நடனம்
புதர் நடுச் சிறுவெளி
சாரைப் பாம்புப் பிணையல்
எழுந்தெழுந்து தாழும் தலை
முறுக்கி நெகிழும்
உடல் நிகழ்த்தும் அசைவுகள்
காற்றுத் தாளம்
ஏகாந்த வெளியெங்கும்
நடனம்
திகம்பரக் குளியல்
சிற்றோடை
எம்பி விழுந்து
அருவியாகும் கானகம்
வெயில் வடிக்கும்
இருபுற மர உச்சிகளில்
ஒலிமுகம் காட்டும் பறவைகள்
நீர் தேய்த்த
வழுக்கல் பாறையேறி நின்றேன்
தீராக் குளியல் வெறியில்
திகம்பரனாக்கி
அருவி மூடிற்று
பாறைகளில் உருண்டு
கிளைகளில் தாவி
வானகம் பறந்து
மீண்டும்
அருவிக்குள் இறங்கினேன்
ஒரு கணத்தில்
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
கடந்தது உடல்
பிடி இறுகிக்கொண்டேயிருக்கிறது
அவன் எதுவும் பேசவில்லை
கண்ணீர்த் துளிகள் நிலவொளியில் மினுங்கின
தலைகுனிந்து மண்டியிட்டுப்
பூமாதேவியை வணங்குபவன் போலக்
குப்புறப் படுத்தவன்
என் கால்களைப் பிடித்துக்கொண்டான்
சந்தோசமாகத்தான் இருந்தது
எத்தனை நேரம்
அவன் தன் பிடியை விடுவதாயில்லை
எல்லாக் கோரிக்கைகளையும்
ஏற்பதாகக் கத்திப் பார்த்தேன்
அவன் ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை
எனினும்
பிடி இறுகிக்கொண்டேயிருக்கிறது
கண்ணீரால் நனைந்த பாதங்கள்
வெம்மையில் தவிக்கின்றன
பிரயாசையோடு
உதறி எறிந்துவிட்டு ஓடுகிறேன்
அகற்ற இயலாமல் உடன்
அவன் கைப்பிடி விலங்கு.
Friday, March 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment