் நிற்பேன்
உறிஞ்சு நீ சூரியனாய்
என் விரல் பூத்து மணிமணியாய்
விளைவித்துக் கொடுப்பேன்
நீ நடனமாடு
நான் உனக்கு விழா எடுப்பேன்
காலைச் சுற்றிய நாயைப் போல்
நீ உதைக்கிறாய்
நான் உழுகிறேன்
நான் யார், சிற்பி உழவன்
நான் கடவுள்
என்ன செய்வாய் நீ
ஒரு சிற்றெறும்பின் பசிபோக்க
இயலுமா உன்னால்

என்னைச் சாராமல்

நான் நுகரும் நிழலும்
என்னைவிட்டு நடக்கக் கற்றுக்கொண்டது
அகத்தின் வாசலில் என்னைவிட
அதற்கான
பரிமாணங்கள் முக்கியமானவை
என் விரைப்புகளின் ஒளித்தடங்களில்
கரும்புள்ளியாய்க்
காற்று மறைகிறது
சாயல்களின் ஆதரவோடு
இயங்க வேண்டிய அவசியமல்ல
மழைத்துளிக்கு
நீண்ட அலங்கோலமான வார்த்தைகளிடையில்
மெய்மையின் மெய்யறிந்து
மீண்டும் வரும்
என்னிடம்

No comments: