Friday, March 11, 2011

கவிதை தீபச்செல்வன்

சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்

எல்லாம் நமது மண்ணிலிருந்து
துரத்தப்படுகிற நாட்களில்
சுதந்திரம் பெருமனதுடன்
மரணத்தை வழங்கக் காத்திருக்கிறது.
இனவாதம் வடிவமைத்த
போர் நம்மை ஊடுருவி ஆளுகிறது.
வெல்ல முடியாதிருந்து
நமக்கெதிராயிருக்கிற யுத்தம்
ஆட்களற்ற நகரத்தைத் தோற்கடிக்கிறது.

கடலில் குதிக்கிற நகரத்தின்
சொற்பமற்ற எண்ணிக்கையான சனங்களுக்கு
எல்லாம் இத்தோடு முடிந்துபோகிறது.
அகலமான கால்களினால் ஆக்கிரமிக்கிற யுத்தம்
சமாதானத்தைப் பேசுகிறது.

நாம் சொற்ப எண்ணிக்கையானவர்களாக
ஒதுக்கி முடிக்கப்படுகையில்
அழித்து முடிக்கப்படுகிற பயங்கரவாதிகளானோம்.
இனம் பற்றி வளர்த்த பேரெடுப்பு முடிகிற
கடைசி நிமிடத்திற்கென வருகிற
இனவாதப் புன்னகை
மனிதர்களைத் தின்று கொண்டுவருகிற யுத்தமாகி
மனிதாபிமானம் பேசுகிறது.

கடைசியில் நமது சுயநலமும்
நமதினத்தை வாழ்நாள் சிறையிலடைத்தது.
இலங்கை ஈழத்தைக் கடலில் தாட்டி
தமிழர்களைப் புதைத்துக் கொடி ஏற்றுகிறது.
கடலில் இனி பொதிகள் சுமக்க விதிப்பட்டோம்.

நமது வாழ்வுரிமை முழுவதும் பலியிடப்படுகிறது.
துரோகங்கள் பிரித்தாடப்பட்டு
உலகம் பலிவாங்குகிறது.
நமது தேசம் முழுவதும் புதைக்கப்படுகிற
நடவடிக்கையில் நமதாயிருந்த வாழ்வு
பயங்கரவாதம் எனப்படுகிறது.

இனவாதம் சிறைக்குள் இழுத்துக்கொண்டு
கிட்டிய தூரத்தில் விடுவிக்கப்படுகிற
நாம் நிரந்தர அடிமைகளாக்கப்பட
காயமடைந்த உடலிலிருந்து
துண்டு மனம் வெளியேறுகிறது.

இனி எதையும் மனதின் ஆழத்திலும்
தேட முடியாதவர்களாக விதிப்படுகிறது.
ஏற்க முடியாத அரசின்
ஆட்சியின் தாழ்வாரத்தில்
நிலத்திற்கான பெரும் வெறி மழையில் ஒதுங்குகிறோம்.
எல்லாம் இழந்தவர்களாக மாற்றப்படுகிறது.

வரலாறு மறந்தவர்களாக நிர்ப்பந்திக்கப்பட
நமது குழந்தைகள் சொற்ப
எண்ணிக்கை ஆக்கப்பட்டனர்.
இனி நமக்கில்லை வாழுகிற தேசமும்
தொன்மையான பொருட்களும்
மிகவும் பசுமையான சொற்களும்.
எல்லாம் துரத்தப்பட
நமது இனம் பெரிய அகதியாக
அதனுடன் நிலமும் அழிகிறது.

- மே, 2010 ஈழப்படுகொலை முதலாமாண்டின் நினைவாக...

No comments: