Friday, March 11, 2011

கவிதைகள் ந. லக்ஷ்மி சாகம்பரி

உயிரின் கடைசித் துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களைப் பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்கூட்டை
என் இருப்பிடமாக்கினாய்

புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக்கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்

உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி தாகம் கூட்டினாய்

உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்

அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலே பெருந்துயராகிப் போனது

உன்னைக்காட்டிலும் போலியானது
என் காதலைக் கொழுத்து வளரவிட்ட
உன்னைப்பற்றியதான என் அனுமானங்கள்

என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்கக்கூடும் . . .

No comments: