Friday, March 11, 2011

கவிதைகள் - நக்கீரன்

உடைந்த முத்தங்களைச் சேகரிக்கும் சிறுமி

கரைமணலில் காலொப்பமிட்டு ஒரு பிரிவு நிகழ்கிறது
உடைந்த முத்தங்களைச் சேகரிக்கும் சிறுமியொருத்தி
எதிர்த் திசையிலிருந்து வருகிறாள்
உன்னுள் வீழ்ந்த எரிமீன்களையெல்லாம்
உடுமீன்களாக எப்படி நீ மாற்றுகிறாய்
அற்புதக் கடலே அற்புதக் கடலே
சேகரித்துக் கடக்கின்ற அச்சிறுமியிடம்
தூய துணுக்கொன்றை வேண்டுகிறேன்
பிஞ்சுவிரல் விரிய உதிர்ந்த முத்தங்களனைத்தும்
திசையெங்கும் சிதறிப் பறக்கின்றன வண்ணத்துப்பூச்சிகளாய்
அவளோ குறுஞ்சிரிப்பொன்றைப் பூக்கச் செய்கிறாள்
மகரந்தத் தடயம் ஏதுமற்ற
இதே போன்றதொரு பூவில்தான் சென்றமரக்கூடும்
இவ்வண்ணத்துப்பூச்சிகளுள் ஒன்று

டினோசரின் பசி

கலைக்களஞ்சியத்திலிருந்து குதித்த டினோசர்
அவனுடன் சற்று தங்கிச் செல்வதாகச் சொன்னது
முதலில் நாளிகைகளை வாசித்த அது
பிறகு தொலைக்காட்சியை முடுக்கிப் பார்த்தது
வெகுநேரம் இணையத்தில் மேய்ந்துவிட்டு
தனக்குப் பசிப்பதாகச் சொன்னபோது
தன் உணவைப் பகிர முன்வந்தான் அவன்
முட்டாளே என்று சீறிய டினோசர்
தனக்கான உணவைத் தானே உண்டுமுடித்து
மீண்டும் கலைக்களஞ்சியத்துள் புகுந்துகொண்டதாக
அதன் அடுத்த பதிப்பில் இப்போது
கூடுதலாக ஒரு விவரம் இணைக்கப்பட்டுள்ளது

No comments: