Friday, March 11, 2011

கவிதைகள் - லஷ்மி மணிவண்ணன்

ஆண் கடவுளின் சிறுநீர்

மாதவிடாய் நாப்சின் இறுக்கத்தோடு
நடனமாடிய குலுக்கு நடிகையின் தொப்புள்
கண்திரைவிழியில் விரிய
வீரியமான குறி, குளமான நண்பனுக்கு
நடிகைகள் மலங்கழிப்பதைத் தோன்றாமல் செய்ய
யோசனையில் அவன் நடந்து செல்லும்போது
காக்கை எச்சமிட்டார் ஆண் கடவுள்
காக்கை எச்சம்
நடிகை மலங்கழிக்கும் அறையின்
லோஷன் மணமாயிற்று.
திருப்தியோடு லோஷன் மணவறை
நீங்கிய கடவுள்
தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று
மாதவிடாய்ப் புணர்ச்சி ஆதாரப் புத்தகத்தைப்
படித்தவாறு நிமிர்ந்தார்
கேன்வாஸில் குலுக்குத் தொப்புள்
கடவுளுக்கு மலம் முட்டியது.
விளம்பரத்தட்டியின் உயர நடுமத்தியில்
அவர் மற்றொரு காகமென எச்சமிட்டுச்
சென்றதைப் பார்த்த சாத்தான்
சப்தமிட்ட சிரிப்பில்
சிக்னலில் இருசக்கர வாகன விபத்தில்
இருவர் தலை நசுங்கி
மரித்தனர்.
பூணூல் பார்ப்பான்
சகுனம் கரடு முரடாவதைக் காண
கடவுளின் சிறுநீரெனப்
பெருக்கெடுத்தோடியது
மூளை நசுங்கி வெளியேறிய
மாதவிடாய் ரெத்தம்.



வளர்ப்பு மிருகம்

விருப்பக்குறைவோடு தோழமையற்ற
திருட்டுப்பூனை பேராவலுடன் எனக்குள் வளர்கிறது
சூட்சுமமான அதன் புதிர்வழிப்பாதைகள்
விரிவுகொள்ள எனது மார்பெலும்புகள்
அலுமினியப் பாத்திரங்கள் சரிந்துவிழும் சப்த ஒழுங்கோடு
நொறுங்குகின்றன
சட்டைப் பாக்கெட்டிலிருந்து இதயத்தில்
திடுக்கிட்டுக் குதித்து
விழிகளில் மினுங்குகின்றன; அப்போது
பூனை வளர்க்கும் இரு கிழவிகள்
நின்றவாறு மூத்திரம் பெய்து
முற்றத்தில் தொடர் கோலமிடுகிறார்கள்
பறவைக் குஞ்சுகள் நடமாடுமிடங்களில்
இதயம் பூனையின் துடிப்படைகிறது.
வயிற்றுக்குள் முழுசாதுர்யத்தோடு
நுரையீரல் பகுதியிலிருந்து குதிக்கும்போது
பதற்றமுறுகிறேன்
எனது மீனுணவுகளின் சாப்பாட்டு மேஜையாகிறது
வயிறு.
செய்வதறியாது திகைக்கும் எலிகள்
உடலில் பல்வேறு திசைகளுக்கும்
தப்பியோடுகின்றன.
ஆண்குறியை முட்டித் தகர்த்து
வெளியேறுவதிலும்
எலிகளுக்குத் தோல்வி
பேருந்துப் பயணங்களில்
திருட்டுப் பூனையோடு செல்வது
பாதுகாப்பற்றது
ராக்போட் விரைவு ரயிலில் மட்டும் பனிக்குளிரில்
பதுங்கிக்கொள்கிறது அது.
மூன்றாவது குவளை மது அருந்தியபின்
எவரோடும் உறவு மூர்க்கமாகும் சமயம்
அது பயந்தோடும் திசைகளெங்கும்
சருகசைவோடு மனித வெடிகுண்டென
வெடித்துச் சிதறுகிறேன்.
நகரத்தின் வனம்
சருகசைவைப் புதிய கலப்புவிலங்கொன்றின்
செரிக்காத சிறிய ஏப்பமென
கவனமுறும்போது
இறந்த எலிக்கூட்டத்தின் மீது
எனது காலடித் தடங்கள்
முட்பதிந்து செல்கின்றன.



கோழி விளையாட்டு

தவிட்டு நிறக்கோழிக்கு
வண்ணம் தீட்ட இயலும்
பல வண்ணத் தைலப்புட்டிகளை
மேஜையில் வைத்து
வண்ணம் தீட்டும் வேலையைத்
தொடங்க வேண்டும்
புட்டிகளின் வண்ணங்கள் ஏதுமறியாதவை
எந்தப் புட்டியைத் தூரிகை தொட விழைகிறது
என்பதைக் குஞ்சுக்காகம் வாய்பிளந்து
கொண்டிருக்கும் அவை.
தூரிகை முனை ஒரு புட்டியில் நனையும்போது
மீதமுள்ள புட்டிகள் வண்ணம் தீட்டும் வேலையைச்
சுமையின்றி கவனிக்கத் தவறாது.
தைலப்புட்டியைத் தூரிகை தொடுவதற்கு முன்பு
சில யோசனைகள் அவசியம்
ஏனெனில் இரண்டு காரியங்கள்
அப்போது நிகழக் காத்திருக்கின்றன.
ஒன்று: வண்ணத்தைத் தூரிகை தொடுபவனின்
கரத்தின் வழியே அவ்வண்ணம்
ரத்த நாளங்களில் ஊடுருவி
மூளையின் நிறத்தை மாற்றவிருக்கிறது
அப்போது ரத்த அழுத்தம் விரட்டியோடும்
வேட்டை நாயின் இதயத்துடிப்பைத் தொடும் வாய்ப்புண்டு.
மற்றொன்று: தவிட்டு நிறக்கோழி
என்னவாகப் போகிறது
என்பதை அவதானிக்க
தூரிகைக் கரத்தின் அருகாமை இருக்கையைக்
கடவுள் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்.
தேர்ந்தெடுக்கும் முன்னரே
சுவர்க்கடிகாரத்தின் முட்களை
அகற்றி விடுவார் அவர்.

***

வியர்வை துடைத்தகற்றப்பட்ட
காகிதத்தைத் தினுசாகக் கத்தரித்து
தவிட்டு நிறக்கோழிக்கு
வெண்தாடி செய்யலாம்.
மூளைக்கேறிய ரசம் அதில்
பசையேற வேண்டும்.
காகிதப் பிளேட்டுகளை வெட்டி
அணிகலனாகவோ அல்லது
கத்தி போன்ற ஆயுதத்தை வாலாகவோ
கோழிக்குத் தரலாம்.

***

இவற்றையெல்லாம்
வேடிக்கை பார்த்துவிட்டு
உங்கள் யோசனைக்கு ஏற்றவாறு
தவிட்டு நிறக்கோழி சும்மா இருக்குமென்று
சொல்வதற்கில்லை
இடர்ப்பாடு ஏற்படும் பட்சத்தில்
கோழிவால் கத்தியைப் பயன்படுத்தி
தவிட்டு நிறக்கோழியைக் கறிசமைக்கலாம்
கடவுளும் உடனிருப்பதால்
பக்குவமான பங்கொன்றைக்
கடவுளுக்கும் தர வேண்டும்.
மற்றொரு மஞ்சள் பெட்டையோ
செஞ்சேவலோ கிடைக்கும்வரை
தைலப்புட்டிகளையும்
தூரிகையையும்
அவ்வாறு அனுமதிக்க வேண்டும்
ஒருமுறை கோழிக்கு வண்ணம் தீட்டி
முயன்றபிறகு கடவுள் இருக்கையை விட்டு
நகர மாட்டார்.
ஓய்வுப்பொழுதை
சிரத்தை விளையாட்டாகப்
பழக வேண்டும்.
பழக்கம் கைவசமாகிவிட்டால்
கடவுள் கண்காட்சிக்கு
ஏற்பாடு செய்வார்.
கடவுளோடு நேர்த்தி குன்றாத
உடன்பாடு கூடும்.
தவிட்டு நிறக்கோழி கிறிஸ்மஸ் தாத்தாவாகவும்
செஞ்சேவல் மேரி மாதாவாகவும்
மஞ்சள் பெட்டை சேகுவராவாகவும்
கருஞ்சேவல் பாலமுருகனாகவும்
கண்காட்சி.
(நரி, கழுதைப்புலி, குரங்கு, மயில் எலி பிற வடிவங்கள் கற்பனையின் தகுதிக்கேற்ப)
விரும்பினால் சாம்பல் நிறக்கோழியின் மீது
சாக்லெட் கலந்து தைலவண்ணம் பூசி
சூடான கேக் தயாரிக்கலாம்.
கோழி விளையாட்டில்
அடிப்படைவிதி
ஒன்றேயொன்றுதான்
'உடன்பாடு எய்திய பின்னர்
உடன்பாட்டை மீறக் கூடாது'
வேறொன்றுமில்லை.



கொலைத் தொழில்

நான்கு பேரில் எவரேனும் ஒருவர்
கொலை செய்யப்பட வேண்டும்
நான்கு பேருமே உணர்ச்சிவசப்படத்
தேவையில்லை.
முகச் சவரக் கத்தியால் சடங்குகளோடும்
தைல நறுமணத்தாலும் நடைபெற வேண்டிய
நிதானமான கொலை முறை இது.
அவசரப்பட்டு எவரும் என்னைக் கொலை
செய்யுங்களென முந்த வேண்டாம்
முந்துவதால் எதுவும் நிகழப் போவதில்லை
சில சம்பிரதாயங்கள் உள்ளன
சீர்குலைக்கும் உரிமை எவருக்கும்
வழங்கப்படவுமில்லை
முந்துவதும் ஒரு சீர்குலைவாகவே
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அவசரப்பட்டு ஒருவர் தற்கொலை
செய்துகொள்வாரெனில்
மூன்றாகக் குறைந்த எண்ணிக்கை
நான்காகும்வரை இன்றைய தினத்தில்
தேர்வு நிறுத்தி வைக்கப்படும்
தற்கொலை புரிந்தவர் தண்டனைப் பட்டியலில்
சேர்த்துக்கொள்ளப்படுவார்.
நான்கு பேரின் தரப்புக்கும் வாதாட
மொழிப்புலமை கொண்ட ஒருவர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரே உங்கள் தரப்புக்கும்
வாதாடுவார்.
உங்கள் தரப்புக்கு வாதாட அவர் எவ்வளவு
சிரத்தை மேற்கொள்வாரோ
வீட்டுப்பாடங்கள் பயிற்சி செய்வாரோ
அந்தப் பக்குவம்
உங்களைக் குறுக்கு விசாரனை
செய்யும் போதும் பயன்படும்
முதலில் உங்கள் தரப்பு எவ்வளவு
முக்கியத்துவம் நிறைந்தது என்பதை
நம்புவதும் நிறுவுவதும் அவரது வேலை
பின்னர் சந்தேப்படுவதும் குலைப்பதும்கூட
அவரது வேலையே.
குறிப்பாகச் சொல்வதாயின்
உங்கள் நான்கு பேரின் பொறுப்பைப் போலவே
அவருடைய பொறுப்பும்
முக்கியமானது.
உங்களுடைய மருத்துவரை நீங்கள்
நம்புவதுபோல
இதனையும் நீங்கள் நம்ப வேண்டும்
நம்பிக்கைக்குத் தயாராவதற்கு
ஏராளமான பயிற்சி முறைகள்
உள்ளன.
அவற்றில் ஏதேனும் ஒரு முறையை
நீங்கள் பயில வேண்டும்.
ஆற்றுப்படுத்துதல் அவசியமெனில்
உங்கள் தரப்புக்கு சிறப்பு சிபாரிசு
செய்து தரப்படும்.
முடிவில் நான்கு பேரில் ஒருவரை
கொலை செய்யப்படுபவராக தேர்ந்தெடுக்கும் உரிமை
நான்கு பேருக்கும் உரியதுதான்.
அப்படியானால் நொண்டிக் காகத்தைப்பற்றி
என்ன சொல்கிறீர்கள் என்று
அவலட்சணமான கேள்வி எதையும்
முன்வைக்காதீர்கள்.
அது உங்கள் பொறுப்பில் இல்லாதது மட்டுமல்ல
அதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்
உங்களுக்கு நிகரானவை.
உங்கள் விஷயத்தில்
காப்பீட்டு உறுதிமொழிகள் பொய்யொன்றுமில்லை.
நான்கு பேரில் ஒருவரை நீங்கள் தேர்வுசெய்து
விட்டீர்களெனில்
உடனடியாக முகச்சவரக்கத்தியை
எடுத்துவிட இயலாது. தேர்வுக்குப்பின்
அவரது தரப்பினரைப் பிற தரப்பினர்
கொன்றழிக்கும்வரை காத்திருக்க வேண்டும்.
சிறப்பு ஏற்பாடுகள் அவர்களுக்கும் வாய்க்கும்
என்று சொல்வதற்கில்லை
காப்பீட்டு உறுதிமொழிகளும் கொலை நிகழும்
விதத்தை வைத்துக் கைவிடக்கூடும்.
கடைசி நபரை அத்தரப்பு இழந்தபின்
மூன்று பேராகக் குறைந்த
பட்டியலில் மீண்டும் ஒருவர்
அனுமதிக்கப்படுவார்
அவர் எவராகவுமிருக்கலாம்
தேர்வு தொடர்ந்து நடைபெறும்.

No comments: