Friday, March 11, 2011

அனார் கவிதை

மருதாணியின் இளவரசி

இரண்டு உள்ளங்கைகளிலும்
மருதோன்றிக் காடுகளை
நீ விரித்துக் காட்டுகிறாய்

உன் விரல்களில் ஊன்றிப்பதிந்த
சிவப்புப் பயத்தம் விதைகளை
குருவிகள் கொத்தி மகிழும் . . .
அதன் கீச்சொலிகள்
உரத்து மோதுகின்ற வேளையில்
திருப்பி . . .
கைகளை மடித்து மூடுகின்றாய்

மருதோன்றிக் கைகளில் மறைந்துள்ள
சாஸ்திரக் குறிகளை
நீ உறங்குகையில் வாசித்தறிகிறேன்

மருதாணிச் சாயமேறிய கைகளில்
ஒளிந்துகொள்ளும் பொருட்டு
துளைகள் உள்ளன

மலைப் பாம்பு . . .
மண்குவியலில் . . . ஓய்வெடுப்பதைப் பார்க்கிறேன்

எறும்புப் புற்றுகள் கட்டிய “மசுக்கொட்டை” மரத்தில்
சிவப்பும் . . . கருநாவலுமாய்க் கனிந்திருக்கிற
மசுக்கொட்டைப் பழங்களை ஆய்கிறேன்

உயரமான கால்களால்
வெட்டுக்கிளிகள் . . .
வலது கைக்கும் . . . இடது கைக்குமாய்த் தாவுகின்றன

ரேகைகள் . . . நீர் சுரந்து
வால் ஆமைக்குஞ்சுகள் தெத்தும்
மூன்று பூச்சந்திக் கரைகளையும்
வெண்குருத்து நகங்களை மூடி
சிவப்புத் தொப்பிகள் போட்ட சிப்பாய்கள்
கண்காணிக்கின்றனர்

இறைவனைத் தொடுவதும் . . .
மருதாணி இடுவதும் . . .
ஒன்றென்கிறாய்

சித்திரப் புதையலைக்
கண்மூடாது . . . காவல் செய்கிறாய்

எப்போதும்
மருதாணிச்சாறு ஊறியிருக்கும்
மருதாணி வரைவோவியங்கள்
உன்னையே மருதாணிச் செடியாகச் செய்கின்றன


பிந்திய நள்ளிரவு
மருதாணி அரைத்துக்கொண்டு வரும்
நிலவும் . . . அவளும் . . .
மருதாணி இட்டுக்கொண்டிருந்தார்கள்.

No comments: